சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!
Man Mom: மன அழுத்தம்; அணைப்பு... சீன இளம் பெண்களிடம் வைரலாகும் 'ஆண் அம்மா' - அப்படி என்றால் என்ன?
தற்போதைய உணவு கலாசாரம், நுகர்வு கலாசாரம், பொருளாதாரத் தேவைகள் என சமீப காலமாக மன அழுத்தத்துக்கான காரணங்கள் அதிகரித்திருக்கிறது. வேலை பளு, காதல் தோல்வி, குடும்ப சூழல் என இளைஞர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த மனஅழுத்தத்திலிருந்து விடுபட பல்வேறு முயற்சிகள், சிகிச்சைகள் என அதற்கான தீர்வுகளை நோக்கியும் நகர்ந்துக்கொண்டிருக்கிறது உலகம். அப்படி சமீபமாக சீனாவில் ஒரு வித்தியாசமான போக்கு அதிகரித்து வருகிறது. இளம் பெண்களின் 'ஆண் அம்மா' தேடல்தான் அது.

ஒரு தனித்துவமான ஆறுதல்
ஆண் அம்மா என அழைக்கப்படும் இளைஞரை அணைத்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தம் குறைவதாக அந்தப் பெண்கள் நம்புகிறார்கள். `ஆண் அம்மா’ என்பவர், மென்மையானவர்களாகவும், பெண்மை குணங்களுடன் அமைதியானவர்களாகவும் இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
மால் போன்ற பொது இடங்களில் சுமார் 5 நிமிடங்கள் மட்டும் அணைத்துக் கொண்டிருப்பதற்கு 20 முதல் 50 யுவான் (சுமார் ரூ. 250 முதல் ரூ. 600 வரை) கட்டணமாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற அணைப்பு அவசரமான உலகில் ஒரு தனித்துவமான ஆறுதலை வழங்குகிறது எனக் கூறுகிறார் இளம் பெண் ஒருவர்.
மன அழுத்தத்தில் இருக்கும் ஒரு கல்லூரி மாணவி, ``நான் படிப்பின் ஆய்வறிக்கை தொடர்பாக மன அழுத்தத்தில் இருக்கிறேன். அதை சமாளிக்க ஒரு வகையான, பொருத்தமான "ஆண் அம்மா"வின் அரவணைப்பு தேவை. அதற்காக பணம் செலுத்த தயாராக இருக்கிறேன்" என சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்தப் போக்கு பொதுமக்களின் கவனத்தைப் பெற்றது.
ஒரு பெண் சமூக ஊடகத்தில்,``நான் மேல்நிலைப் பள்ளியில் ஒரு முறை ஆண் அம்மா-வால் ஐந்து நிமிடங்கள்அணைத்துக் கொள்ளப்பட்டேன். அப்போது மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவரது பதிவு வைரலானது. அதைத் தொடர்ந்து பலரும் தங்கள் அனுபவங்களை பகிரத் தொடங்கியிருக்கிறார்கள். பலரும் ஆண் அம்மா அணைப்பு தேவை எனத் தேடவும் தொடங்கியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக பேசிய ஆண் அம்மா ஒருவர், ``எனது சேவை மற்றவர்களுக்கு உண்மையிலேயே உதவுகிறது என்று நம்புகிறேன். எனது வாடிக்கையாளர்கள் பலர் பதட்டம், வேலை தொடர்பான மன அழுத்தத்துடன் போராடுகிறார்கள்.
ஏப்ரல் மாதம் மட்டும் 34 அணைப்புகளைக் கொடுத்து, 1,758 யுவான் (சுமார் ரூ. 21,000) சம்பாதித்தேன். இந்த அணைப்பின் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. ஆனால், கட்டணம் வசூலிப்பது தொழில்முறை என்ற அடிப்படையில், அந்தப் பெண்களுக்கும் எனக்குமான ஒரு எல்லையை வகுத்துகொள்கிறேன்." என்றார்.
அதே நேரம் இந்தப் போக்கை பலரும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.