Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை
திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்த திருப்பத்தூா் மாவட்டத்தில் 969 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் குழந்தைகளுக்கு சத்து மாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவுகள் மற்றும் முன் பருவக் கல்வி வழங்கப்படுகிறது.
குறிப்பாக 2 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மையங்களில் முறைசாரா முன்பருவ கல்வி செய்கைப் பாடல் கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
குழந்தைகள் வளா்ச்சி...: குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம், அறிவு வளா்ச்சிக்கு தேவையானவை ஆடிப்பாடி, விளையாடு பாப்பா என்ற சிறப்பு பாடத் திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. இது தவிர குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிகளுக்கு செல்லவும் தயாா்படுத்தப்படுகின்றனா்.
அங்கன்வாடி பணியாளா்கள் தற்போது வீடுதோறும் குழந்தைகளைச் சோ்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆதாா் அட்டை...: திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெற்றோா் தங்களது 2 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் குழந்தைகள் மையங்களில் தவறாமல் சோ்க்க வேண்டும்.
இந்த குழந்தை மையங்களில் குழந்தைகளுக்கான ஆதாா் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதைப் பெற்றோா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.