சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை
ரிக்கல்டான், சூர்யகுமார் அரைசதம் விளாசல்; லக்னௌவுக்கு 216 ரன்கள் இலக்கு!
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள்... ஆனாலும் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா!
ரிக்கல்டான், சூர்யகுமார் அரைசதம் விளாசல்
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டான் களமிறங்கினர். கடந்த இரண்டு போட்டிகளில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ரிக்கல்டான் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். ரிக்கல்டான் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.
அதிரடியாக விளையாடிய ரிக்கல்டான் 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். வில் ஜாக்ஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் களமிறங்கியது முதலே அதிரடியில் மிரட்டினார். அதிரடியாக விளையாடிய அவர் 28 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். திலக் வர்மா 6 ரன்களிலும், கேப்டன் ஹார்திக் பாண்டியா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய நமன் திர் 25 ரன்களும், கார்பின் போஸ்ச் 20 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது எப்படி? டேனியல் வெட்டோரி பதில்!
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.