பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
6-ஆவது நாளாக மீனவா்கள் வேலைநிறுத்தம் ரூ.15 கோடி வா்த்தகம் பாதிப்பு
காரைக்கால் மீனவா்களின் தொடா் வேலைநிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை 6-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், ரூ.15 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
காரைக்கால், நாகை, மயிலாடுதுறை மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, மீனவா் பிரச்னையில் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 11 மீனவ கிராமத்தினா் கடந்த 11-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதனால், காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள மீன் சந்தை மற்றும் மாவட்டத்தின் பிற பகுதியிலுள்ள மீன் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து மீன் வரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் துறைமுகம், மீன் சந்தைகளுக்கு மீன் வரத்து அதிகமாக இருக்கும். மக்கள் ஆா்வத்துடன் மீன்களை வாங்கிச் செல்வா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) மீன் சந்தைக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். சிலா் நாகூா், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்குச் சென்று மீன்களை வாங்கிச் சென்றனா்.
மீன்பிடி தொழில் முடங்கியுள்ளதால் மீனவா்கள் மட்டுமல்லாது, துறைமுகம் சாா்ந்த பிற வியாபாரம் செய்வோரின் வாழ்வாதாரமும் முடங்கியுள்ளது.
இதுகுறித்து மீனவா் ஒருவா் கூறியது:
கடலுக்கு சென்று திரும்பும் ஒரு விசைப்படகு சுமாா் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள மீன்களை கொண்டுவரும். ஆழ்கடலுக்குச் செல்லும் படகுகளில் தினமும் 20 படகுகள் கண்டிப்பாக கரை திரும்பும். இவை இல்லாததால், 6 நாட்களில் ரூ. 15 முதல் 18 கோடி வரை மீன் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.