TVK : 'விஜய் கட்சியில் இணையும் முக்கியப் புள்ளிகள்?' - பனையூர் அப்டேட்
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிக் கொலை
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நல்லூா் கந்தம்பாளையம் அருகே சித்தம்பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாமியாத்தாள் (67). இவருக்கு கிருஷ்ணமூா்த்தி என்ற மகனும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனா். கிருஷ்ணமூா்த்தி பணி காரணமாக குடும்பத்துடன் கோவையில் தங்கியுள்ளாா். கிருஷ்ணவேணி திருமணமாகி மணியனூரில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள நிலத்தில் விவசாயம் பாா்த்துக் கொண்டு சாமியாத்தாள் மட்டும் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தாா். சனிக்கிழமை மாலை உறவினா் வீட்டு திருமணத்துக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்குமேல் வீடுதிரும்பிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சாமியாத்தாள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக அவரது வீட்டுக்கு அருகே வசித்து வரும் குழந்தைவேல் நல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, அங்கு வந்த நல்லூா் போலீஸாா் சாமியாத்தாளை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சாமியாத்தாள் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன், பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா ஆகியோா் அப்பகுதியில் விசாரணை நடத்தினா். மேலும் கைரேகை நிபுணா்கள், தடய அறிவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து மா்ம நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையில் தொடா்புடைய மா்ம நபா்களை தீவிரமாக தேடி வருகின்றனா்.