செய்திகள் :

`RSS 100’ அஜெண்டா; அதிமுக-வுக்கே அறிமுகம்! - மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் Detailed Spot Report!

post image

இரண்டு நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி ஒடிசாவின் புபனேஷ்வருக்கு சென்றிருந்தார். அங்கே பா.ஜ.க ஆட்சியமைத்தது ஓராண்டு நிறைவதை கொண்டாடும் விழா அது. நிகழ்வில் மைக் பிடித்த மோடி,

மோடி
மோடி

'சமீபத்தில் G7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கனடா சென்றிருந்தேன். அப்போது அமெரிக்க அதிபர் என்னை வாஷிங்டனுக்கு அழைத்தார். உணவருந்திக் கொண்டே நிறைய விஷயங்களை பேசலாம் என்றார். என்னை அழைத்ததற்காக அவருக்கு நன்றி கூறினேன். ஆனால், அவரின் அழைப்பை ஏற்கவில்லை. நான் மகாபிரபு ஜெகநாதரின் பூமிக்கு செல்லப்போகிறேன். இதை விட எனக்கு அதுதான் முக்கியம் என அவரிடம் கூறிவிட்டேன்.' என்றார்.

'பா.ஜ.கவின் கடவுள் அரசியல்!'

வட மாநிலங்களுக்கு ராமர் அரசியல். ராமர் அரசியல் செல்லுப்படியாகாத இடங்களுக்கு அந்தந்த நிலம்சார்ந்த கடவுள்களை கையில் எடுத்தல். இதுதான் பா.ஜ.கவின் பாணி. அந்த பாணி வெகு சமீபத்தில் வெற்றியை கொடுத்த இடம் ஒடிசா. நவீன் பட்நாயக்கை வீழ்த்த 'ஜெய் ஜெகநாதர்' கோஷம் போட்டது பா.ஜ.க. 'பூரி ஜெகநாதர் கோவிலின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது.' என பட்நாயக்கின் நம்பிக்கையாக திகழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியனை அட்டாக் செய்தே வென்றது பா.ஜ.க. இதோ இப்போது தமிழ்நாட்டில் முருகனை கையில் எடுத்து 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...' கோஷத்தை போட தொடங்கியிருக்கின்றனர்.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

'மதுரை முருக பக்தர்கள் மாநாடு!'

இந்துத்துவ அமைப்புகளை வைத்து மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டையும் பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கின்றனர். ராமரை போல, ஜெகநாதரை போல முருகனும் தங்களின் தேர்தல் வெற்றிக்கு உதவுவார் என பா.ஜ.க பெரிதாக நம்புவதாக தெரிகிறது. அவர்களின் நம்பிக்கைக் களமாக இருந்த அந்த முருகன் மாநாட்டுக்கு நேரில் சென்று வந்தோம்.

'கூட்டம் எப்படி?'

அவ்வப்போது பா.ஜ.க சம்பந்தப்பட்ட கூட்டங்களில் காலி சேர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகும். ஆனால், இந்த முறை அப்படி எந்த வீடியோவையும் இப்போது வரை பார்க்க முடியவில்லை. ஏனெனில், அங்கே நிலைமை உண்மையிலேயே அப்படி இல்லை. அரங்கம் நிறைந்தே இருந்தது. இந்து முன்னணி சார்பில் 5 லட்சம் பேர் திரளுவார்கள். எல்லாரும் கூடி கந்த சஷ்டி கவசம் பாடி சாதனை செய்யப்போகிறோம் என்றுதான் விளம்பரப்படுத்தியிருந்தனர். வெளியே இப்படி விளம்பரப்படுத்தினாலும் 10,000 வாகனங்களில் இரண்டரை லட்சம் பேர் வருவார்கள் என இந்து முன்னணி சார்பில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக ஒரு தகவல்.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

