தாயகம் செல்ல முடியாமல் எல்லையில் முகாமிட்டுள்ள பாகிஸ்தானியர்கள்! தொடரும் தவிப்புகள்!
அட்டாரி - வாகா எல்லையில் சிக்கித் தவித்த 21 பாகிஸ்தானியர்கள் தாயகம் திரும்புவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று, சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது எனக் கருதப்படுவதினால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றது.
இரு நாடுகளும் தங்களது குடிமக்களை உடனடியாகத் தாயகம் திரும்ப அறிவுறுத்தியுள்ளன. மேலும், இந்தியாவிலுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற வேண்டும் என காலக்கெடு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இத்தகைய சூழலில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் அமைந்துள்ள அட்டாரி - வாகா எல்லையின் வழியாக இரு நாட்டு மக்களும் தங்களது தாயகங்களுக்கு திரும்பினர். ஆனால், ஏப்.30 ஆம் தேதியன்று விதிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததினால், அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டது.
எல்லை மூடப்பட்ட சூழலில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தங்களது தாயகம் செல்ல முடியாமல் நேற்று (மே.1) அங்கேயே முகாமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (மே.2) சுமார் 21 பாகிஸ்தானியர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு அவர்கள் எல்லையைக் கடந்துள்ளனர்.
இருப்பினும், சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுங்கத் துறை மற்றும் குடிவரவு அதிகாரிகளின் அனுமதிக்காக 50-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தற்போது காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவின் அட்டாரி பகுதியில் சிக்கியுள்ள குடிமக்கள் எல்லையைக் கடந்து பாகிஸ்தானின் வாகாவினுள் நுழைய தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ம.பி.: திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலி, 13 பேர் காயம்