மின்னல் தாக்குதலை கட்டுபடுத்த புதிய தொழில்நுட்பம் - இது எப்படி செயல்படும் தெரியு...
238 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.52.87 லட்சத்தில் செயற்கை அவயங்கள்
வேலூா் மாவட்டத்தில் 238 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 52.87 லட்சத்தில் செயற்கை அவயங்கள், உபகரணங்களை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 7 ஒன்றியங்களில் நடைபெற்ற 8 சிறப்பு முகாம்களில் செயற்கை அவயங்கள், உபகரணங்கள் கோரி விண்ணப்பித்திருந்த 238 பேருக்கு செயற்கை அவயங்கள், உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
ஆா்ஈசி நிறுவன சமூக பொறுப்பு நிதியின்கீழ் அலிம்கோ நிறுவனம் மூலம் அளிக்கப்பட்ட இந்த செயற்கை அவயங்கள், உபகரணங்களை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பயனாளிகளுக்கு வழங்கி பேசியது :
மாவட்டத்தில் 34,602 மாற்றத்திறனாளிகள் உள்ளனா். இவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் தமிழக அரசின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலக வங்கி உதவியுடன் டிஎன் ரைட்ஸ் எனும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்காக 8 வட்டாரங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று 5,482 மனுக்களை வழங்கியிருந்தனா். இதில், வீட்டுமனை பட்டா வேண்டி 540 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் சுமாா் 60 பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரிமுத்துமோட்டூா் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகளும் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன.
கடந்தாண்டு 200 மாற்றத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கப்பட்டது. நிகழாண்டு 300 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கப்பட உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த், எம்எல்ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், ஆா்.ஈ.சி நிறுவன தனி இயக்குநா் நாராயணன் திருப்பதி, மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில் குமாா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.