Bear Tales: இரண்டு கரடிகளின் உண்மைக்கதை... ஒன்றின் பெயர் ஸ்டீபன்; இன்னொன்றின் பெயர்? | True Story
இது இரண்டு கரடிகளின் உண்மைக்கதை. ஒரு கரடியின் பெயர் ஸ்டீபன். இன்னொரு கரடியின் பெயர் பெயரை கலிபோர்னியா பத்திரிகைகள் 'கொடூரமான கருப்பு நிற கரடி' என குறிப்பிடுகின்றன.
முதல் கரடிக்கு ஸ்டீபன் என பெயர் சூட்டியது யார்? பெயரில்லாத அந்த இரண்டாவது கரடியை ஏன் கொடூரமானது என பத்திரிகைகள் குறிப்பிட்டன..? இந்த இரண்டு கதைகளில் ஒன்று பாசக்கதை, மற்றொன்று பகீர் கதை. முதலில் இரண்டாவது கரடியின் பகீர் கதையைப் பார்ப்போம்.
அந்த 71 வயது பெண்மணியின் பெயர் பேட்டிஸ் மில்லர் (Patrice Miller). கலிஃபோர்னியாவின் டவுனிவில் (Downieville) என்கிற சிறிய டவுனில் வசித்து வந்திருக்கிறார். தன் அண்டை வீட்டார்களிடம் 'தன்னை கருமை நிற கரடி ஒன்று அடிக்கடி பின்தொடர்கிறது' என்று பயத்துடன் சொல்லி வந்திருக்கிறார். தன்னைப் பின்தொடர்ந்து வருகிற அந்தக் கரடி என்றாவது ஒருநாள் தன் வீட்டுக்குள் நுழைந்து விடலாம் என அஞ்சி, தன் வீட்டு ஜன்னல்களுக்கு இரும்பினால் ஆன கம்பிகளை அடித்து பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார் பேட்டிஸ்.
ஆனால், ஒருநாள் அந்தக் கரடி கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து விட்டது. அடுத்த சில நாள்களில் மில்லரின் வீட்டிலிருந்து துர்வாடை வீசுகிறது என அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் சொல்ல, அவர்கள் அந்தப் பெண்மணியின் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது பேட்டிஸ் மில்லர் அவருடைய படுக்கையறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கரடி தின்று மீதம் விட்டுச்சென்ற மில்லரின் உடல் பாகத்தை காவல்துறையினர் பிணக்கூராய்வுக்காக எடுத்துச்சென்றனர்.
ஆரம்பத்தில் பேட்டிஸ் மில்லர் வயது காரணமாக இறந்திருக்கலாம். அவருடைய உடல் அழுகிப்போய் இருக்கலாம். அந்த துர்நாற்றத்தால் ஈர்க்கப்பட்டு அந்தக் கரடி மில்லரின் வீட்டுக்குள் கதவை உடைத்துக்கொண்டு வந்திருக்கலாம். பசி காரணமாக அழுகிய அவருடைய உடல் பாகத்தை சாப்பிட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக, மில்லர் வீட்டு ஹாலிலும் படுக்கையறையிலும் வழிந்திருந்த ரத்தத்தில் ஒரு கரடியின் பாதத்தடங்கள் இருந்தன.
ஆனால், பிணக்கூராய்வின் முடிவு வந்தபிறகுதான் மில்லரின் மரணத்துக்குக் காரணமே ஒரு கரடிதான். அது மில்லரின் கழுத்தில் கடித்ததால்தான் அவர் மரணம் அடைந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் பிறகுதான், அந்நாட்டு ஊடகங்கள் 'கலிஃபோர்னிய மாகாணத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக கொடூரமான கரடியால் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்' என கடந்த வருடம் செய்திகள் வெளியிட்டன.

சரி, பேட்டிஸ் மில்லரை ஏன் அந்தக் கொடூரமான கரடி பல மாதங்களாக பின்தொடர்ந்தது? ஏன் வீட்டின் கதவை உடைத்து அவரைக்கொன்றது? பேட்டிஸ் மில்லரின் வீட்டுக்குள் இருந்து எந்தவித சத்தமும் வராததால் காவல்துறையில் புகார் அளித்த அவருடைய அண்டை வீட்டார் ஒருவர் இதற்கான காரணத்தை சொல்லியிருக்கிறார்.
