இஸ்ரேலின் கொடூரத்தால் ஆமைகளை உண்ணும் காஸா மக்கள்!
இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த ஒன்றரை வருடமாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் காஸாவின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துள்ளன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கவோ, இடிபாடுகளை அகற்றி சரி செய்யவோ போதிய கனரக வாகனங்களின்றி காஸா நிர்வாகம் தவித்து வருகிறது.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் 6 வாரங்களுக்கு போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டாலும், அது நீட்டிக்கப்படவில்லை.

காஸாவில் தண்ணீர்த் தொட்டிகள், செல்போன் கோபுரங்கள் மட்டுமல்லாது, மக்கள் வசிக்கும் பகுதிகள், பள்ளிகளிலும்கூட இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், காஸாவுக்குள் செல்லும் நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி வருகிறது. இதனால், காஸாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பச்சிளம் குழந்தைகள் முதல் பலரும் பலியாகி வருகின்றனர்.
இந்த நிலையில், உண்ண உணவின்றி தவிக்கும் காஸா மக்கள், கடற்கரையில் ஒதுங்கும் ஆமைகளை உண்பதாகத் தெரிவிக்கின்றனர். `இதுபோன்ற துரதிருஷ்டவசமான வாழ்வும் ஏற்படும் என்று கனவில்கூட நினைத்ததில்லை’ என்று பரிதாபம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க:டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?