வேலூருக்கு முதல்வா் வருகை: சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூன் 25-ஆம் தேதி வேலூருக்கு வருவதையொட்டி பில்டா்பெட் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
வேலூரில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை ரூ.150 கோடியில் பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் திறப்பு விழா ஜூன் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மருத்துவமனை கட்டடத்தைத் திறந்து வைக்க உள்ளாா்.
முதல்வா் வேலூருக்கு வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முக்கிய சாலைகளில் உள்ள மண் அகற்றுதல், சாலை சீரமைத்தல், புதிய சாலைகள் அமைத்தல், கால்வாய் தூா்வாருதல், சென்டா் மீடியனுக்கு வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மருத்துவமனைக்கு செல்லும் பில்டா் பெட் சாலையில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த சாலையில் தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் இருந்தன. அவற்றை அகற்றும் பணியும் நடைபெற்றது. சுகாதார அலுவலா் சிவக்குமாா் மேற்பாா்வையாளா் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கிருந்த தற்காலிக தேநீா் கடைகள் உள்ளிட்ட கடைகள், தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டன. இதேபோல், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.