'எங்களுடையது மலைகள் சூழ்ந்த சின்னஞ்சிறிய டவுன். என்னுடைய குழந்தைப்பருவத்தில் இந்த டவுனில் நான் கரடிகளைப் பார்த்ததே இல்லை. ஆனால், இப்போது இங்கு கரடிகள் அதிகரித்துவிட்டன. மில்லரை ஒரு கரடி பல மாதங்களாக பின்தொடர்ந்தும்கூட அவர் அதை விரட்ட நினைத்தாரே ஒழிய காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால், அந்த இரக்கம் அவருடைய உயிரைக் காப்பாற்றவில்லை.
மில்லர் ஒரு காய்கறித்தோட்டம் வைத்திருந்தார். அதற்கான உரத்தையும் அவரே தயாரித்து வந்தார். ஆனால், அந்த உரத்தை அவர் சரியான இடைவெளியில் அப்புறப்படுத்தவில்லை. உரம் தயாரிப்புக் காரணமாக அவர் வீட்டு குப்பைத்தொட்டியையும் அவர் தினமும் சுத்தம் செய்ததில்லை. ஒருவேளை அந்த அழுகல் துர்நாற்றத்தை மோப்பம் பிடித்துக்கொண்டு அந்தக் கரடி அவருடைய வீட்டுக்கு தினமும் வந்திருக்கலாம்' என்கிறார்.
இன்னொருவர், 'என்னுடைய தோழி ஒருத்தி இறந்த மில்லர் வசித்த அதே டவுனில்தான் வசித்து வருகிறார். மில்லர் ஆதரவற்ற பூனைகளுக்கு உணவு வழங்குவது வழக்கம். அதனால், அவருடைய வீட்டைச் சுற்றி எப்போதும் உணவுப் பொருள்கள் சிதறி போய் கிடக்குமாம். அந்த வாடையால் ஈர்க்கப்பட்டு, அந்த உணவை சாப்பிடுவதற்காக தினமும் அந்தக் கரடி வந்திருக்கலாம். அதைத்தான், ஒரு கரடி தன்னை பின்தொடர்வதாக அவர் நினைத்திருக்கலாம்.
மில்லருக்கு சமீபமாக மூப்பு காரணமாக மறதி ஏற்பட்டிருக்கிறது என என் தோழி சொன்னார். சில நேரங்களில் அவருடைய வீடு எதுவென்று தெரியாமல் மில்லர் தடுமாறியபோது, என்னுடைய தோழி அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டிருக்கிறார். அதனால் மறதி காரணமாக அவர் ஆதரவற்ற பூனைகளுக்கு உணவளிக்க மறந்திருக்கலாம். அந்த உணவுக்காக தினமும் வந்த ஒரு கரடிக்கு அது ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். ஒரு கட்டத்தில் பசி காரணமாக, அது பேட்டிஸ் மில்லரை தாக்கியிருக்கலாம்' என்கிறார்.
தெரிந்தோ தெரியாமலோ ஓர் ஆபத்தான காட்டுயிர்க்கு உணவளித்தவர் அதனால் தன் உயிரையே இழந்திருக்கிறார்.


ஸ்டீபன் ஒரு பிரவுன் நிற கொடும் கரடி. ரஷ்யாவின் தேசிய விலங்கும் பிரவுன் நிற கரடி தான். ஸ்டீபன் ரஷ்யாவில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறது. ஆனால், காட்டில் அல்ல. தன்னைத் தத்தெடுத்து வளர்த்த குடும்பத்துடன் கடந்த 30 வருடங்களாக வீட்டில் வசித்துக்கொண்டிருக்கிறது. அடர்ந்த பெரிய காட்டில் வாழ வேண்டிய, மூர்க்கமான குணம் கொண்ட பிரவுன் நிற கரடி எப்படி ஒரு குடும்பத்துக்குள் வந்தது என்பது சோகமான கதை.
