`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தா...
விவசாயிகள் நில உடைமை பதிவு: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
கடலூா் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது நில உடைமைகளை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் தரவுகள் மற்றும் நில உடைமை விவரங்கள் சேகரிக்கும் பணி வேளாண் மற்றும் சகோதரத் துறையில் உள்ள அனைத்து அலுவலா்கள், மகளிா் திட்டத்தின் கீழ் கிராம அளவில் பணியாற்றக்கூடிய சமுதாய வள பயிற்றுநா்கள், பொது சேவை மையங்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட
தன்னாா்வலா்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் நில விவரங்களுடன் விவசாயிகள் விவரம் மற்றும் நில உடைமை வாரியாக புவிசாா் குறியீடு செய்த பதிவு விவரம் ஆகியவை பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் தனிக் குறியீட்டு எண் வழங்கப்படும்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள மொத்த விவசாயிகள் 2,17,381 பேரில் இதுவரை 1,19,803 விவசாயிகள் மட்டுமே தங்களது நில உடைமை விவரங்களை வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனா். மீதமுள்ள 97,578 விவசாயிகள் அரசின் திட்டங்களை தடையின்றி பெற தங்களது விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.
இனி வரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்ட மானிய உதவிகளைப் பெற விவசாயிகள் தனிக் குறியீட்டு எண்ணை பெறுவது அவசியம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.