சிறகடிக்க ஆசை தொடருக்கு பெருகும் வரவேற்பு! இந்த வார டிஆர்பியில் அதிரடி மாற்றம்!
1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்ட வழக்கு: ஏப்ரலில் உச்சநீதிமன்றம் விசாரணை
புது தில்லி: 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஏப்ரல் மாதம் விசாரிக்க உள்ளது.
கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதத்தின் வழிபாட்டுத் தலமாக மாற்றவும் அச்சட்டம் தடை விதிக்கிறது.
அத்துடன் அந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதத்தின் வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது தொடா்பாக எந்தவொரு நீதிமன்றத்திலும் புதிதாக வழக்கு தொடுக்கவும் அச்சட்டம் தடை விதிக்கிறது.
சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் மனுக்கள்: இந்தச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய உள்பட பலா் மனு தாக்கல் செய்துள்ளனா்.
மசூதிகள் சா்ச்சை: உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி, ஷாஹி ஈத்கா மசூதி, ஷாஹி ஜாமா மசூதி உள்பட 10 மசூதிகள் கோயில்களை இடித்து கட்டப்பட்டதாகவும், இஸ்லாமிய மன்னா்கள் கட்டிய அந்த மசூதிகளில் ஆய்வு மேற்கொண்டு அவற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் பல்வேறு நீதிமன்றங்களில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுக்கள் மீது எந்தவொரு நீதிமன்றமும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது என்று கடந்த டிச.12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பின்னா், 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தக் கோரி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, சமாஜவாதி கட்சி எம்.பி. இக்ரா செளதரி, காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு தரப்பினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
‘மனுக்களை தாக்கல் செய்யவும் வரம்புள்ளது’: இந்த விவகாரத்தில் புதிய மனு ஒன்றை விசாரிப்பது தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் திங்கள்கிழமை முறையிட்டாா். அப்போது 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடா்பாக, புதிதாக பல இடைநிலை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மனுக்களை தாக்கல் செய்யவும் ஒரு வரம்புள்ளது என்று தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து எந்தெந்த புதிய மனுக்களுக்கு சம்பந்தப்பட்டவா்கள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லையோ, அந்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
மேலும் இந்த வழக்கில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் வாரத்துக்கு பட்டியலிட்ட நீதிபதிகள், மனுக்களை 3 நீதிபதிகள் அமா்வு விசாரிக்கும் என்று தெரிவித்தனா்.