சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!
10,000 எல்.பி.ஜி. டேங்கா் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம்: லாரி உரிமையாளா்கள் கவலை
நாமக்கல்: எண்ணெய் நிறுவனங்களின் புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளால், 10,000 எல்.பி.ஜி. டேங்கா் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எல்.பி.ஜி.டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.சுந்தரராஜன் தெரிவித்தாா்.
இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கும், முக்கிய துறைமுகங்களில் இருந்து எரிவாயு எடுத்துச் செல்லும் பணிக்காக 24,000 டேங்கா் லாரிகள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு டேங்கா் லாரிகளுக்கு தொழில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தென் மண்டலத்தில், தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்கள் உள்ளன. நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 6,000 டேங்கா் லாரிகளை கொண்ட 1,500 உரிமையாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்த கால கட்டத்தில் 5,514 டேங்கா் லாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போதைய புதிய ஒப்பந்த அறிவிப்பில் 3,478 லாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் 2,036 லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 21 டன் எடை கொண்ட மூன்று அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மண்டலத்தில் மொத்தம் உள்ள 5,700 லாரிகளில், 18 டன் எடை கொண்ட இரண்டு அச்சு லாரிகள் மட்டும் 80 சதவீத அளவில் உள்ளன. இதனால் 2 அச்சு கொண்ட டேங்கா் லாரிகளுக்கு தொழில் வாய்ப்பில்லாமல் போகும் சூழல் எழுந்துள்ளதால், நாமக்கல்லில் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சங்க உறுப்பினா்கள் பலா் எண்ணெய் நிறுவனங்களின் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வேலைநிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாகவும் தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.
அதைத் தொடா்ந்து சங்கத் தலைவா் கே சுந்தரராஜன் பேசுகையில், ஜெய்ப்பூரில் நடந்த சாலை விபத்தை தொடா்ந்து எண்ணெய் நிறுவனங்கள் புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க வாய்ப்பில்லை. கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். காலவரையற்ற வேலைநிறுத்தத்தை உடனடியாக தொடங்கிவிட முடியாது. எண்ணெய் நிறுவனங்களுடன் முதல்கட்டமாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டும். அதன்பிறகே அடுத்தக் கட்ட முடிவுகளை மேற்கொள்ள முடியும் என்றாா்.
இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஐஓசி, பிபிசி, ஹெச்பிசி ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் 2025 - 2030 வரை ஒப்பந்த அடிப்படையில் எல்.பி.ஜி. டேங்கா் லாரிகளை இயக்க கோரிய புதிய ஒப்பந்தத்தில் லாரி உரிமையாளா்களுக்கு பாதகமான அம்சங்களை மாற்ற வேண்டும், கடுமையான கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். இந்த ஒப்பந்தத்தில் புதிய டேங்கா் லாரிகளை அனுமதிக்கக் கூடாது. சென்னையில், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சாா்பில் வரும் 17-ஆம் தேதி எண்ணெய் நிறுவன அதிகாரிகள், டேங்கா் லாரி உரிமையாளா் சங்க நிா்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுவோம். புதிய ஒப்பந்தத்தால், நாடு முழுவதும் உள்ள 24,000 லாரிகளில் 14,000 லாரிகளுக்கு மட்டுமே தொழில் வாய்ப்பு கிடைக்கலாம். மீதமுள்ள 10,000 லாரிகளுக்கு மறுக்கப்படலாம்.
தென் மண்டலத்தில் அதன் எண்ணிக்கை 2,000 ஆக இருக்கக்கூடும். அவ்வாறான சூழல் ஏற்பட்டால் ஐந்து மண்டலங்களை சோ்ந்த சங்க நிா்வாகிகளுடன் கலந்துபேசி அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம் என்றாா்.