நத்தம் அருகே நடந்த மீன் பிடித் திருவிழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
CSK: சண்டை செய்த ஆயுஷ் மாத்ரே; கோட்டைவிட்ட சென்னையின் பினிஷர்கள்!' - சிஎஸ்கே எப்படி தோற்றது?
'RCB vs CSK'
நடப்பு சீசனில் முதல் முறையாக எதிரணிக்கு சவாலளிக்கும் வகையில் உருப்படியான ஒரு போட்டியை ஆடி முடித்திருக்கிறது சென்னை அணி. ஆயுஷ் மாத்ரே ஆடிய ஆட்டத்துக்கு சென்னை வென்றிருக்க வேண்டும். ஆனாலும் போராடி தோற்றிருக்கிறார்கள். சென்னை அணி எங்கே சறுக்கியது?

பெங்களூரு அணியைக் கட்டாயமாக 180 ரன்களுக்குள் சென்னை அணி கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், கடைசி 2 ஓவர்களில் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆடிய கதகளியில் பெங்களூரு அணி 213 ரன்களை எட்டியது. அவர் 14 பந்துகளில் 53 ரன்களை அடித்திருந்தார். சென்னையின் நடப்பு சீசன் ரெக்கார்ட்படி இந்த டார்கெர் அவர்களுக்கானதே கிடையாது.
தோல்விக்குப் பிறகு தோனி மைக்கை பிடித்து நாங்கள் 20-30 ரன்களை அதிகம் கொடுத்துவிட்டோம். அதனால்தான் தோற்றோம் என உருட்டப் போகிறார் என்றே தோன்றியது.

'நம்பிக்கையளித்த சேஸிங்!'
ஆனால், சென்னை சேஸிங்கை தொடங்கிய விதமும் அதை முன்னெடுத்த சென்ற விதமும் அத்தனை ஆச்சர்யமாக இருந்தது. குறிப்பாக, ஓப்பனரான இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவும் ஜடேஜாவ ஆடிய ஆட்டம்தான் சிஎஸ்கேவின் மீது நம்பிக்கையை கொடுத்தது. இருவரும் இணைந்து 114 ரன்களை 10.4 ஓவர்களில் அடித்திருந்தனர்.

அட்டகாசமான பார்ட்னர்ஷிப். ஏனெனில், நடப்பு சீசனில் சென்னை அணிக்கு இப்படியான பார்ட்னர்ஷிப்கள் கிடைக்கவே இல்லை. குறிப்பாக, மிடில் ஓவர்களில் சென்னையின் பேட்டர்கள் இண்டண்டே இல்லாமல்தான் ஆடிக்கொண்டிருந்தனர். இன்றைக்கு அப்படி இல்லாமல் ரிஸ்க் எடுத்து ஆடியதே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
ஆயுஷூம் ஜடேஜாவும் ஒருவரை ஒருவர் Complement செய்து மிகச்சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஆயுஷ் ஸ்பின்னர்களுக்கு எதிராக கொஞ்சம் தடுமாறினார். வழக்கத்தை மீறி ஜடேஜா ஸ்பின்னர்களுக்கு எதிராக இன்று நன்றாக ஆடினார். அதனால் ஆயுஷ் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் ஜடேஜா ஸ்பின்னர்களுக்கு எதிராகவும் ரிஸ்க் எடுத்து ஆடினர்.

'ஆயுஷ் அசத்தல்!'
ஆயுஷ் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 250+ ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக 140 க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆடியிருந்தார். ஜடேஜா அப்படியே தலைகீழாக ஆடியிருந்தார். பவர் ப்ளேக்குள்ளாகவே புவனேஷ்வர் குமாரின் ஒரே ஓவரில் 26 ரன்களை ஆயுஷ் அடித்திருந்தார். அதிலும் ஸ்லோவாக புவனேஷ்வர் குமார் வீசுயிருந்த ஒரு நக்குல் பந்தை சரியாக மடக்கி அவர் சிக்சராக்கிய விதம் அத்தனை அற்புதமாக இருந்தது.
சிக்சர்களையும் பவுண்டரிகளையும் கடந்து ஸ்ட்ரைக்கையும் நன்றாக ரொட்டேட் செய்தார். சதத்தை எட்டாமல் 48 பந்துகளில் 94 ரன்களை எடுத்திருந்தார். இந்த 48 பந்துகளில் 8 பந்துகளை மட்டும்தான் டாட் ஆடியிருந்தார். மிச்ச பந்துகளையெல்லாம் சிறப்பாக ரொட்டேட் செய்திருந்தார். 'இந்தியாவின் எளிய பின்னணியிலிருந்து வரும் வீரர்களிடம் ஒருவித பசி இருக்கிறது. அவர்கள் வெல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை அப்படியே பழையபடிதான் இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.' என ஆயுஷின் ஆட்டத்தை பற்றி பேசுகையில் கூறிக்கொண்டிருந்தார்.

ஆயுஷ் ஆடிய ஆட்டத்தின் மூலம் அவருக்குள் இருக்கும் பசியையும் கனவையும் உணர முடிந்தது. இன்னொரு பக்கம் ஜடேஜாவும் இந்த சீசனில் உருப்படியான ஒரு இன்னிங்ஸை ஆடியிருந்தார். சேஸிங் சிறப்பாகத்தான் சென்று கொண்டிருந்தது. அப்போதுதான் ஒரு ட்விஸ்ட். லுங்கி இங்கிடி வீசிய 17 வது ஓவரில் ஆயுஷூம் டெவால்ட் ப்ரெவிஸூம் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.
போட்டியில் பரபரப்பு கூடியது. சுயாஷ் சர்மா வீசிய 18 வது ஓவரில் வெறும் 6 ரன்கள்தான் வந்தது. தோனியும் ஜடேஜாவும் க்ரீஸில் இருந்தார்கள். புவனேஷ்வர் குமார் வீசிய 19 வது ஓவரில் தோனி ஒரு சிக்சர் அடிக்க 14 ரன்கள் கிடைத்தது.

'கோட்டைவிட்ட பினிஷர்கள்!'
கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை. யாஷ் தயாள் பந்து வீசினார். தோனி lbw முறையில் அவுட் ஆகினார். ஆனாலும் சிவம் துபே ஒரு சிக்சரை அடித்தார். யாஷ் நோ-பால் வீசினார். ஆனாலும் சென்னையால் டார்கெட்டை எட்ட முடியவில்லை. கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தயாள் யார்க்கருக்குதான் முயன்றார். ஓரளவுக்கு நன்றாக வீசினார். அதையே ஜடேஜாவாலும் துபேவாலும் பவுண்டரியாக மாற்ற முடியவில்லை. சிங்கிள்தான் எடுத்தனர். விளைவு, 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது.

ஆயுஷ் ஆடிய ஆட்டத்துக்கு சென்னை அணி வென்றிருக்க வேண்டும். பேட்டிங்கிலும் சரி பௌலிங்கிலும் சரி டெத்தில் அந்த 2 ஓவர்கள்தான் பிரச்சனையாக மாறிவிட்டது. ஆனாலும் சென்னை அணி இப்படி ஒரு போராட்டக்குணத்தை வெளிக்காட்டி பார்க்கவே இல்லை. அதே பார்த்ததே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.
சென்னை அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது என நீங்கள் நினைப்பது எது எனக் கமென்ட்டில் பதிவிடுங்கள்