செய்திகள் :

Fire Fly: காற்றில் காதல் தூது; தூக்கணாங்குருவியின் காவலாளி; மின்மினிப்பூச்சிகளின் 'வாவ்' வாழ்வியல்!

post image

மீபத்தில் எப்போதாவது மின்மினிப் பூச்சியைப் பார்த்தீர்களா? பார்த்தீர்களென்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். பார்த்தாலே அதிர்ஷ்டம் செய்கிற அளவுக்கு என்னவாயிற்று மின்மினிகளுக்கு என்பவர்கள், இந்தக் கட்டுரையின் கடைசி பாரா வரை சற்று பொறுத்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்னால், குட்டிக்குட்டி விளக்குகளாக நம் கண்களை மயக்கும் இந்தப் பூச்சிகளின் வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை வாவ் தருணங்கள்... அத்தனையையும் சொல்கிறார் இயற்கை ஆய்வாளர், ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் கோவை சதாசிவம்.

மின்மினி
மின்மினி

''அந்தக் காலத்தில் பழங்குடிகள் இரவில் வெளியே செல்கையில், வெளிச்சத்திற்காக இந்த ஒளிரும் பூச்சிகளைத்தான் ஒரு கண்ணாடிக்குடுவையில் போட்டு லாந்தர் விளக்கைப்போல எடுத்துச் செல்வார்களாம். பிள்ளைகள் விளையாடும் கண்ணாம்பூச்சி விளையாட்டில் அவர்கள் கண்ணாம்பூச்சி என்று குறிப்பிடுவது இந்த மின்மினிகளைத்தானாம்.

சரி, மின்மினிப்பூச்சிகளைப்பற்றி பேச ஆரம்பிக்கும்போதே, அவை எப்படி ஒளிர்கின்றன; ஏன் ஒளிர்கின்றன என்கிற கேள்விகள் நிச்சயம் உங்கள் மனங்களுக்குள் எழுந்திருக்கும்.

மின்மினிகள்
மின்மினிகள்

இந்த ஒளிரும் பூச்சிகளின் உடலில் ஒரு ரசாயனக்கூடமே இருக்கிறது எனலாம். அந்த ரசாயனங்கள் இந்தப் பூச்சிகளின் அடிவயிற்றில் இருக்கிறது. அந்த ரசாயனங்கள் ஒன்று சேர்ந்தால்தான், மின்மினிகள் ஒளிரும். அப்படி அந்த ரசாயனங்கள் ஒன்று சேர்வதை லூசிஃபெரின் (Luciferin) என்று குறிப்பிடப்படுகிறது. அப்படி ரசாயனங்கள் ஒன்று சேரும்போது, வீசும் காற்றானது இந்தப் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி இவற்றை ஒளிர வைக்கின்றன. இந்த ஒளிரும் தன்மை உயிர்வாழ்விகளில் அபூர்வமான ஒன்று. இதை பயோலுமினிசீன்ஸ் (Bioluminescence) என்கிறது அறிவியல். ஒளிரும் மின்மினிப்பூச்சிகளின் பின்புறத்தைத் தொட்டால் சுடுமா என்றால், சுடாது.

முதிர்ச்சியடைந்த மின்மினிப் பூச்சிகள் மட்டும்தான் ஒளிருமா என்றால், இதன் முட்டைகளும் ஒளிரும்; அந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்களும் ஒளிரும்.

