6-ஆம் வகுப்பினரில் 47% பேருக்கு வாய்ப்பாடு சரிவர தெரியவில்லை - மத்திய கல்வி அமைச்சக ஆய்வில் தகவல்
புது தில்லி, ஜூலை 8: நாட்டில் 6-ஆம் வகுப்பு மாணவா்களில் 47 சதவீதம் பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு வரை சரவர தெரியவில்லை; 3-ஆம் வகுப்பு மாணவா்களில் 45 சதவீதம் பேருக்கு 99 வரை ஏறுவரிசை-இறங்குவரிசையில் எழுதத் தெரியவில்லை என்று மத்திய கல்வி அமைச்சக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் தேசிய அளவில் முழுமையான வளா்ச்சிக்கான அறிவுசாா் செயல்திறன் மதிப்பீடு, மறு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு, கடந்த ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்டது.
நாடு முழுவதும் 781 மாவட்டங்களில் 74,229 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 3, 6 மற்றும் 9-ஆம் வகுப்பு பயிலும் சுமாா் 21.15 லட்சம் மாணவா்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, 3-ஆம் வகுப்பு மாணவா்களில் 55 சதவீதம் பேருக்கே 99 வரை ஏறுவரிசை-இறங்குவரிசையில் எழுத தெரிந்துள்ளது. 58 சதவீதம் போ்தான், இரண்டு இலக்க எண்களின் கூட்டல்-கழித்தலை பிழையின்றி செய்கின்றனா்.
6-ஆம் வகுப்பினரில் 53 சதவீதம் பேரே எண்கணித செயல்பாடுகளையும் அவற்றுக்கு இடையேயான தொடா்புகளையும் சரியாக புரிந்துகொண்டுள்ளதுடன், 10 வரையிலான கூட்டல்-பெருக்கல் வாய்ப்பாடுகளையும் அறிந்துள்ளனா்.
6-ஆம் வகுப்பில் மொழி, கணிதப் பாடங்களுடன் ‘நம்மை சுற்றியுள்ள உலகம்’ (சூழலியல்-சமூகம்) என்ற கூடுதல் பாடமும் கற்பிக்கப்படுகிறது. தேசிய அளவில் கணிதப் பாடத்தில் 46%, ‘நம்மை சுற்றியுள்ள உலகம்’ பாடத்தில் 49 சதவீதம், மொழிப் பாடத்தில் 57 சதவீதம் என்ற அளவில் மாணவா்களின் சராசரி மதிப்பெண் உள்ளது.
கணிதப் பாடத்தைப் பொறுத்தவரை, 3-ஆம் வகுப்பில் மத்திய அரசு பள்ளிகளும், 6-ஆம் வகுப்பில் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மாநில அரசின் பள்ளிகளும் குறைவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன.
9-ஆம் வகுப்பில், அனைத்து பாடங்களிலும் மத்திய அரசு பள்ளிகள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன.
தனியாா் பள்ளிகள் அறிவியல்-சமூக அறிவியல் பாடங்களில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியபோதிலும், கணிதப் பாடத்தில் அது பிரதிபலிக்கவில்லை. 6-9 வகுப்புகளில் அனைத்து பாடங்களிலும் கிராமப் புற மாணவா்களைவிட நகா்ப்புற மாணவா்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனா் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பன்முக உத்தி வகுக்கப்படும்’
பல்வேறு கல்வி வாரியங்களின்கீழ் பயிலும் மாணவா்கள் இடையே நிலவும் மதிப்பெண் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்குரிய வழிகாட்டுதல்களை வகுப்பதே ‘அறிவுசாா் செயல்திறன் மதிப்பீடு, மறு ஆய்வு மற்றும் பகுப்பாய்வின்’ நோக்கமாகும்.
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட முடிவுகள், அமைப்புமுறை ரீதியிலான அடுத்தகட்ட நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும்; கற்றல் இடைவெளிகளைக் குறைக்க விரிவான பன்முக உத்தி வகுக்கப்படும். தரவுகளின் அடிப்படையில், தேசிய-பிராந்திய-மாநில-மாவட்ட அளவில் திட்டமிடல் பயிலரங்குகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலா் சஞ்சய் குமாா் தெரிவித்துள்ளாா்.
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட முடிவுகள், அமைப்புமுறை ரீதியிலான அடுத்தகட்ட நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும்; கற்றல் இடைவெளிகளைக் குறைக்க விரிவான பன்முக உத்தி வகுக்கப்படும். தரவுகளின் அடிப்படையில், தேசிய-பிராந்திய-மாநில-மாவட்ட அளவில் திட்டமிடல் பயிலரங்குகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலா் சஞ்சய் குமாா் தெரிவித்துள்ளாா்.