Ooty: ஈட்டி மரங்கள் மீது அத்துமீறல்; பிரபல கான்ட்ரக்டர் ராயன் மீது வழக்கு; வனச் சட்டம் சொல்வது என்ன?
நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன.
தனியார் நிலத்திலிருந்தாலும் இந்த மரங்களை வெட்டத் தடைகளும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள சேரம்பாடி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் இருக்கும் விலை உயர்ந்த 18 ஈட்டி மரங்களைப் பட்டுப் போகச் செய்து, வெட்டும் முயற்சியாகக் கிளைகளை அகற்றியும் பட்டைகளை உரித்திருப்பதாகவும் வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது.
சம்மந்தப்பட்ட தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர், சட்டவிரோதமாக ஈட்டி மரங்கள் மீது அத்துமீறல் நடந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இது தொடர்பாக 10 பேர் மீது வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் பின்னணி குறித்துத் தெரிவித்த கூடலூர் வனக்கோட்ட அதிகாரிகள், "கூடலூரைச் சேர்ந்த பிரபல கான்ட்ரக்டரான ராயன் உள்ளிட்ட 10 பேருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் ஈட்டி மரங்கள் உள்ளன.
விலை உயர்ந்த இந்த மரங்களை வெட்டத் திட்டமிட்ட இவர்கள் பட்டுப்போகச் செய்யும் முயற்சியாக மரங்களின் கிளைகளை வெட்டியிருக்கிறார்கள்.

மேலும் பட்டைகளையும் உரித்திருக்கிறார்கள். 18 மரங்களும் பட்டுப்போனதும் வெட்டிக் கொள்ள திட்டமிட்டு வந்திருக்கிறார்கள்.
ரோஸ்வுட் எனப்படும் விலை மதிக்க முடியாத ஈட்டி மரங்களின் கிளைகளை வெட்டுவது கூட வனப் பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும்.
10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் " என்றனர்.