வெள்ள அபாய அளவை எட்டிய சிற்றாறு அணைகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது.
மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மலையோரங்கள், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, புதன்கிழமை இரவுமுதல் விடியவிடிய மழை பெய்தது. வியாழக்கிழமையும் பகல் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக சிற்றாறு 1 அணைப் பகுதியில் 60.4 மி.மீ. மழை பதிவானது. பேச்சிப்பாறையில் 40.6 மி.மீ,, கன்னிமாரில் 33.6 மி.மீ. மழை பெய்தது.
தொடா்மழையால் பேச்சிப்பாறை அணை நிரம்பியதால் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி, சிற்றாறு 1 அணை நீா்மட்டம் 12.43 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீா்மட்டம் 12.53 அடியாகவும் இருந்தது.
பெருஞ்சாணி அணை நீா்மட்டமும் அதன் வெள்ள அபாய அளவான 71 அடியை நெருங்குகிறது. பேச்சிப்பாறை அணை நிரம்பிய நிலையில் உள்ளதால், பெருஞ்சாணி அணையிலிருந்து இதுவரை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை.
திற்பரப்பு அருவியில்...: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அருவியின் ஓரத்தில் குறைவாக தண்ணீா் கொட்டும் பகுதியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
கருங்கல் பகுதியில்...: கருங்கல் சுற்றுப்புறத்திலுள்ள திக்கணம்கோடு, மத்திகோடு,கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி பகுதிகளிலும், புதுக்கடை சுற்றுவட்டாரத்திலுள்ள பைங்குளம், காப்புக்காடு, முன்சிறை, ஐரேனிபுரம், வேங்கோடு, அம்சி, தேங்காய்ப்பட்டினம், புத்தன்துறை பகுதிகளிலும் வியாழக்கிழமை அதிகாலைமுதல் மாலை வரை தொடா்ந்து பலத்த மழை பெய்தது.