Doctor Vikatan: பொது இடங்களில் பெரிதாக வெளிப்படும் ஏப்பம்; குணப்படுத்த நிரந்தர தீர்வு உண்டா?
Doctor Vikatan: நான் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறேன். எனக்கு அடிக்கடி ஏப்பம் விடும் வழக்கம் இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் அது பெரிய சத்தத்துடன் ஏப்பமாக வெளியேறும். இதனால் மாணவர்கள் மத்தியில் தர்மசங்கடமாக உணர்கிறேன்.
இந்தப் பிரச்னைக்கு பயந்து பல நாள்கள் சாப்பிடுவதையே தவிர்க்கிறேன். அடிக்கடி சோடா குடிக்கிறேன். அது உண்மையிலேயே பலன் தரக்கூடியதா அல்லது மூட நம்பிக்கையா என்றும் தெரியவில்லை. ஏப்பம் என்கிற பிரச்னைக்கு என்ன காரணம்.. அதை நிரந்தரமாக குணப்படுத்த சிகிச்சைகள் உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணி

வயிற்றுப்பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் இரைப்பை பகுதியில் சிறிது காற்று இருப்பது தெரியும். அதேபோல சிறுகுடலிலும் சிறிது காற்று இருக்கும். பேசும்போதும், தண்ணீர் குடிக்கும்போது நாம் காற்றை விழுங்குவோம்.
சாப்பிடும்போது பேசுவது, இடையிடையே தண்ணீர் குடிப்பது, டி.வியோ செல்போனோ பார்த்துக்கொண்டு சாப்பிடுவது, வேகவேகமாக விழுங்குவது போன்ற பழக்கம் உள்ளவர்கள், தேவைக்கு அதிகமாக காற்றை உள்ளே தள்ளுகிறார்கள்.
காரமான அல்லது ஒவ்வாத உணவைச் சாப்பிட்டு இவர்களுக்கு கேஸ்ட்ரைட்டிஸ் (Gastritis) எனப்படும் இரைப்பை அழற்சி வந்திருந்தால், வயிறு இலகுவாக விரிந்துகொடுக்கும் தன்மையை இழந்து டைட்டாகிவிடும். அப்படி டைட்டான ஒன்றை ரிலீஸ் செய்தால்தான் திருப்தி ஏற்படும்.

கேஸ்ட்ரைட்டிஸ் பிரச்னை இருக்கும்போது உடனே சோடாவை குடித்து காற்றை வெளியேற்றுவதாக நினைக்கிறோம். அதாவது அந்தக் காற்றானது ஏப்பமாக வெளியேறும்போது மூளையில் ஒருவித திருப்தி உணர்வு பதிவாகிறது.
அதை மூளை பிடித்துக்கொள்கிறது. உதாரணத்துக்கு, அலர்ஜி வந்து ஓரிடத்தை சொரியும்போது அதனால் ஏற்படுகிற சுக உணர்வால், அந்த இடம் புண்ணானாலும் மீண்டும் மீண்டும் சொரிந்துகொண்டிருப்பதைப் போன்றதுதான் இது.
என்றோ ஒருநாள் நமக்கு திருப்தியைக் கொடுத்த ஏப்பத்தை நாம் விடாமல் தக்கவைத்துக்கொள்கிறோம். ஏரோஃபேஜியா (Aerophagia) என்றொரு வார்த்தை உண்டு. ஏர் என்றால் காற்று... ஃபேஜியா என்றால் விழுங்குவது. அதாவது தன்னையும் அறியாமல் காற்றை விழுங்குவார்கள். சிகிச்சையின் ஒரு பகுதியாக அதை அவர்களுக்கு வீடியோ எடுத்துக் காட்டுவோம். பிரத்யேக மாத்திரைகள் கொடுத்து இரைப்பையின் அழுத்தத்தைக் குறைக்கலாம்.

உணவுக்குழாயில் காற்றை வைத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் ஏப்பமாக வெளியேற்றுவோரும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஸ்பீச் தெரபி, உணவை எப்படி விழுங்க வேண்டும் என்பதற்கான பயிற்சி போன்றவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கும்.
சோடா குடிப்பதை மூட நம்பிக்கை என்று சொல்வதைவிடவும், 'முள்ளை முள்ளால் எடுப்பது போன்றது' என்று சொல்லலாம். ஏற்கெனவே உள்ளே இருக்கும் காற்றை சோடாவில் உள்ள இன்னும் சிறிது காற்றையும் கொடுத்து, இரண்டும் சேர்ந்து அது ஏப்பமாக வெளியேறும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.