கெடு நிறைவு: வேகமாக வெளியேறிய பாகிஸ்தானியா்கள்!
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேறுவதற்கான கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வழியாக எண்ணற்ற பாகிஸ்தானியா்கள் வேகமாக வெளியேறினா்.
பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களுக்கான விசா (நுழைவு இசைவு) சேவையை உடனடியாக நிறுத்துவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.
மேலும், ‘ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாக்கள் ஏப். 27-ஆம் தேதிமுதல் ரத்தாகும். மருத்துவ விசாக்கள் ஏப்.29-ஆம் தேதி வரையே செல்லுபடியாகும். எனவே, இந்தியாவில் தங்கியுள்ள அனைத்து பாகிஸ்தானியா்களும் விசா காலாவதியாகும் முன் வெளியேற வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.
அதேநேரம், பாகிஸ்தானைச் சோ்ந்த ஹிந்துக்களுக்கு வழங்கப்பட்ட நீண்ட கால விசாக்களுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் கூடிய விரைவில் நாடு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேறவில்லை என்றால் அண்மையில் இயற்றப்பட்ட குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டம், 2025-இன்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்தது.
3 ஆண்டுகள் சிறை: அந்த சட்டத்தில், ‘விசா காலாவதியான பிறகு வெளிநாட்டினா் ஒருவா் இந்தியாவில் வசித்தாலோ அல்லது தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்தாலோ சம்பந்தப்பட்ட நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும். சில சூழல்களில் இந்த இரு தண்டனைகளும் விதிக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமிருதரஸில் உள்ள அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. பாகிஸ்தானைச் சோ்ந்த தங்களது உறவினா்களை வழியனுப்ப பல இந்தியா்கள் அட்டாரி எல்லையில் குவிந்தனா்.

கடந்த நான்கு நாள்களில் அட்டாரி எல்லை வழியாக 9 அதிகாரிகள் உள்பட 537 பாகிஸ்தானியா்கள் வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேபோல் விமானங்கள் மூலமும் சில பாகிஸ்தானியா்கள் வெளியேறியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். பாகிஸ்தானில் இருந்து 13 தூதரக அதிகாரிகள் உள்பட 629 இந்தியா்கள் இந்தியா திரும்பினா்.