அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்?
Doctor Vikatan: சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பசி, அதிகம் சாப்பிடுகிறேனோ என்ற பயம்.. தீர்வு என்ன?
Doctor Vikatan: என் வயது 45. தினமும் காலை உணவைத் தவிர்ப்பதில்லை. ஆனாலும், அடுத்த இரண்டு மணி நேரத்தில் பசிக்கிறது. எனவே, காபி, டீயுடன் பிஸ்கட், வடை என ஏதேனும் சாப்பிடுகிறேன். அதேபோல மதிய உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரத்தில் மீண்டும் பசிக்கிறது. பஜ்ஜி, போண்டா சாப்பிடும்படி ஆகிறது. என்னையும் அறியாமல் அதிகம் சாப்பிடுகிறேனோ என்று பயமாக இருக்கிறது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் பசி எடுப்பது ஏன்... இதை எப்படி சரிசெய்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணி

இந்தப் பிரச்னைக்கான அடிப்படை காரணத்தை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில்தான் இதற்கான பதில் இருக்கிறது. காலையில் இட்லி அல்லது தோசை, மதியம் சாதம் என சாப்பிடும்போது அது சீக்கிரமே செரிமானமாகி, சீக்கிரமே ரத்தச் சர்க்கரையாக மாறிவிடும்.
உதாரணத்துடன் விளக்கினால் உங்களுக்கு இது எளிதில் புரியும். ஒரு பக்கம் மது பானங்களையும், இன்னொரு பக்கம் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், உருளைக்கிழங்கு போன்றவற்றையும் வையுங்கள். மதுபானத்தில் உள்ள ஸ்டார்ச்சும், அரிசி, கோதுமை, சிறுதானியம், உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள ஸ்டார்ச்சும் ஒன்றுதான்.
அதாவது ஆல்கஹால் எடுக்கும்போது கல்லீரல் அதை எப்படி மதிக்குமோ, அப்படித்தான் இந்த அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், உருளைக்கிழங்கு சாப்பிடும்போதும் மதிக்கும். ஆல்கஹால் எப்படி கொழுப்பாக மாறுமோ, அதே போலத்தான் கார்போஹைட்ரேட்டும் கொழுப்பாக மாறும்.

புரதச்சத்து இல்லாமல் வெறும் கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டும் உட்கொள்ளும்போது அது உடனே ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
எப்போதுமே புரதச்சத்து சாப்பிட்டால் அப்படி ரத்தச் சர்க்கரையானது சட்டென ஏறாது. உதாரணத்துக்கு, 2 இட்லி சாப்பிடப் போகிறீர்கள் என்றால், முதலில் ஒரு வடை சாப்பிட்டுவிட்டு, அதன் மேல் இரண்டு இட்லி சாப்பிட்டால் அது ரத்தச் சர்க்கரையாக மாற சற்று நேரம் எடுக்கும். அதுவே நான்கு இட்லி சாப்பிட்டால் வெகு சீக்கிரமே ரத்தச் சர்க்கரை அளவு எகிறிவிடும். கஞ்சி மட்டும் சாப்பிடும்போதும் இப்படித்தான் நடக்கும்.
காலை 8 மணிக்கு இப்படி மாவுச்சத்துள்ள பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டால், நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி 10 மணி அளவில் கொலைப்பசி வரும். காரணம், சட்டென எகிறிய ரத்தச் சர்க்கரைதான்.
உடனே உடல் பதறிப்போய், 'பிஸ்கட் சாப்பிடு, டீ குடி' என சிக்னல் கொடுக்கும். சிலருக்கு உடல் நடுங்கும். களைத்துப்போகும். காலையில் சாப்பிட்ட கார்போஹைட்ரேட்தான் இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம்.
அது தெரியாமல் மறுபடி பிஸ்கட் வடிவில் இன்னொரு கார்போஹைட்ரேட்டை உடலுக்குக் கொடுத்தால் 12 மணிக்கு மீண்டும் பசி வரும். ஸ்டார்ச் உணவுகள் சாப்பிட்டால் அடுத்த ஒன்றரை, இரண்டு மணி நேரத்தில் இப்படித்தான் நிகழும். இப்படி நடக்காமலிருக்க முதலில் புரதம், காய்கறிகள் சாப்பிட்டு, பிறகு ஸ்டார்ச் உணவுகளை அளவு குறைத்துச் சாப்பிடுவதுதான் சரியானது.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பே தண்ணீர் குடிக்க வேண்டும். ஒருகாலத்தில் உடலுழைப்பு அதிகமிருந்தது. அப்போது அவர்கள் அதிக அளவு சோறு சாப்பிட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் ஒல்லியாகவே இருந்தார்கள்.
உடலுழைப்பே இல்லாத நாமும் அப்படிச் சாப்பிட்டால் அத்தனையும் போய் தொப்பையாகத்தான் உருவாகும். எனவே, நீங்கள் சாப்பிடுகிற முறையை கவனித்து அதில் தவறு இருப்பின் மாற்றுங்கள். புரதம் சாப்பிடுவதை உறுதிப்படுத்துங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.