கோவை சதாசிவம்
கோவை சதாசிவம்

முதல் காரணம், இனச்சேர்க்கைக்காகத்தான். ஆண் மின்மினிகள் பூமியில் இருந்து 3 அடி உயரத்தில் பறந்துகொண்டு, தன் ஒளிர்தல் வழியே அதுவரை சந்தித்திராத தன் காதல் இணைக்கு சிக்னல் அனுப்பும். ஒவ்வோர் ஆணும் ஒவ்வொருவிதமாக தன் சிக்னலை வெளிப்படுத்தும். எப்படித் தெரியுமா? ஆண் மின்மினிகள் மின்னியபடி பறக்கும்போது ஒவ்வொன்றும் தனக்கென ஒரு வடிவத்தை ஏற்படுத்துமாம். தங்களுக்காக ஆண் மின்மினிகள் செய்யும் இந்தக் காதல் போராட்டங்களையெல்லாம், தரையின் மீதோ அல்லது ஏதோவொரு செடியின் மீதோ அமர்ந்துகொண்டு பெண் மின்மினிகள் பார்த்துக்கொண்டிருக்கும். ஆண் மின்மினிகள் ஏன் பூமியில் இருந்து 3 அடி உயரத்தில் பறந்துகொண்டு தன் காதல் தூதை அனுப்புகிறது என்று இப்போது புரிகிறதா? எந்த ஆணுடைய சிக்னல் தனக்குப் பிடிக்கிறதோ, அதற்கான சம்மதத்தை தன் ஒளிர்தல் வழியாக பெண் மின்மினிகள் தெரியப்படுத்தும். அப்புறமென்ன, காதல், மின்மினிகளுக்கும் உரித்தானதுதானே...

கூட்டம் கூட்டமாக மின்மினிப் பூச்சிகள் ஒளிர்வதற்கு இரண்டாவது காரணம், உணவு இருக்கும் இடத்தைத் தன் கூட்டத்துக்குத் தெரியப்படுத்துவதற்கு! இந்த இடத்தில் நமக்கான உணவு இருக்கிறது என்பதைச் சொல்வதற்கான ஒரு மொழியாகவும் தன் ஒளிர்தலைப் பயன்படுத்துகிறது மின்மினி. தவிர, தன் வாழ்விடத்தில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா, எதிரிகளின் நடமாட்டம் இருக்கிறதா என்பதையும் இந்த ஒளிர்தல் வழியாகத்தான் சக மின்மினிகளுக்குத் தெரியப்படுத்துகின்றன.

மின்மினிகள்
மின்மினிகள்

குளிர்காலத்தில் மண்ணுக்குள் பதுங்கியிருக்கும் மின்மினிகள், கோடையில் மின்னியபடி பறந்துக்கொண்டிருக்கும். இந்தக்காலத்தில்தான், பெண் மின்மினிகள் முட்டைகளை இட்டு மண்ணுக்குள் புதைத்துவிடும். 4 வாரங்களில் இந்த முட்டைகளில் இருந்து புழுக்கள் வெளிவரும். பின்னர் அவை பூச்சிகளாகப் பரிணாமம் அடையும்.

மின்மினிகளின் முக்கியமான எதிரி யார் தெரியுமா? 'பக்கி' என்கிற இரவாடி பறவைதான் அந்த எதிரி. ஆங்கிலத்தில் இந்தப் பறவையை 'Night Jar' என்போம். மின்மினியும் இரவாடிதானே... அதனால், பறந்துகொண்டிருக்கும்போதே பக்கிகளின் வாயில் வசமாக சிக்கிக்கொள்ளும். ஆனால், சிறிது நேரத்திலேயே பக்கிகள் மின்மினியைக் கக்கிவிடும். ஏன் தெரியுமா? மின்மினிகளின் உடலில் இருக்கிற ரசாயனங்கள் அதை ஒரு சுவையற்ற பூச்சியாக வைத்திருக்கிறது. இதை உண்ண முயற்சி செய்யும் பக்கி, எந்த ஒரு சுவையும் இல்லாத மின்மினிகளைக் கக்கி விடும். தவிர, தவளைகளுக்குப் பிடித்தமான உணவும் மின்மினிகள்தான்'' என்கிறார் கோவை சதாசிவம்.

தவளை
தவளை

தூக்கணாங்குருவிகள், தங்களுடைய கூட்டில் மின்மினிப்பூச்சிகளைக் கொண்டு போய் ஒட்ட வைத்துக்கொள்ளும் என்கிற கதைகளை சிறுவயதில் கேட்டிருப்போம். உண்மையிலேயே அப்படித்தான் நடக்கிறதா? அதைப்பற்றியும் விளக்க ஆரம்பித்தார்.

