தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
CSK vs RCB: `என்ன ஆச்சு CSK?' தோல்விக்கான அந்த 3 காரணங்கள்
'பெங்களூரு வெற்றி!'
அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூரு அணி 2008 இல் சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தியிருந்தது. அதன்பிறகு, இத்தனை ஆண்டுகளில் சேப்பாக்கத்தில் பெங்களூரு அணி சென்னையை வீழ்த்தியதே இல்லை. இப்போது ரஜத் பட்டிதர் தலைமையிலான பெங்களூரு அணி சென்னையை வீழ்த்தி அந்த மோசமான ரெக்கார்டுக்கு முடிவுரை எழுதியிருக்கிறது. சென்னை அணி இந்தப் போட்டியில் மிக மோசமாக ஆடியிருந்தது. சென்னை அணியின் தோல்விக்கான அந்த 3 காரணங்கள் இங்கே.
ஸ்பின்னர்களின் சொதப்பல்:
டாஸை சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜே வென்றிருந்தது. முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார்.
பெங்களூரு அணி பேட்டிங்கைத் தொடங்கியது. பெங்களூரு அணியின் பேட்டர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக வீக்காக இருப்பார்கள். அதனால் அஷ்வின், ஜடேஜா, நூர் அஹமது ஆகியோர் பெங்களூருவைக் கட்டுப்படுத்தி விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது வேறு. அஷ்வின், ஜடேஜா இருவரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பில் சால்ட்டும் விராட்டும் ஓப்பனிங் ஓடிக்கொண்டிருக்கையில் இரண்டாவது ஓவரிலேயே அஷ்வினை வீச வைத்தார்கள்.

அஷ்வின் சிறப்பாக வீசி ஓப்பனர்களின் விக்கெட்டை வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஓவரிலேயே பில் சால்ட் அஷ்வினை வெளுத்துவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள். பவர்ப்ளே முடிந்தவுடன் ஜடேஜாவை அறிமுகப்படுத்தினார்கள். அவரின் ஓவரில் படிக்கல் பவுண்டரியும் சிக்சருமாக அடித்து 15 ரன்களை சேர்த்தார். ஜடேஜா அஷ்வின் என இருவரும் சேர்ந்து 5 ஓவர்களை வீசி 59 ரன்களை வாரி வழங்கியிருந்தனர். அஷ்வின் மட்டும் படிக்கல்லின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இவர்கள் இருவரும் டைட்டாக வீசி அழுத்தம் ஏற்றாத போதும் நூர் அஹமது மட்டும் ஒரு முனையில் போராடி பில் சால்ட், கோலி, லிவிங்ஸ்டன் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார்.

அஷ்வின் மற்றும் ஜடேஜாவும் பௌலிங்கில் ஒத்துழைத்து நல்ல பங்களிப்பை அளித்திருந்தால் பெங்களூரு அணியை கொஞ்சம் குறைவான ஸ்கோரிலேயே கட்டுப்படுத்தியிருக்க முடியும். அதிகம் எதிர்பார்க்கப்பட்டு களம் இறங்கிய வேகப்பந்து வீச்சாளர் பதிரனாவும் டெத்தில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதை தவிர எதையும் செய்யவில்லை.
கேட்ச் ட்ராப்கள்:
`கடந்த போட்டியில் நாங்கள் கொஞ்சம் சுமாராக பீல்டிங் செய்தோம். இந்தப் போட்டியில் அதை மேம்படுத்த வேண்டும்' என சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் பேசியிருந்தார். பேசினாரே ஒழிய, இந்தப் போட்டியிலும் எந்த மாற்றமும் இல்லை. பீல்டிங் ரொம்பவே சுமாராகத்தான் இருந்தது. மிடில் ஆர்டரில் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் நன்றாக ஆடி, குறிப்பாக ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். மிடில் ஓவர்களில் இவரை வீழ்த்தியிருந்தால் பெங்களூரு தடுமாறியிருக்கும்.

அதற்கான வாய்ப்பிருந்தும் சென்னை அணி அதை செய்யவில்லை. ரஜத் பட்டிதர் மூன்று கேட்ச் வாய்ப்புகளைக் கொடுத்தார். அந்த மூன்றுமே ட்ராப். தீபக் ஹூடாவெல்லாம் கையில் சுலபமாக வந்து விழுந்த கேட்ச்சை கோட்டை விட்டார். மிக மோசமான பீல்டிங். சென்னை அணி எப்போதும் அடிப்படையான விஷயங்களை சரியாக செய்ய வேண்டும் என நினைக்கும். இப்போது அதிலேயே சொதப்புவதுதான் வேதனை.
பேட்டிங் சொதப்பல்:
பேட்டிங்கில் ருத்துராஜ் நம்பர் 3 இல் இறங்குவது கட்டாயம் பிரச்சனைதான் என போட்டிக்கு முந்தைய கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தோம். இந்தப் போட்டியிலும் ரச்சினும் ராகுல் திரிபாதியும் ஓப்பனிங் இறங்கினார்கள். ருத்துராஜ் நம்பர். திரிபாதி 5 ரன்களில் அவுட். ருத்துராஜ் டக் அவுட். ருத்துராஜ் ஓப்பனிங் பேட்டர். அவர் ஓப்பனிங் இறங்கும்போதுதான் அவரிடமிருந்து சிறப்பான செயல்பாடு வரும். அடுத்தப் போட்டியிலாவது ருத்துராஜ் மனது மாற வேண்டும். அதேமாதிரி, மிடில் ஆர்டரும் சிவம் துபேவை நம்பி மட்டுமே இருக்கிறது.

தீபக் ஹூடா, சாம் கரண் ஆகியோரும் ஒன்றும் செய்யவில்லை. துபேவும் இன்னும் டச்சுக்கு வரவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் இந்த பேட்டிங் யூனிட்டிடம் போரிடும் குணமே இல்லை. 196 சேஸை டெஸ்ட் மேட்ச்சின் முதல் செஷனை ஆடுவதைப் போல ஆடிக்கொண்டிருந்தார்கள். அட்டாக்கிங் இண்டண்ட்டே இல்லை. சேஸில் முதல் 10 ஓவர்கள் முடிந்த போதே சிஎஸ்கேவின் தோல்வி உறுதியாகிவிட்டது. கடைசி 10 ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 131 ரன்கள் தேவைப்பட்டது. டி20 க்களில் இது எடுக்கக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், இவர்கள் ஆடிய மந்தமான ஆட்டத்தால் கட்டாயம் இந்த ஸ்கோரை எடுக்க முயற்சி கூட செய்யமாட்டார்கள் என்பது அப்போதே தெரிந்துவிட்டது. நவீன டி20 பாணிக்கு மாறவில்லை எனில் சென்னை அணி இன்னும் பல தோல்விகளை அடையும்.