நேரடியாக களத்தில் கண்ட விதத்தில் தோராயமாக ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் இந்த மாநாட்டில் கலந்திருப்பார்கள் என அனுமானிக்க முடிகிறது. மொத்தமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் கலந்திருந்தார்கள், அதில் 40000 பேர் பெண்கள். சில ஆயிரம் பேர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆங்காங்கே தேங்கிவிட்டனர் என்கின்றது ஆளும் தரப்பில் உளவு கணக்கு. கூட்டத்தை இவர்கள் சேர்த்த விதமும் கவனிக்க வேண்டியதாக இருந்தது. கூடியிருந்த அத்தனை கூட்டம் ஒரே நோக்கம் கொண்ட ஒரே எண்ணம் கொண்ட கூட்டமாக இல்லை.

இரண்டு, மூன்று குணாதிசயங்களை கொண்ட கூட்டமாக இருந்தன. முதலில் திரட்டப்படாமல் தாமாக சேர்ந்த கூட்டம். இவர்கள் மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியிருக்கக்கூடியவர்களாகவே இருந்தனர். மாநாட்டுத் திடலின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த அறுபடை செட்தான் இவர்களை ஈர்க்கும் விஷயமாக இருந்தது. மாநாட்டுக்கு முன்பாக 6 நாட்களும் இந்த செட் இருந்திருக்கிறது. நாளுக்கு ஒரு லட்சம் பேர் அறுபடை செட்டை பார்க்க வந்து சென்றதாக இந்து முன்னணியினர் தகவல் சொல்கின்றனர். நேற்றும் அந்த செட்டை பார்க்க கணிசமான அளவுக்கு கூட்டம் வந்திருந்தது.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

மாநாட்டுத் திடலின் முகப்பில் வைத்திருந்த அறுபடை முருகர் சிலைகளை நேற்று மாநாட்டு மேடைக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். ஆனாலும் வெறும் செட்டையும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த சிலைகளையும் பார்த்துவிட்டு இந்த கூட்டம் அப்படியே கலைந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரு பொருட்காட்சிக்கு வந்த மனநிலையில்தான் இவர்கள் மாநாட்டுத் திடலுக்கு வந்திருந்தனர்.

'இந்துத்துவ அமைப்புகளின் வேலை..'

இவர்கள் போக இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, விஷ்வ ஹிந்து பரிஷத், வித்யா பாரதி, அகில பாரத சன்யாசிகள் சங்கம், யங் பாரத் போன்ற தேர்தல் சாரா அமைப்புகள் அத்தனையும் களத்தில் இறங்கியிருந்தனர். தமிழ்நாடு முழுக்கவுமிருந்து தன்னார்வலர்களையும் பார்வையாளர்களையும் இவர்கள் அழைத்து வந்திருந்தனர்.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

மாநாடு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அரோகரா கோஷம் போட்டுக் கொண்டு 15 பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்று திடலை நோக்கி வந்தது. அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். 'திசையன்விளைல இருந்து வர்றோம் தம்பி. 3 பஸ்ல வந்துருக்கோம். முன்னாடி போறாங்களே அந்த அக்கா அவங்க திருவாசகம் படிப்பாங்க. அவங்கதான் எங்களை கூட்டிட்டு வந்தாங்க.' என்றார் ஒரு பெண்மணி. இதே மாதிரியான பெண்கள் கூட்டத்தை நிறையவே பார்க்க முடிந்தது. பெரும்பாலானோர் 40 வயதைக் கடந்தவர்கள்.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

கோவில்களில் குழுக்களாக சேர்ந்து திருவாசகம் படிப்பவர்கள், விளக்குப் பூஜை செய்பவர்கள் என ஆன்மீகம் சார்ந்த குழுக்களை அழைத்து வந்திருந்தார்கள். அறந்தாங்கி, இராமநாதபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருச்சி என பல இடங்களிலிருந்து மைக்ரோ லெவலில் வேலை செய்து பெண்களை அழைத்து வந்திருந்தனர். 'இந்து முன்னணி நடத்துற இந்த மாதிரியான பண்பாட்டு நிகழ்வுகள்ல எப்பவுமே கலந்துப்பேன். வெளியூர் வந்து கூட்டத்துல கலந்துக்குறது இதன் முதல் முறை.' என்றார் செங்கல்பட்டிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த ஒரு பெண். இவர்கள் போக பா.ஜ.கவினரும் மாவட்டம் மாவட்டமாக வேன்களையும் பஸ்களையும் அமர்த்தி ஆட்களை அழைத்து வந்திருந்தனர்.

