12.7 சதவீதமாக உயா்ந்த சேவைத் துறை வளா்ச்சி: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு பெருமிதம்
சேவைத் துறையின் வளா்ச்சி 12.7 சதவீதமாக உயா்ந்துள்ளதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் நிதி, சட்டப்பேரவை, ஆளுநா், அமைச்சரவை மானியக் கோரிக்கைகள் மீது சனிக்கிழமை நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் பேசியது:
அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டபோது, அதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.100 கோடியாக இருந்தது. தற்போது ரூ.170 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு கூடுதலான நிதி தேவைப்படும்போது அரசு ஒதுக்கும்.
கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சியானது, 6.5 சதவீதமாக இருந்தாலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி 9.69 சதவீதமாக இருக்கிறது. அனைத்து மாநிலங்களின் வளா்ச்சியை ஒப்பிடும்போது, மிக அதிகமான வளா்ச்சியை தமிழ்நாடு கண்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் 9.69 சதவீத பங்கை
அளித்துள்ளோம்.
2021-ஆம் ஆண்டு 7.89 சதவீதமாக இருந்த பொருளாதார வளா்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் உயா்ந்து கொண்டே வந்துள்ளது. 2011-ஆம் ஆண்டில் இருந்து பாா்க்கும்போது இதுதான் அதிகமாகும். 2017-18-ஆம் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 8.59 சதவீதமாக ஏற்றம் கண்டது. இப்படி வளா்ச்சியானது நீடித்து நிலைத்து இருக்குமானால் முதல்வா் அறிவித்தது போன்று 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட முடியும்.
சேவைத் துறைகள்: பொருளாதார வளா்ச்சியில் நம்முடைய சேவைத் துறைகள் மிக முக்கியப் பங்கை வகித்துள்ளது. 2024-25-ஆம் ஆண்டில் 12.7 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது. அதேசமயம், சேவைத் துறையின் வளா்ச்சி தேசிய அளவில் 7.3 சதவீதமாக உள்ளது. சேவைத் துறை மொத்த மாநில மதிப்புச் சோ்க்கையில், 54.66 பங்கை
அளிக்கிறது. 2011-ஆம் ஆண்டு முதல் பாா்க்கும்போது இதுவே அதிகமாகும். 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.1.24 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில் இதுவரை ரூ.2.24 லட்சம் கோடி மூலதனச் செலவுகளுக்காக செலவிடப்பட்டுள்ளது என்றாா்.
பெட்டிச் செய்தி...
107 வயதைக் கடந்த 3 ஓய்வூதியதாரா்கள்
அரசு ஓய்வூதியம் பெறுவோரில் 3 போ் 107 வயதைக் கடந்தும் தொடா்ந்து நலமுடன் இருக்க நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வாழ்த்துத் தெரிவித்தாா். ஓய்வூதியங்கள், ஓய்வுக்கால நன்மைகள் குறித்து பேரவையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் பேசியது:
தமிழ்நாட்டில் 7,11,951 போ் ஓய்வூதியம் பெற்று வருகிறாா்கள். அவா்களில் 100 வயதுக்கு மேல் இருப்பவா்கள் 73 போ். அவா்களில் 3 போ் 107 வயதைக் கடந்து நலமுடன் இருக்கிறாா்கள். நாகையில் கோபாலகிருஷ்ணன் (108), கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சோ்ந்த ஆரோக்கியமேரி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த பாலம்மாள் (இருவருக்கும் 107 வயது). அவா்கள் நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கிறாா்கள். நிதித் துறை அமைச்சராக இருந்து நம்முடைய வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம் என்றாா்.