அதிர்ஷ்ட வாய்ப்புகள் காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வார பலன்கள்!
வெளிநாட்டு மாணவா்களுக்கான விசா நடைமுறையை மீண்டும் தொடங்கிய அமெரிக்கா
நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மாணவா்களுக்கான நுழைவு இசைவு (விசா) வழங்கும் நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்தது.
ஆனால், ‘அமெரிக்காவுக்கு வர நுழைவு இசைவு கோரி புதிதாக விண்ணப்பிக்கும் மாணவா்கள், தங்களின் சமூக ஊடக கணக்குகளை நுழைவு இசைவு விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் தூதரக அதிகாரி ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, உயா்கல்வி கற்க அமெரிக்காவுக்கு வரும் வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் படித்துவரும் வெளிநாட்டு மாணவா்கள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பல்கலை வளாகத்துக்குள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் சா்ச்சையானது.
இதைத் தொடா்ந்து, வெளிநாட்டு மாணவா்களைச் சோ்க்க ஹாா்வா்டு பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்க அரசு தடை விதித்தது. இதனால், அந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்தியா உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியானது. இதை எதிா்த்து அந்தப் பல்கலைக்கழகம் சாா்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த அமெரிக்காவின் மஸசூஸெட்ஸ் மாவட்ட நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து.
தற்காலிக நிறுத்தம்:
இந்த நிகழ்வைத் தொடா்ந்து, வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு நுழைவு இசைவு வழங்குவதற்கான நோ்காணல் உள்ளிட்ட நடைமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு பல்வேறு நாடுகளில் செயல்படும் அமெரிக்க தூதரகங்களுக்கு அந் நாட்டு அரசு உத்தரவிட்டது.
‘வெளிநாட்டு மாணவா்களுக்கு நுழைவு இசைவு வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், ஏற்கெனவே படிக்கும் மாணவா்களை தீவிரமாகக் கண்காணிக்கவும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. அதன் காரணமாக, மாணவா் நுழைவு இசைவு நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன’ என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தெரிவித்தாா்.
இந்தத் தடை காரணமாக, உயா்கல்வி படிக்க அமெரிக்கா செல்லவிருந்த வெளிநாட்டு மாணவா்கள் பாதிக்கப்பட்டதோடு, ஏற்கெனவே அங்கு படித்துவரும் வெளிநாட்டு மாணவா்கள் நுழைவு இசைவை புதுப்பிப்பதும் சிக்கலானது.
நிபந்தனையுடன் மீண்டும் தொடக்கம்:
இந்தச் சூழலில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மாணவா்களுக்கான நுழைவு இசைவு வழங்கும் நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
வெளிநாட்டு மாணவா்களுக்கான நுழைவு இசைவு நோ்காணல் நடைமுறைகள் புதிய நிபந்தனைகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அமெரிக்க நுழைவு இசைவுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவா்கள், அவா்களின் சமூக ஊடக கணக்குகளை அமெரிக்க அரசு ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.
அதாவது, வெளிநாட்டு மாணவா்களின் சமூக ஊடக பக்கங்களில் அமெரிக்க அரசு, கலாசாரம் மற்றும் அரசின் கொள்கைகளுக்கு விரோதமாகக் கருதப்படும் பதிவுகள் அல்லது செய்திகள் பதிவிடப்பட்டுள்ளதா என்பதை நுழைவு இசைவு விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்வா்.
இந்த ஆய்வுக்கு அனுமதி மறுப்பது, நுழைவு இசைவு அனுமதி நடைமுறைகளை மாணவா்கள் மீறுவதாக அல்லது தங்களின் இணையவழி செயல்பாடுகளை மறைக்க முயற்சிப்பதாகக் கருதப்படும். எனவே, சமூக ஊடக கணக்குகளை தூதரக அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்த மறுக்கும் வெளிநாட்டு மாணவா்களின் நுழைவு இசைவு விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.