கலப்பின கஞ்சா பறிமுதல்; கேரளாவில் `தல்லுமாலா' திரைப்பட இயக்குநர் உள்பட மூவர் கைது!
'அனுரக கரிக்கின்வெல்லம்', 'உண்டா' மற்றும் 'தல்லுமாலா' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் காலித் ரஹ்மான். அவரது சமீபத்திய படமான 'ஆலப்புழா ஜிம்கானா' தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கலால் துறையினர் சோதனை நடத்தினர்.
அதில், ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு குடியிருப்பில், இயக்குநர் காலித் ரஹ்மான், 'தமாஷா', 'பீமண்டே வாழி' படங்களுக்கு பெயர் பெற்ற மற்றொரு திரைப்பட இயக்குனர் அஷ்ரஃப் ஹம்சா, இயக்குனர்களின் நண்பர் ஷாலிஃப் முஹம்மது ஆகியோர் கஞ்சாவை பயன்படுத்த தயாரான நிலையில் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக பேசிய கலால் துறை அதிகாரி, ``ஒரு திரைப்படம் தொடர்பான விவாதங்களுக்காக கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மூவரை கைது செய்து, கலப்பின கஞ்சாவை பறிமுதல் செய்தோம்.
அவர்கள் மீது, போதை மருந்துகள் மற்றும் மனநோய்க்கு ஆளான பொருட்கள் (NDPS) சட்டம், 1985-ன் பிரிவுகள் 20(b) (II) A மற்றும் 29-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள். அவர்களிடமிருந்து 1.5 கிராம் கஞ்சா மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதால், மூவரும் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் கலப்பின கஞ்சா எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
மலையாளத் திரைப்படத் துறையில் போதைப்பொருள் விவகாரம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில், மலையாளத் திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்கது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
