நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் தோற்கின்றன; ஆர்சிபிக்கு ஆதரவு: சேவாக்
PBKS vs MI: 'மும்பைக்குத் தோல்வியைத் தந்த 3 முடிவுகள்!'- இறுதிப்போட்டிக்கு எப்படி சென்றது பஞ்சாப்?
'பஞ்சாப் வெற்றி!'
தலைவனாக முன் நின்று பஞ்சாபை வழிநடத்தி சிறப்பாக ஆடி இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஸ்ரேயஸ் ஐயர். ப்ளே ஆப்ஸ் போட்டிகளில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்த மும்பை அணி சின்னச்சின்ன தவறுகளைச் செய்து சறுக்கி தோற்றிருக்கிறது. மும்பை செய்த தவறுகள் என்னென்ன? பஞ்சாப் எப்படி வென்றது?

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்தான் டாஸை வென்றிருந்தார். மழை வருவதைப்போல இருப்பதால் சேஸிங் செய்யப்போவதாக அறிவித்தார்.

மும்பை அணி முதலில் பேட்டிங். அஹமதாபாத் மைதானத்தை பொறுத்தவரைக்கும் அது பேட்டர்களுக்கு சாதகமான மைதானம். நடப்பு சீசனிலேயே இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் ஆவரேஜ் ஸ்கோர் 221 ஆக இருக்கிறது. அதேமாதிரி, மும்பை அணியும் 200 + ரன்களை அடித்த போட்டிகள் எதிலும் தோற்றதே இல்லை.
'மும்பை பேட்டிங்...'
ஆக, முதலில் பேட் செய்யும் மும்பைக்கான இலக்கு 220தான். ஆனால், அவர்களால் 20 ஓவர்களில் 204 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 15-20 ரன்களை குறைவாகத்தான் எடுத்திருந்தனர். போட்டியை நன்றாகத்தான் ஆரம்பித்திருந்தனர். பவர்ப்ளேயில் 65 ரன்களை எடுத்திருந்தனர். ரோஹித் மட்டுமே அவுட் ஆகியிருந்தார். அதிலும் ஒமர்சாய் ரோஹித்துக்கு ஒரு கேட்ச்சை கூட ட்ராப் செய்திருந்தார். நல்லவேளையாக இது கடந்த போட்டியை போல பெரிய ஆபத்தாக மாறவில்லை.

ஸ்டாய்னிஸின் ஓவரில் ரோஹித் கொடுத்த அடுத்த கேட்ச்சையே வைஷாக் விஜயகுமார் பிடித்தார். பவர்ப்ளேயில் 65 ரன்கள் கிடைத்ததற்கு பேர்ஸ்ட்டோவே காரணம். 24 பந்துகளில் 38 ரன்களை அடித்திருந்தார். பவர்ப்ளே முடிந்தவுடனேயே வைஷாக் விஜயகுமாரின் பந்தில் அவுட் ஆகிவிட்டார். இதன்பின்னர் திலக் வர்மாவும் சூர்யாவும் கூட்டணி சேர்ந்தனர். இது ஒரு நல்ல பார்ட்னர்ஷிப். இருவரும் இணைந்து 72 ரன்களை சேர்ந்திருந்தனர்.
'ஆயுதமான ஸ்லோயர் ஒன்கள்!'
பஞ்சாபின் பெரிய நம்பிக்கையான சஹலை அடித்து ஆடினர். இதனால் மும்பையின் ரன்ரேட்டும் பெரிதாக கீழே விழவில்லை. 10 க்கு நெருக்கமாகவே முன்னேறிக் கொண்டிருந்தனர். ஆனால், அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றவும் செய்தனர். சஹாலின் ஓவரில் சூர்யா காலி. ஜேமிசனின் ஓவரில் திலக் வர்மா காலி. இருவரும் தலா 44 ரன்களை எடுத்திருந்தனர். பஞ்சாப் பௌலர்களின் ஒரே ஆயுதமாக ஸ்லோயர் ஒன்கள்தான் இருந்தது. வேகத்தை குறைத்து குறைத்து பேட்டர்களை ஷாட் ஆட தடுமாற வைக்க முயன்றனர். சில சமயங்களில் அது Predictable ஆகவும் இருந்தது. ஆனாலும் பலனைக் கொடுத்தது.

