3 மனைவிகள்; சகோதரிகள் - சஞ்சய் கபூரின் ரூ.10,000 கோடி சொத்து, தொழில்... கையிலெடுக்கப்போவது யார்?
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் போலோ விளையாடியபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். அவர் விளையாடியபோது தேனீ ஒன்று கழுத்தில் கடித்து ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கம்பெனியின் சந்தை மதிப்பு; ரூ.30,000 தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.10,000 கோடி!
சஞ்சய் கபூர் சோனா காம்ஸ்டார் என்ற ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியை நடத்தி வருகிறார். அவரது தந்தை கடந்த 8 ஆண்டுக்கு முன்பு இறந்த போது அக்கம்பெனியின் பொறுப்பை சஞ்சய் கபூர் எடுத்தார். அக்கம்பெனியின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.30,000 கோடியாகும். அதேசமயம் சஞ்சய் கபூரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது. சிறந்த போலோ வீரரான சஞ்சய் கபூர் பிரிட்டன் அரச குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

இந்நிலையில் சஞ்சய் கபூரின் திடீர் மரணம் அவரது குடும்பத்தில் புதிய குழப்பத்தையும் சட்ட சிக்கலையும் ஏற்படுத்தி இருக்கிறது. சஞ்சய் கபூருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இது தவிர மூன்றாவது மனைவிக்கு அவரது முதல் கணவர் மூலமும் ஒரு மகன் இருக்கிறார். இக்குழந்தைகள் அனைவரும் கம்பெனி நிர்வாகத்தை எடுத்து நடத்தும் அளவுக்கு இன்னும் முதிர்ச்சியடையவில்லை. இதனால் கம்பெனியை யார் நடத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது. சஞ்சய் கபூர் முதலில் பேஷன் டிசைனர் நந்திதா என்பவரை திருமணம் செய்தார். அவர்கள் நான்கு ஆண்டுகள் ஒன்று சேர்ந்து வாழ்ந்த நிலையில் விவாகரத்து செய்து கொண்டனர். ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை.
இரண்டாவதாக பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூரை 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் 2016வது ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது. இருவரும் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்துவிட்டனர். இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கிறது. விவாகரத்தின் போது இரண்டு குழந்தைகள் மீதும் 14 கோடிக்கு பத்திரம் ஒன்றை சஞ்சய் கபூர் வாங்கி கொடுத்துள்ளார். இது தவிர ஒவ்வொரு மாதமும் கரீஷ்மா கபூரின் செலவு மற்றும் குழந்தைகளின் படிப்புக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.10 லட்சம் கொடுத்து வந்தார். இப்போது சஞ்சய் கபூர் இறந்துவிட்டதால் அப்பணத்தை யார் கொடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சஞ்சய் கபூரின் தந்தைக்கு மும்பையில் வீடு இருந்தது. அந்த வீட்டை சஞ்சய் கபூர் விவாகரத்தின் போது கரீஷ்மா கபூருக்கு கொடுத்துவிட்டார். அதோடு குழந்தைகளையும் முழுமையாக கரீஷ்மா கபூர் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டார். கரீஷ்மா கபூர் விவகாரத்தில் சஞ்சய் கபூர் முழுமையாக செட்டில் செய்துவிட்டதால், அவர்கள் சஞ்சய் கபூர் தொழிலுக்குள் வர வாய்ப்பில்லை என்கிறார்கள்.
சஞ்சய் கபூர் மூன்றாவதாக பிரியா சச்சிதேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். பிரியாவிற்கு முதல் திருமணத்தின் மூலமும் ஒரு குழந்தை இருக்கிறது. இரண்டாவதாக சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்டார். இப்போது சஞ்சய் கபூர் சொத்தை யார் நிர்வகிப்பது, யாருக்கு எவ்வளவு சொத்தை கொடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது கம்பெனியின் செயல்பாட்டில் எந்த வித பிரச்னையும் இல்லை என்று கம்பெனி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சஞ்சய் கபூருக்கு இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர்.

அவர்கள் தற்காலிகமாக கம்பெனியை தங்களது கையில் எடுத்து நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அதனை அவர்கள் உறுதிபடுத்தவில்லை. முதல் மனைவி விவாகரத்தாகி சென்றுவிட்டதாலும், அவருக்கு குழந்தை இல்லை என்பதாலும் சொத்து பிரச்னைக்குள் நுழைவாரா என்று தெரியவில்லை. கம்பெனியை தற்போது இருக்கும் நிர்வாகம் தொடர்ந்து நடத்தும் என்று கம்பெனி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது கரிஷ்மா கபூர் மகளுக்கு 20 வயதாகிறது.
ஆனால் அவர் இன்னும் கம்பெனி நிர்வாக கமிட்டியில் இணையவில்லை. இதனால் சொத்தை, கம்பெனியை எப்படி பிரிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள சஞ்சய் கபூர் லண்டனில் மரணமடைந்து இருப்பதால் அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இறுதிச்சடங்கும் தாமதம் ஆகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.