''தூக்கணாங்குருவிகள் தங்களுடைய கூட்டைத் துளைகள் இல்லாமல் நேர்த்தியாக பின்ன விரும்புகிற ஒரு பறவை. அப்போதுதான், அதன் எதிரிகளிடம் இருந்து அவை தப்பிப் பிழைத்து வாழ முடியும். தங்களுடைய கூடு வீசும் காற்றில் பறந்துவிடாமல் இருக்கவும், கூட்டில் இருக்கிற துளைகளை மறைக்கவும் வயல்வெளியில் இருக்கிற சேற்றை தன் அலகால் அள்ளி கூட்டுக்குள் பூசி விடும். மின்மினிகள் தங்கள் முட்டைகளை மண்ணுக்கடியில் புதைத்து வைக்கும் என்று சொன்னேன் அல்லவா? தூக்கணாங்குருவிகள் அள்ளிச் செல்லும் அந்தச் சேற்றில் மின்மினிகளின் முட்டைகளும், முட்டைகளில் இருந்து வெளிவந்த புழுக்களும் இருக்கும். தூக்கணாங்குருவி கூட்டில் பூசப்பட்ட சேற்றில் இருக்கிற மின்மினியின் முட்டைகளும் புழுக்களும் இரவில் ஒளிர ஆரம்பிக்கும். இதைத்தான் நாம் எல்லோரும் தூக்கணாங்குருவியே மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து தங்கள் கூட்டுக்குள் ஒட்டவைத்துக் கொண்டது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை இதுதான்.

தூக்கணாங்குருவி கூடு
தூக்கணாங்குருவி கூடு

தூக்கணாங்குருவிகளின் முட்டைகளையும் குஞ்சுகளையும், பாம்புகளும் ஓனான்களும் விரும்பி சாப்பிட வரும். ஆனால், அதன் கூட்டுக்குள் திடீர் திடீரென மின்மினிப்பூச்சிகள் ஒளிர்வதால், அவை பயந்து கொண்டு ஓடியே விடும்.

மின்மினிகள் என்ன சாப்பிடும் தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவற்றுக்குப் பிடித்தவை வயல்வெளிகளில் இருக்கிற நத்தைகளும் மண்புழுக்களும்தான். இத்தனை சிறிய பூச்சியால் அத்தனை பெரிய நத்தையைச் சாப்பிட முடியுமா என்கிற கேள்வி உங்களுக்குள் எழலாம்.

நத்தை
நத்தை

மின்மினிகள், நத்தைகளை எப்படி சாப்பிடுகிறது? என்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். மெள்ள மெள்ள ஊர்ந்துகொண்டிருக்கிற நத்தையின் மேல் உட்கார்ந்துகொண்டு, அதன் தலையில் தன்னுடைய கொடுக்குபோன்ற உறுப்பால் ஒரேயொரு கொட்டு. அவ்வளவுதான், மின்மினியின் உடலில் இருக்கிற நொதி ஒன்று நத்தையின் உடலுக்குள் சென்று விடும். வாங்கிய கொட்டின் வலி தாங்காமல் நத்தை தன் ஓட்டுக்குள் சென்று விடும். பிறகு, மின்மினியின் நொதி காரணமாக அந்த மெல்லுடலி ஒரு கூழ்மம்போல உருகி கூட்டுக்குள் தேங்கி நிற்கும். அதை அப்படியே ஜெல்லியை போல உறிஞ்சி சாப்பிட்டு விடும் மின்மினிகள். மின்மினிகளால் உண்ணப்படும் இந்த நத்தைகள்தான் பயிர்களின் எதிரி என்று தனியாக நான் சொல்லத் தேவையில்லை. பயிர்களின் இளம் குருத்துகளை தின்று தீர்த்து விடும் நத்தைகள். அதைத் தின்று தீர்ப்பது மின்மினிகள்.

