IND vs NZ : ``நியூசிலாந்துக்கு எதிராக ஆடுவது சவால்தான், ஆனாலும்..." - டாஸில் ரோஹித் உறுதி
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதவிருக்கின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியின் டாஸ் முடிந்திருக்கிறது. நியூசிலாந்து அணிதான் டாஸை வென்றது. சாண்ட்னர் முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். ரோஹித் தொடர்ந்து 15 வது முறையாக டாஸில் தோற்றிருக்கிறார்.

டாஸில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேசியதாவது, ``இங்கே நாங்கள் முதல் பேட்டிங்கும் செய்திருக்கிறோம். சேஸ் செய்திருக்கிறோம். எனக்கு முதலில் பேட்டிங் செய்வதிலும் சேஸ் செய்வதிலும் ஒன்றும் இல்லை. நாங்கள் கடந்த போட்டியில் நன்றாக சேஸூம் செய்திருக்கிறேன். நியூசிலாந்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதில்தான் கவனமாக இருக்க நினைக்கிறேன். டாஸை பற்றிக் கவலைப்படாமல் என்ன செய்கிறோமோ அதைச் சிறப்பாக செய்யவேண்டும் என்றே ட்ரெஸ்சிங் ரூமில் பேசியிருக்கிறோம். நியூசிலாந்து அணி கடந்த பல ஆண்டுகளாக மிகச்சிறந்த அணியாக ஆடி வருகிறார்கள்.
அதுவும் ஐ.சி.சி தொடர்களில் இன்னும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். இது எங்களுக்கு மற்றுமொரு சவால்தான். அவர்களை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை.' என்றார்.

டாஸில் நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னர் பேசியதாவது, "இது நல்ல விக்கெட்டாக இருக்கிறது. கடந்த முறை இந்தியாவுடன் ஆடிய பிட்ச்சை போலத்தான் இருக்கிறது. கொஞ்சம் நல்ல ஸ்கோரை எடுத்து இந்தியாவின் மீது அழுத்தம் ஏற்ற வேண்டும். பிட்ச் போக போக மெதுவாகும் என நினைக்கிறேன். மேட் ஹென்றி இன்றைய அணியில் இல்லை. அவருக்கு பதில் ஸ்மித் அணியில் இருக்கிறார்." என்றார்.