Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
Health: கரும்பு ஜூஸை ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கலாமா? - டயட்டீஷியன் தரும் எச்சரிக்கை
வெயில் காலம் ஆரம்பித்தவுடனே அனைவரும் அருந்தும் பானம் கரும்பு ஜூஸ். கைப்பிடி ஐஸ் கட்டிகளை கரும்பு ஜூஸில் போட்டுவிட்டால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடித்துவிடுகிறது இந்த ஜூஸை...
தற்போது, பகலெல்லாம் வெயில், இரவுகளில் மழை என்று இருந்தாலும், வெயில் நேரத்தில் கரும்பு ஜூஸையே பலரும் நாடிக்கொண்டிருக்கிறார்கள்.
கரும்பு ஜூஸ் குடிப்பதற்கு முன்னால் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களின் இந்த எச்சரிக்கை டிப்ஸைப் படித்து விடுங்கள்.
*பொங்கல் நேரத்தில் வரும் ஊதா நிற கரும்பில் நீர்ச்சத்து குறைவு. வெள்ளைக்கரும்பில் சக்கைக் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருக்கும்.
வெள்ளை கரும்பு ஜூஸை அனைவரும் தாராளமாகக் குடிக்கலாம். எந்த ஜூஸையும் உணவு சாப்பிடும்போது குடிக்கக்கூடாது. இது கரும்பு ஜூஸுக்கும் பொருந்தும்.
* கோடைக்காலத்தில் அதிக வியர்வை ஏற்படுவதால், உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. அதற்குக் கரும்பு ஜூஸ் ஒரு நல்ல பானம்.
காலை உணவு சாப்பிட்ட பிறகு 11 மணி அளவில் இதை அருந்தலாம். அல்லது மதிய நேரத்தில் 3 முதல் 4 மணி அளவில் டீ அல்லது காபிக்குப் பதிலாக இதைக் குடிக்கலாம்.
* ஒரு நாளைக்கு 200 மி.லி. குடித்தால் போதும்; அதுவே உடலுக்குப் போதுமானது.

* கரும்பு ஜூஸில் இஞ்சியும் எலுமிச்சையும் சேர்த்துத் தருவார்கள். இவையும் பல நன்மைகளை நம் உடலுக்கு அளிப்பவையே.
* பலர் கரும்பு ஜூஸை பார்சல் செய்து, வீட்டுக்கு எடுத்துப்போய் ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கிறார்கள். அப்படிச் செய்தால், ஒரு நாளுக்குள் குடித்துவிட வேண்டும்; இல்லையெனில் அது புளித்துவிடும்.
எந்த ஜூஸாக இருந்தாலும் உடனடியாகக் குடிப்பதே நல்லது. கரும்பு ஜூஸில் பொட்டாசியம், கால்சியம் நிறைய உள்ளன. ஃப்ரிட்ஜில் வைத்து அதை வீணாக்க வேண்டாம்.
* கரும்பு ஜூஸில் வெயிலுக்கு இதமாக ஐஸ் கட்டிகள் சேர்ப்பார்கள். சுத்தமான ஐஸ் கட்டிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
* எந்த இடத்தில் கரும்பு ஜூஸ் தயாரிக்கப்படுகிறதோ, அந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். கரும்புச்சக்கை ஒரே இடத்தில் சேர்வதால், அதிலிருந்து வரும் ஈக்கள் கோடைக்காலத்தில் மஞ்சள் காமாலை போன்ற நோய்களை எளிதாக ஏற்படுத்தி விடும்.
ஆனால், ஏற்கெனவே மஞ்சள் காமாலை வந்தவர்கள் உணவு சாப்பிட முடியாமல் இருக்கும்போது, சுத்தமாகத் தயாரிக்கப்படுகிற கரும்பு ஜூஸை அருந்தினால் எனர்ஜியாக உணர்வார்கள்.

* பெரும்பாலான ரோட்டோரக் கடைகளில் டம்ளர்களைச் சரியாகக் கழுவுவதில்லை. இதனால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளன. அதனால், பேப்பர் கப்பில் வாங்கிக் குடிக்கலாம்.
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரும்பு ஜூஸைக் குடிக்கவே கூடாது.