என்இபி யின் உள்ளடக்கங்களை செயல்படுத்த இரு நாள் தேசிய பயிலரங்கு: 64 பல்கலைக்கழக த...
CSK vs PBKS: 'CSK செய்த 3 தவறுகள்!' - என்னென்ன தெரியுமா?
'சென்னை vs பஞ்சாப்!'
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக சென்னை அணிக்கு ப்ளே ஆப்ஸ் செல்ல 1% வாய்ப்பு இருந்தது. இந்தப் போட்டியிலும் வெற்றிகரமாக தோற்று சென்னை அணி அந்த வாய்ப்பையும் கோட்டை விட்டிருக்கிறது. சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

முறையாக ஃபினிஷ் ஆகாத பேட்டிங்!
கடந்த போட்டிகளைவிட இந்தப் போட்டியில் சென்னையின் பேட்டிங் நன்றாகவே இருந்தது. சாம் கரண் 47 பந்துகளில் 88 ரன்களை அடித்திருந்தார். நல்ல இன்னிங்ஸ். இதுவரை சென்னை அணியின் வீரர்களிடமிருந்து வெளிப்படாத இண்டண்ட் அவரிடம் வெளிப்பட்டது. அவர் ஆடிய விதத்தை பார்க்கையில் சென்னை அணி 210-220 ரன்களை எடுக்கும் எனத் தோன்றியது.
ஆனால், கடைசி 2 ஓவர்களில் சொதப்பிய சென்னை அணி 190 ரன்களை மட்டுமே எடுத்தது. தோனிக்காக சஹாலை ஸ்ரேயாஷ் பதுக்கி வைத்திருந்தார். தோனி வந்தவுடன் 19 வது ஓவரில் அவரைக் கொண்டு வந்தார். தோனி ஒரு சிக்சர் அடித்திருந்தாலும் அதே ஓவரில் அவுட்டும் ஆனார். சஹால் வழக்கம்போல ரிஸ்க் எடுத்து வீசி தோனியின் விக்கெட்டை எடுத்தார். அதேமாதிரி, அந்த ஓவரில் இன்னும் 3 விக்கெட்டுகள் ஹாட்ரிக்காகவும் வந்தது.

இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே வந்தது. 4 விக்கெட்டுகள் விழுந்தது. அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரின் இரண்டாவது பந்திலேயே துபேவும் அவுட்டாக சென்னை ஆல் அவுட். கடைசி 7 பந்துக்குள் மட்டும் 5 விக்கெட்டுகளை சென்னை இழந்திருந்தது. இந்த சரிவு மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் சென்னை அணியால் 20-30 ரன்களை அதிகமாக எடுத்திருக்க முடியும். மோசமான பினிஷிங்கால் அது நடக்காமல் போனது. 20-30 ரன்கள் அதிகம் வந்திருந்தால் சேஸிங்கில் பஞ்சாபின் மீது இன்னும் அழுத்தம் கூடியிருக்கும்.
விக்கெட் இல்லாத பவர்ப்ளே
பவர்ப்ளே விக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்பதை தோனி ஒரு குறையாக பல போட்டிகளில் சொல்லி வந்திருக்கிறார். இந்தப் போட்டியிலும் அது நடந்திருந்தது. பேட்டிங்கில் பவர்ப்ளேயில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், பௌலிங்கில் சென்னை அணியால் பவர்ப்ளேயில் 1 விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த வித்தியாசம்தான் பிரச்சனை. பிரியான்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை மட்டுமே சென்னை எடுத்திருந்தது. பவர்ப்ளேயில் இன்னும் ஒரு விக்கெட்டை குறிப்பாக ஸ்ரேயாஷின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தால் போட்டி சென்னை அணிக்கு சாதகமாக மாறியிருக்கும்.
உதவாத மிடில் & டெத் ஓவர்கள்:
மிடில் ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. பிரப்சிம்ரனும் ஸ்ரேயாஷூம் இணைந்து 72 ரன்களை சேர்த்திருந்தனர். சிறப்பான பார்ட்னர்ஷிப் இது. ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் ஸ்ரேயாஷூக்கு இந்த மிடில் ஓவர்கள் ஒரு பிரச்னையாகவே இல்லை. நூர் அஹமதுதான் இந்த பார்ட்னர்ஷிப்பை பிரித்தார்.

ஆனாலும் அது காலம் தாழ்ந்து கிடைத்த விக்கெட்டாகவே இருந்தது. மேலும், நூர் வழக்கமாக இந்த மிடில் ஓவர்களில் 2-3 விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுப்பார். அதுவும் இந்தப் போட்டியில் நடக்கவில்லை. ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். கடைசி 6 ஓவர்களில் பஞ்சாபின் வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. பௌலிங் அணியால் சவாலளிக்க முடியும். ஆனால், சென்னை அணியால் அதையும் செய்ய முடியவில்லை. 16, 17, 18 என நூர், பதிரனா, ஜடேஜா வீசிய இந்த 3 ஓவர்களிலேயே 46 ரன்கள் கிடைத்துவிட்டது. கலீல் அஹமது கடைசி ஓவரில் கொஞ்சம் ப்ரஷர் ஏற்றினாலும் அவர் போராடி பார்க்கக்கூட ரன்கள் இல்லை.

இந்தத் தோல்வி மூலம் சென்னை அணி ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்து வெளியேறியிருக்கிறது. ஒரே ஒரு ஆறுதல், இந்தப் போட்டியில் ஓரளவுக்கு இன்டன்ட் காட்டி சென்னை அணி தோற்றிருக்கிறது.