மாஸ்கோவைச் சேர்ந்த ஸ்வெட்லானா (Svetlana), பென்டிலென்கோ (Yuriy Panteleenko) என்ற தம்பதியர், தாய்க்கரடியால் புறக்கணிக்கப்பட்டு மரக்கட்டைகள் இடையே கிடந்த மூன்று மாத கரடிக்குட்டி ஒன்றை காட்டில் கண்டெடுத்திருக்கிறார்கள். அந்தக் கரடிக்குட்டியின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்ததால் தங்களுடைய வீட்டுக்கு எடுத்துச்சென்று வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஸ்டீபனுக்கு தற்போது 30 வயதாகிவிட்டது. ஸ்டீபன் தன்னுடைய வளர்ப்புப் பெற்றோருக்கு உதவியாக செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறது... அவர்களுடன் சேர்ந்து தொலைக்காட்சி பார்க்கிறது...
ஸ்டீபன் நாளொன்றுக்கு 25 கிலோ வரைக்கும் மீன்கள், காய்கறிகள், பழங்கள், முட்டைகள் சாப்பிடுகிறது. தன்னுடைய வளர்ப்புப் பெற்றோர் உணவூட்ட, அவர்கள் கழுத்தின் மேல் தலையை வைத்துக்கொண்டு ஆசையாக வாயைத் திறக்கிற ஸ்டீபனின் எடை கிட்டத்தட்ட 300 கிலோ. உயரம் ஏழு அடி. ஆனால், தன்னுடைய வளர்ப்புப்பெற்றோர்களிடம் ஒரு குழந்தையை போலவே நடந்துகொள்கிறது ஸ்டீபன்.

'நாங்கள் தருகிற உணவை மட்டுமே அவன் சாப்பிடுவான். எங்கள் வீட்டைத்தாண்டி ஸ்டீபன் வேறெங்கும் சாப்பிட மாட்டன். அவனுக்கு பிக்னிக் செல்வதென்றால் மிகவும் பிடிக்கும். இத்தனை வருடங்களில் அவன் எங்களை ஒருமுறைகூட கடித்ததில்லை' என்கிறார்கள் ஸ்டீபனின் வளர்ப்புப் பெற்றோர்.
ஸ்டீபன் தன்னுடைய வளர்ப்புப்பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருப்பதை, அவர்கள் புகைப்படங்களாக, வீடியோக்களாக எடுத்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். ரஷ்ய மாடல்கள் ஸ்டீபனுடன் போட்டோ ஷூட் செய்கிறார்கள். அந்த வகையில் ஸ்டீபனும் ஒரு மாடல்தான்.
இதன்மூலம் தன் வளர்ப்புப் பெற்றோருக்கு பொருளாதார சப்போர்ட்டும் செய்து வருகிறது ஸ்டீபன். சில வருடங்களுக்கு முன்னால் ஒரு தம்பதியரின் திருமணம் மாஸ்கோ பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்குக் காரணமும் ஸ்டீபன்தான். தம்பதியரின் கைகளைப் பிடித்து ஒன்று சேர்த்து திருமணத்தை நடத்தி வைத்ததே ஸ்டீபன்தான்.
'ஆபத்தான காட்டுயிரை வீட்டுக்குள் வளர்க்கிறார்கள்', 'அதை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்', 'ஒரு கரடி திருமணம் செய்துவைக்கிறது என பல பேர் ஆவலாக அந்தத் திருமணத்துக்கு வந்திருக்கிறார்கள். அந்தக் கரடி எப்போது வேண்டுமானாலும் கொடூரமாக மாறலாம் என்கிற ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள்' என ஸ்டீபன் மீதும், அதன் வளர்ப்புப்பெற்றோர் மீதும் எக்கச்சக்க விமர்சனங்கள் இருந்தாலும், அந்தக் காட்டுயிர் தன் வேட்டை இயல்பை கடந்த 30 வருடங்களாக மறந்தே வாழ்ந்து வருகிறது.

ஸ்டீபனும் கரடிதான். மில்லரைக்கொன்றதும் கரடிதான். தன்னை அறியாமல் கரடிக்கு உணவளித்த மில்லர் உயிரிழந்துவிட்டார். தன்னைக் காப்பாற்றி உணவளித்து பாசமாக வளர்த்து வருகிற குடும்பத்தில் ஒரு பிள்ளைபோல வாழ்ந்து வருகிறது ஸ்டீபன். சூழல், கொடூரமான காட்டுயிரின் இயல்பைகூட மாற்றும்போல..!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
