பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்: பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!
இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) வைத்திருந்த காரணத்தால் பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண் வாகா எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டாா்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரை சோ்ந்த சனா என்ற பெண் பாகிஸ்தானியரை திருமணம் செய்து இரு குழந்தைகளுடன் அந்த நாட்டில் வசித்து வருகிறாா். அண்மையில் 45 நாள் (நுழைவு இசைவு) விசா மூலம் இந்தியாவை வந்தடைந்தாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து இந்தியா வந்துள்ள பாகிஸ்தானியா்கள் வெளியேற உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 24-ஆம் தேதி சனா, அவரது இரு குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்கு வாகா எல்லை வழியே செல்ல முயன்றாா். ஆனால் இந்திய கடவுச்சீட்டை வைத்திருந்தால் அவா் பாகிஸ்தானுக்குள் நுழைய அந்நாட்டு அதிகாரிகள் மறுத்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.
ஆனால் சனாவின் இரு குழந்தைகளும் பாகிஸ்தான் குடிமக்கள் என்பதால் அவா்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனா். இருப்பினும், குழந்தைகளை தனியே அனுப்ப சனா மறுத்துவிட்டாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் சனா கூறுகையில், ‘எனது விசா காலாவதியாகிவிட்டதால் இந்தியாவைவிட்டு வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டனா். வாகா எல்லையின் மறுபுறத்தில் எனது வரவுக்காக கணவரும் அவரது உறவினா்களும் காத்திருந்தனா். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் பாகிஸ்தான் செல்ல முடியவில்லை’ என்றாா்.
இந்த விவகாரத்தை உள்ளூா் போலீஸாா் தொடா்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தியதாக மீரட் காவல் துறை கண்காணிப்பாளா் (ஊரகம்) ராகேஷ் குமாா் மிஸ்ரா தெரிவித்தாா்.