ஆனால், விவசாயிகள் வயல்வெளியில் எப்போது பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க ஆரம்பித்தார்களோ, அப்போதிருந்தே மின்மினிகளும் படிப்படியாக மாண்டு்கொண்டே வருகின்றன. விவசாயிகளுக்கு நன்மை செய்கின்ற எத்தனையோ பூச்சிகளை கொன்றொழித்த பூச்சிக்கொல்லி மருந்துகளிடம் இருந்து மின்மினிகளும் தப்பி பிழைக்கவில்லை. கூடவே, காலநிலை மாற்றங்கள், பெருகிப்போன கட்டுமானங்கள், குறைந்துபோன வயல்வெளிகள், இரவில் செயற்கை விளக்குகளின் வெளிச்சம் காரணமாக இனப்பெருக்கம் செய்ய முடியாமை போன்ற காரணங்களால் மின்மினிகள் வேகவேகமாக அழிந்துகொண்டே வருகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அடுத்த தலைமுறைக்கு மின்மினிப்பூச்சிகள் பற்றிய கதைகள் மட்டுமே மிச்சம் இருக்கும்.
அடுத்த தலைமுறைக்கு மின்மினிப்பூச்சிகள் பற்றிய கதைகள் மட்டுமே மிச்சம் இருக்கும்.

உலகம் முழுக்க கிட்டத்தட்ட 2000 வகை மின்மினிகள் இருக்கின்றன. அவை ஆண்டுதோறும் 1 முதல் 2 சதவிகிதம் வரை குறைந்துகொண்டே வருவதாக அவர்கள் வருத்தமுடன் பகிர்ந்து இருக்கிறார்கள். இப்படியே சென்றால் அவர்கள் சொன்னதுபோல நம் அடுத்த தலைமுறைக்கு மின்மினிப்பூச்சிகள் பற்றிய கதைகள் மட்டுமே மிச்சம் இருக்கும். நம் வீட்டைச் சுற்றியும் வயல்வெளிகளிலும் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்த அந்த சின்னஞ்சிறு பூச்சிகளை நம் அடுத்த தலைமுறை பார்க்க முடியாமலே போகலாம்'' என்கிறார் கோவை சதாசிவம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

”ராஜ நாகம் என்பது ஓர் இனம் அல்ல..” - விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்த ஆச்சரிய தகவல்கள் என்ன?

ராஜ நாகம் என்பது ஓர் இனம் அல்ல என்று விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு European Journal of Taxonomy இதழில் வெளியிட்டதன் படி, ராஜநாகம் என்பது ஓர் இனம் அல்ல நான்கு தனித்தனி இனங்கள்... மேலும் பார்க்க

தனுஷ்கோடி: இலங்கை கடற்பகுதிகளில் மிதந்த ரசாயன துகள்கள்; மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கத் தடை

லைபீரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று கடந்த மே மாதம் 24-ம் தேதி கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் கடலில் மூழ்கியது.இதனால் இந்தக் கப்பலிலிருந்த கன்டெய்னர்கள் முழுதும் கடலில் மூழ்கின. இந்த கன்டெய்னர... மேலும் பார்க்க

சென்னை காசிமேடு: மீன்பிடி தடை காலம் முடிவு; மீன் பிடித்தலுக்குத் தயாராகும் மீனவர்கள் | Photo Album

மீன் பிடிJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசர... மேலும் பார்க்க

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உதவி உபகரணங்கள் அறிமுக கண்காட்சி! | Photo Album

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட... மேலும் பார்க்க

மெரினா நீல கடற்கரை திட்டம்: கடற்கரையை அழகுபடுத்தப் போகும் தென்னைகள், சாய்வு நாற்காலிகள் |Photo Album

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட... மேலும் பார்க்க

Lion: 'இது என்னடா சிங்கங்களுக்கு வந்த சோதனை’ சஃபாரி வாகனங்களைத் தாக்காமல் இருப்பதன் காரணம் தெரியுமா?

சஃபாரி வாகனங்களைத் தாக்காமல் இருப்பதன் காரணம் தெரியுமா?ஆப்பிரிக்க காடுகளுக்குள்ள 'லயன் சஃபாரி' போறவங்க, 'முழுசா மூடப்படாத ஜீப்'கள்ல செல்கிற ரீல்ஸ் அடிக்கடி கண்கள்லபட்டுக்கிட்டே இருக்கு. சில ரீல்ஸ்ல, ர... மேலும் பார்க்க