கல்யாணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் - பின்னணி இதுதான்
``உயிரோடு இருக்கும் போதே எனக்கும், மனைவிக்கும் கட்டிய கல்லறை.." -ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் உருக்கம்
கர்நாடகாவில் ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் ஒருவர் தான் உயிரோடு இருக்கும்போதே தனக்கும், தனது மனைவிக்கும் கல்லறை கட்டியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் மைசூரு அருகில் இருக்கும் வலகெரே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புத்தஸ்வாமி .
88 வயதாகும் இவர், கர்நாடகாவில் அரசு பொறியாளராக 1998-ம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வு பெற்றார். அவர் இப்போது சொந்த ஊரில் தனது 77 வயது மனைவியோடு வசித்து வருகிறார்.
ஏழை குடும்பத்தில் பிறந்த புத்தஸ்வாமி கஷ்டப்பட்டு படித்து பொறியாளராக மாறி அரசு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

தற்போது திடீரென தனது சொந்த கிராமத்தில் தனக்கும், தனது மனைவிக்கும் சேர்த்து கல்லறை ஒன்றை கட்டி இருக்கிறார். 6 அடி ஆழத்தில் 3 அடி அகலத்தில் கட்டி கிரானைட் போட்டு மூடி வைத்திருக்கிறார். உள்ளே மணல்போட்டு நிரப்பி இருக்கிறார்.
இது குறித்து புத்தஸ்வாமி கூறுகையில், ''நான் மைசூரில் பி.இ முடித்தவுடன் அரசு வேலை கிடைத்தது. மங்களூரு, மைசூர், பெங்களூரு என மாநிலம் முழுவதும் பல துறைகளில் பணியாற்றி இருக்கிறேன். நான் படிக்கும் போதும், வேலை செய்யும்போதும் காந்தி, அம்பேத்கர், புத்தரால் மிகவும் கவரப்பட்டேன்.
எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏழைகள் என்பதால் நான் பூர்வீக சொத்தில் எனது பங்கு கேட்கவில்லை. ஆனால் அவர்கள் கொடுத்த 4 ஆயிரம் சதுர அடி நிலத்தில் எனக்காகவும், எனது மனைவிக்காகவும் கல்லறை கட்டி இருக்கிறேன். நான் வேலைக்காக மாநிலம் முழுவதும் செல்வேன். எனவே எனது மனைவிதான் எனது குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்கினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இக்கல்லறை கட்டும் ஐடியா உதயமானது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் இதற்கான வேலையைத் தொடங்கினேன். இதற்காக எனது உறவினர்களும் பணம் கொடுத்தனர். அதனால் எவ்வளவு தொகையில் இது கட்டப்பட்டது என்று தெரியவில்லை. கல்லறையில் புத்தா, பசவன்னா, காந்தி, அம்பேத்கர் சிலைகள் தலா 4 அடியில் வைக்கப்பட்டுள்ளது.
கல்லறைக்கு சூரிய கோயில் என்று பெயர் வைத்திருகிறேன். கிராம மக்களை ஊக்குவிக்கவே இதனை கட்டினேன். தனக்கு பில்லிசூனியத்தில் நம்பிக்கை இல்லை. அனைத்திற்கும் சூரியன் மூலமாக இருப்பதால், நான் அந்த கோயிலுக்கு சூரியன் பெயரை வைத்தேன்'' என்றார்.
புத்தஸ்வாமிக்கு 4 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். 4 மகள்களும் டாக்டருக்கு படித்துள்ளனர். மகன் எஞ்சினியரிங் படித்து விட்டு அமெரிக்காவில் இருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
