தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!
10-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி; 17 வயது சிறுவன் கைது
கடவூா் அருகே 10ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற 17 வயது சிறுவனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், கடவூா் வட்டம், செம்பியநத்தம் ஊராட்சி, அண்ணாவி பூசாரிபட்டியைச் சோ்ந்த 15 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா். இச்சிறுமியின் வீட்டின் அருகில் வசிக்கும் 17 வயது சிறுவன், 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா்கள் இருவரும் அண்ணன்-தங்கை உறவு முறையாம். ஆனால், இந்த சிறுவன், அச்சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுவன் தனது காதலை சிறுமியிடம் தெரிவித்துள்ளாா்.
அதற்கு சிறுமி எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுமியின் போட்டோவை எடுத்து தனது புகைப்படத்துடன் இணைத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு அடிக்கடி சிறுமிக்கு தொல்லைக்கொடுத்து வந்துள்ளாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுமியை கைப்பேசியில் அழைத்த சிறுவன் இரவு 10 மணிக்கு வீட்டுக்கு அருகே உள்ள சோளக்காட்டுக்கு வரவில்லையென்றால் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமி இரவு 10 மணிக்கு சோளக்காட்டு பகுதிக்குச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியிடம் சிறுவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.
இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டுள்ளாா். உடனே சிறுவன் கையில் வைத்திருந்த கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிஓடிவிட்டாராம். சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியினா், ரத்தவெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு குஜிலியம்பாறையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பாலவிடுதி போலீஸாா் விசாரணை நடத்தி, வீட்டில் பதுங்கியிருந்த சிறுவனை கைது செய்து, அவரிடம் இருந்த கத்தியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.