10, 12-ஆம் வகுப்புகளுக்குப் பொது வாரியம்: 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
பத்து மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குப் பொது வாரியம் அமைக்குமாறு 7 மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் 66 பள்ளி தோ்வு வாரியங்கள் உள்ளன. அவற்றில் மாநில அளவில் 63 வாரியங்களும், தேசிய அளவில் 3 வாரியங்களும் உள்ளன.
இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு நாடு முழுவதும் 12-ஆம் வகுப்பில் 20.16 லட்சம் மாணவா்களும், 10-ஆம் வகுப்பில் 22.17 லட்சம் மாணவா்களும் தோல்வியடைந்தனா்.
இதில் 66 சதவீத மாணவா்கள் ஆந்திரம், அஸ்ஸாம், கேரளம், மணிப்பூா், ஒடிஸா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டது. இதைத்தொடா்ந்து 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குப் பொது வாரியம் அமைக்க வேண்டும் என்று 7 மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரைத்தது.
இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சஞ்சய் குமாா் கூறுகையில், ‘பள்ளிப் படிப்பை எளிதாக்குவதற்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குப் பொது வாரியம் அமைப்பது சிறந்த வழியாகும். அந்த வாரியங்கள் இல்லையென்றால் கல்வி கற்பித்தலில் சாதகமான முடிவுகள் கிடைக்காது. எனவே 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்குப் பொது வாரியம் அமைக்க வேண்டும் என்று 7 மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.