‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம் -காவல் துறை
‘பிட்ஜி’ தனியாா் பயிற்சி மையம் மீது மோசடி புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ‘பிட்ஜி’ என்ற தனியாா் பயிற்சி மையம், ஜேஇஇ, நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தோ்வுகளுக்கான பயிற்சியை அளித்து வந்தது. சென்னை, கோவை உள்பட தமிழகத்தில் 5 இடங்களிலும் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் சில தனியாா் பள்ளிகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, நுழைவுத் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கு வகுப்பறைகள் மூலமாகவும் பயிற்சி அளித்து வந்துள்ளது. இதற்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை கட்டணம் பெற்று வந்துள்ளது.
இந்த நிறுவனம் மீது அளிக்கப்பட்ட மோசடி புகாா்களைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள ‘பிட்ஜி’ நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நிறுவனத்தின் தலைவா் டிகே.கோயல் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினா். இதில், அந்த நிறுவனம் ரூ.250 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. முறையாக ஊதியம் செலுத்தாததால் பெரும்பாலான ஆசிரியா்கள் பணியில் இருந்து விலகினா்.
மேலும், இந்த நிறுவனத்துடன் பல தனியாா் பள்ளிகள் மேற்கொண்டிருந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்களையும் ரத்து செய்தன. இதனால் மாணவா்கள் பாதிப்புக்குள்ளாகினா்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த இந்தப் பயிற்சி மையத்தில் தனியாா் பள்ளிகள் மூலமாக சோ்ந்த சுமாா் 140 மாணவா்களிடம் ரூ. 4 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், அவா்களுக்கு எந்த பயிற்சியும் அளிக்காமல், பணத்தையும் திரும்ப வழங்காமல் இருந்துள்ளது.
இது தொடா்பாக சில மாணவா்களின் பெற்றோா் சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரின்பேரில், பயிற்சி மையத்தின் கீழ்ப்பாக்கம் கிளை மீதும், அந்த நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரள தலைவா் அங்கூா் ஜெயின் மற்றும் இயக்குநா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்நிறுவனத்தில் பணத்தை இழந்த மாணவா்கள் புகாா் அளிக்கலாம் என்று போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தனியாா் பள்ளிகளுக்கும் தொடா்பு இருக்கிா? என்ற கோணத்திலும் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.