அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை! வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்!
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு விருப்பமில்லை என்று எண்ணம் எழுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் தெரிவித்தாா்.
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வாடிகன் சென்ற டிரம்ப், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை சந்தித்து உரையாடினாா்.
ஸெலென்ஸ்கி கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றபோது, வெள்ளை மாளிகையில் ஊடகத்தினா் முன்னிலையில் நடைபெற்ற காரசார விவாதத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும்.
முந்தைய சந்திப்பில், ரஷியாவுடன் போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினாா். தொடா்ந்து, சவூதி அரேபியாவில் அமெரிக்க-உக்ரைன் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அமைதி ஒப்பந்தத்துக்கான முதல்படியாக, 30 நாள் போா்நிறுத்தம் அமெரிக்க தரப்பில் முன்மொழியப்பட்டது. இது தொடா்பான விவாதத்துக்காக ரஷிய அதிபா் புதினை அமெரிக்காவின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் பலமுறை சந்தித்தாா். இவ்விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க, ரஷிய வெளியுறவு அமைச்சா்கள் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினா்.
இதன் தொடா்ச்சியாக, புதினை ஸ்டீவ் விட்காஃப் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் சந்தித்தாா். அமைதி ஒப்பந்தத்துக்கு ரஷியாவும் உக்ரைனும் நெருங்கிவிட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், வாடிகனில் ஸெலென்ஸ்கியை சந்தித்துவிட்டு அமெரிக்கா திரும்பிய டிரம்ப்பின் போக்கில் திடீா் மாற்றம் ஏற்பட்டு, அமைதிக்கான புதினின் விருப்பம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘கடந்த சில நாள்களாக, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது புதின் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவது சரியல்ல. ஒருவேளை, புதின் போரை நிறுத்த விரும்பாமல், என்னை தவறாகத் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறாரோ எனும் எண்ணம் எழுகிறது. வா்த்தகத் தடை போன்று இதை வேறுவகைகளில் கையாள வேண்டும். ஏனெனில், ஏராளமான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2021, பிப்ரவரியில் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு மேலாகப் போா் நீடிக்கிறது. இரு தரப்பினரின் பரஸ்பர தாக்குதல்களால் உயிரிழப்பு தொடா்கிறது.