மும்பை அணியை அந்த 220 ரன்களை எடுக்காமல் தடுத்து நிறுத்தியது இவர்களின் ஸ்லோயர் ஒன் தான். கடைசி 5 ஓவர்களில் மிகப்பெரிதாக எந்த ஓவரும் அமையவில்லை. ஒரே ஒரு ஓவரில் 14 ரன்கள் வந்தது. அவ்வளவுதான். ஹர்திக்கும் நமன் தீரும் அவுட் ஆகியிருந்தனர். இதனால்தான் மும்பை அணி 204 ரன்களை மட்டுமே எடுத்தது. அஹமதாபாத்தின் சராசரியை கூட அந்த அணியால் எட்ட முடியவில்லை.
'பஞ்சாப் சேஸிங்!'
'பஞ்சாபுக்கு 205 ரன்கள் டார்கெட். என்னதான் தேவைப்பட்டதை விட 15-20 ரன்கள் குறைவு என்றாலும் மும்பை அணி சவாலளித்தது. மும்பை அணியின் பௌலர்களுமே அந்த ஸ்லோயர் ஒன்களைத்தான் அதிகம் வீசினர். பவர்ப்ளேக்குள்ளாகவே ஓப்பனர்கள் பிரியான்ஷ் ஆர்யாவும் பிரப்சிம்ரன் சிங்கும் அவுட் ஆகியிருந்தனர். போல்ட்டும் அஸ்வனி குமாரும் இவர்களின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர். இடையில் ஜாஷ் இங்லிஷ் சம்பவம் செய்தார். பும்ராவின் ஒரே ஓவரில் 20 ரன்களை அடித்திருந்தார். ஆனால் இந்த இங்லிஷை ஹர்திக் ஒரு ஸ்லோ ஷார்ட் பிட்ச் டெலிவரியில் வீழ்த்தினார்.

72-3 என்ற நிலையில் ஸ்ரேயஸூம் நேஹல் வதேராவும் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் இணைந்து 84 ரன்களை சேர்த்திருந்தனர். ஸ்ரேயஸ் நின்று பக்குவமாக ஆடினார். முதலில் கொஞ்சம் நேரமெடுத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் தேவைப்பட்ட ரன்ரேட் 12 ஐ கடந்தது. அழுத்தம் ஏறுவதை உணர்ந்த ஸ்ரேயஸ் ரீஸ் டாப்ளே வீசிய 13 வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டு போட்டியை அப்படியே மாற்றினார். போட்டி பஞ்சாபின் கட்டுக்குள் வந்தது. ஆனாலும் மும்பை அடுத்து ஒன்றிரண்டு விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்துக்குள் வர பார்த்தது. நேஹல் வதேராவை அஸ்வனி குமார் வீழ்த்தினார். சஷாங்க் சிங் ரன் அவுட் ஆனார். ஆனாலும் ஸ்ரேயாஸ் ஐயர் ஓயவில்லை. 27 பந்துகளில் அரைசதத்தைக் கடந்திருந்தார்.
போட்டியை வென்று கொடுக்க வேண்டும் என்ற வெறியோடு நின்று ஆடினார். கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் தேவைப்பட்டது. 19 வது ஓவரை அஸ்வனி குமார் வீசினார். இந்த ஓவரில் மட்டும் 4 சிக்சர்களை அடித்து ஒரு ஓவரை மீதம் வைத்து போட்டியை முடித்துக் கொடுத்தார். பஞ்சாப் அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஸ்ரேயாஸ் 41 பந்துகளில் 87 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

'மும்பை சொதப்பிய இடஙகள்!'
மும்பை அணி மூன்று முக்கியமான தவறுகளை செய்திருந்தது. முதலில் பேட்டிங்கில் ஆரம்பித்த வேகத்துக்கு 220 ரன்களை கடந்திருக்க வேண்டும். அதேமாதிரி, நேஹல் வதேரா 10 ரன்களில் இருந்த போது போல்ட் ஒரு கேட்ச்சை தவறவிட்டார். வதேராவும் ஸ்ரேயாஸூம் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் போட்டியின் திருப்புமுனை. பௌலிங் ரொட்டேஷனிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சாண்ட்னர் 2 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். அவருக்கு இன்னும் 2 ஓவர்கள் மீதமிருந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் ஸ்ரேயஸின் Captain's Knock. அதை மும்பையால் தடுக்க முடியவில்லை.

18 வருட ஐ.பி.எல் வரலாற்றில் பஞ்சாப் அணி இரண்டாவது முறையாக இப்போது இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கிறது. எல்லாப் புகழும் ஸ்ரேயாஸூக்கே!