Putin: 3 மணி நேர பேச்சுவார்த்தை: புதினின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப்! - போர் முடிவுக்கு வருமா?
2022-ம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் 22 சதவிகித பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியிருக்கிறது. இதற்கிடையில், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் - ரஷ்யாப் போரை நிறுத்த முயற்சி செய்து வருகிறார். அதற்காக ரஷ்ய அதிபர் புதினுடன் 4 முறை ட்ரம்ப் ஆலோசனை செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, நேற்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்கா, ரஷ்ய அதிபர்கள் நேரடியாக சந்தித்து உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
விமான தளத்தில் ரஷ்ய அதிபர் புதினை கைதட்டி வரவேற்ற ட்ரம்ப், புதினுடன் சுமார் 3 மணி நேரம் உரையாற்றினார். அதன்பிறகு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ரஷ்ய அதிபர் புதின், ``உக்ரைன் எங்களுடைய சகோதர நாடாகவே கருதுகிறோம். இரு நாடுகளின் வேர்களும் ஒன்று. ஆனால் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் போர் மூண்டது. இது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. இன்றைய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. உக்ரைனில் அமைதி திரும்ப புதிய பாதை திறந்திருக்கிறது.
ஆனால், உக்ரைனும் ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். இன்றைய தின பேச்சுவார்த்தையின் மூலம் ரஷ்யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம் உக்ரைன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அதோடு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவும் மேம்படும். உக்ரைன் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்" என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``இன்றைய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. நல்ல முன்னேற்றத்தை உணர முடிந்தது. ஆனால், எந்த ஒப்பந்தமும் இதுவரை கையெழுத்தாகவில்லை. உக்ரைன் விவகாரத்தை முடித்துவைக்க ஜெலன்ஸ்கியுடனும் நேட்டோ அமைப்பு தலைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அதற்கான முயற்சிகளை நான் முன்னெடுக்கிறேன். எனக்கும் புதினுக்குமான நட்பு இன்னும் நீடிக்கிறது. ரஷ்யா குறித்து பரப்பப்படும் எதிர்மறையான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளே. உக்ரைன் போரை நாங்கள் நிறுத்துவோம்." என்றார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகஸ்ட் 18-ம் தேதி (நாளை) அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்கிறார். அப்போது அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியான தகவலில், கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளைக் கொண்ட ஒரு பகுதியான டான்பாஸை விட்டு உக்ரைன் இராணுவம் வெளியேற வேண்டும்.
அதற்கு பதிலாக, தெற்கு உக்ரைனில் உள்ள கருங்கடல் துறைமுகப் பகுதியான கெர்சன் மற்றும் சபோரிஷியாவில் ரஷ்யப் படைகள் தங்கள் தாக்குதலை நிறுத்தும் என புதின் கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அதிபர் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்ததாகவும், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.