பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித...
Doctor Vikatan: நுரையீரலில் சளி கோத்து, உயிர் பயத்தை தரும் மூச்சுத்திணறல்.. தவிர்க்க முடியுமா?
Doctor Vikatan: நுரையீரலில் சளி கோத்திருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் முதியவர்கள் குறித்து அடிக்கடி செய்திகளில் கேள்விப்படுகிறோம். முதியவர்களுக்கு நுரையீரலில் ஏன் சளி கோத்துக்கொள்கிறது... அதை வெளியேற்ற சிகிச்சைகள் கிடையாதா, உயிரிழப்பைத் தவிர்க்க முடியாதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.

வயதானவர்களுக்கு நுரையீரலில் சளி கோத்துக்கொள்ள சிஓபிடி (Chronic obstructive pulmonary disease) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பாதிப்பும், காற்றுக்குழாய் முழுமையாக சிதைவடையும் பிரான்கியெக்டாசிஸ் (Bronchiectasis) என்ற பாதிப்பும் முக்கிய காரணங்கள். இந்த இரண்டாவது பிரச்னையில் சளி அதிகமாகத் தங்கிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் இது குழந்தைப்பருவத்தில் பாதிக்கும் என்றாலும், பெரியவர்களையும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
முதியவர்களை பாதிக்கும் பிரச்னைகளில் முக்கியமானது பார்க்கின்சன்ஸ் பாதிப்பு. இது அவர்களது நரம்பியல் மண்டலத்தை பாதிக்கும் முக்கியமான பிரச்னை. இவர்களுக்கு விழுங்குவதில் சிரமம் இருக்கும். அதனால் உணவானது உணவுக்குழாய்க்குள் போகாமல், காற்றுக்குழாய்க்குள் போய்விடும். அதனால் புரையேறும். இந்நிலை சிலருக்கு உயிருக்கே ஆபத்தாகலாம். அடுத்தது முதியவர்களை பக்கவாதம் பாதிக்கும்போதும் மேற்குறிப்பிட்ட பிரச்னை ஏற்படும். நுரையீரலில் சளி அடைத்துக்கொள்ள இவையெல்லாம்தான் பிரதான காரணங்கள். சளியின் அளவு அதிகமாக இருந்தாலோ, அதன் அடர்த்தி மிக அதிகமாக இருந்தாலோ அவர்களுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படும்.

இப்படி அவதிப்படும் நிலையில், அவர்களுக்கு சளி அதிகரித்ததற்கான காரணத்தை முதலில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். இன்ஃபெக்ஷன் ஏதேனும் இருந்தால், ஆன்டிபயாடிக் உள்ளிட்ட மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். பிரான்கியெக்டாசிஸ் பாதிப்பில் ஒருவருக்கு சேரும் சளியானது, ஒன்றிரண்டு டம்ளர்களுக்கு மேல் என்ற அளவில் இருக்கலாம். மாத்திரைகள் கொடுப்பதற்கு முன், அந்தச் சளியை வெளியே எடுப்பதுதான் முதல் சிகிச்சையாக இருக்கும். அதற்கு நெஞ்சுப் பகுதிக்கான பிசியோதெரபி (Chest physiotherapy ) செய்யப்பட வேண்டும். அதில் பலவகை உண்டு. சில மருத்துவமனைகளில் நோயாளியைப் படுக்க வைத்து முதுகில் தட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சளியின் சுரப்பை அசைய வைக்கச் செய்யப்படுகிற சிகிச்சை இது.
அடுத்தது 'போஸ்டுரல் டிரெய்னேஜ்' (Postural drainage ) என்று சொல்வோம். அதாவது, நுரையீரலின் வலதுபக்கத்தில் சளி இருந்தால், இடது பக்கமாக ஒருக்களித்துப் படுத்தால் ஈர்ப்புவிசை காரணமாக சளியானது சற்று கீழே இறங்கும். அது பிரதான காற்றுப்பாதைக்கு வந்ததும், இருமி, அதை வெளியேற்ற வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பது, நீராவி பிடிப்பது, சளியை இளக வைக்கும் மருந்துகள் போன்ற சிகிச்சைகளும் உள்ளன. தினமும் சளியை வெளியேற்ற வேண்டியிருக்கும். குறிப்பாக, பார்க்கின்சன்ஸ் பாதிப்புள்ளோர், புரையேறாமலிருக்க முறையான நரம்பியல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதையும் தாண்டி, சிலருக்கு புரையேறுவதைத் தற்காலிகமாகத் தடுக்க டியூப் வழியே உணவு (Nasogastric tube feeding) கொடுக்க வேண்டி வரலாம்.

ஸ்ட்ரோக் பாதித்தவர்களுக்கு தொண்டையில் நிற்கும் சளியை வெளியேற்றத் தெரியாது. விழுங்கவோ, துப்பவோ முடியாத நிலையில் சக்ஷன் போட்டு அதை வெளியேற்றுவோம். சிலர் டிரக்கியாஸ்டமி சிகிச்சை செய்திருப்பார்கள். அவர்களுக்கு சளி கோத்தால், காற்று உள்ளேயும் போகாது, வெளியேவும் வராது. அந்நியப் பொருள் அடைத்துக்கொண்ட மாதிரி இருக்கும். டிரக்கியாஸ்டமி செய்த பிறகு சரியான அக்கறை எடுக்காத நிலையில்தான் சளி கோத்து, உயிரிழப்பு ஏற்படும்.
மற்றபடி சளியாமல் மூச்சடைத்து உயிரிழப்பது என்பது மற்றவர்களுக்கு அவ்வளவு சகஜம் அல்ல. டிரக்கியாஸ்டமி செய்தவர்களுக்கு அவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்கள், சக்ஷன் போட்டு சளியை வெளியேற்றும் சிகிச்சை பற்றியும், சளி அடைத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டால் எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றியும் விழிப்பு உணர்வு இருக்க வேண்டும். ஆக்ஸிஜன் அளவை அவ்வப்போது சரிபார்க்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.