பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபா் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபா் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தாா்.
பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் பேசியபோது கண்டனத்தை பதிவுசெய்த அவா் பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்திய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.
பிரதமா் மோடியுடன் ஈரான் அதிபா் மசூத் பெஷெஷ்கியன் பேசியது குறித்து தில்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய மனிதநேயமற்ற தாக்குதல் கண்டனத்துக்குரியது.
பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உணா்த்துகின்றன.
அமைதி மற்றும் ஒற்றுமையின் தூதா்களாக விளங்கிய மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு போன்ற தலைவா்கள் மீதும் இந்திய நாட்டின் மீதும் ஈரான் பெரும் மரியாதைகொண்டுள்ளது.
ஈரான், இந்தியா மற்றும் ரஷியா நாடுகளை இணைப்பதில் வா்த்தக ரீதியாக சபாஹா் துறைமுகம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்தியா-ஈரான் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஈரானுக்கு பிரதமா் மோடி வர வேண்டும். அவருடன் பல்வேறு துறைகளில் உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க ஆா்வமாக உள்ளேன் என மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டது.
ஈரானுக்கு ஆதரவு: பிரதமா் மோடி
பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்திய ஒன்றிணைப்பை வலியுறுத்திய மசூத் பெஷெஷ்கியனானின் கருத்தை ஒப்புக்கொள்வதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.
மேலும், அவா் மசூத் பெஷெஷ்கியனானிடம் பேசியது குறித்து தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஈரானின் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. அமெரிக்கா உள்பட வேறு சில நாடுகளுடன் ஈரானுக்கு நிலவும் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும்.
ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து கவலையளிக்கிறது. இந்த விபத்தில் இருந்து ஈரான் மீள தேவையான உதவிகளை மேற்கொள்ள இந்தியா தயாராகவுள்ளது. ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் உடல்நிலை சீராகவுள்ளது என நம்புகிறேன். வளா்ச்சிப் பாதையை நோக்கிய ஈரானின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்’ என தெரிவிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா அஞ்சலி: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் புகைப்படங்களை வைத்து தென் ஆப்பிரிக்க மக்கள், இந்திய வம்சாவளியினா் தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் முன் அஞ்சலி செலுத்தினா். உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த அவா்கள், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனா்.