'முருகர் சென்டிமென்ட்!'

எல்லாவற்றையும் முருகனின் பெயரோடே இணைத்து தாங்கள் செய்யும் பணி நேரடியாக முருகனுக்கே செய்யும் புனிதப் பணி என்கிற எண்ணத்தை, நிகழ்வுக்கு அழைத்துவரப்பட்டு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டிருந்த பெண்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் ஊட்டிக் கொண்டே இருந்தனர். 'யாராவது கூட்டத்துல கலைஞ்சு சேர்ல போயி உட்கார மறுத்தாங்கன்னா. அவங்களை முருகனா நினைச்சு அவங்க கால்ல விழுந்து போய் உட்கார சொல்லுங்க.' என நிகழ்ச்சிக்கு முன்பு தன்னார்வலர்களுக்கு தகவல் சொல்லப்பட்டுக் கொண்டே இருந்தது.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

அதேமாதிரி, மக்கள் அமர்வதற்கு மைதானத்திற்குள் பாக்ஸ் பாக்ஸாக பிரித்து தடுப்புகளை அமைத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஒவ்வொரு பாக்ஸூக்கும் கந்தன், உத்தமசீலன், பூபாலன் என முருகரின் வெவ்வேறு பெயர்களை சூட்டி வைத்திருந்தனர். எங்கு பார்த்தாலும் முருகனாக இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

மொட்டை மைதானம் என்பதால் வெயில் அடித்து வெளுத்தது. மைதானத்தைச் சுற்றி சில ரவுண்டுகள் அடித்துவிட்டு, LED ஸ்க்ரீனுக்கு முன்பாக இருந்த சிறிய நிழற்பகுதியில் அயர்ச்சியாக அமர்ந்திருந்தேன். எனக்கு இரண்டு வரிசைகளுக்கு முன்பாக ஒரு சேரில் யாரோ ஒருவர் சகதியோடு ஏறி மிதித்துவிட்டு சென்றிருக்கிறார். அந்தப் பகுதியில் தன்னார்வலராக நின்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் இதை கவனித்தார். எந்த தயக்கமும் படவில்லை. பாட்டிலில் தண்ணீரை பிடித்துக் கொண்டு வந்து ஒரு பேப்பரை எடுத்து வந்து அவர் கையாலயே அந்த சேரை துடைத்து சுத்தம் செய்துவிட்டு சென்றார். கட்சி கூட்டங்களில் இந்த மாதிரி காட்சிகளை காண முடியாது. இறங்கி வேலை பார்க்கக்கூடிய சேவகர்களை கொண்டிருப்பதுதான் இந்துத்துவ அமைப்புகளின் பெரிய பலமே. இதே மாதிரி நிறைய சம்பவங்களை அங்கே பார்க்க முடிந்தது.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

அதே சமயத்தில் நிகழ்வரங்கத்துக்கு வெளியே நிறைய புத்தகக் கடைகளையும் அமைத்திருந்தார்கள். 'தமிழகத்தில் இடிக்கப்பட்ட இந்து கோவில்கள்' 'மதமாற்ற துயரங்கள்' என இந்துத்துவத்தின் கொள்கைகளைப் பரப்பும் வகையில் நிறைய புத்தகங்களை விற்றுக் கொண்டிருந்தனர்.

'தெலுங்கு பேசும் மக்கள்!'

அதேமாதிரி, மாநாட்டுக்கு தமிழகத்தைச் சேர்ந்த தெலுங்கு பேசக்கூடிய மக்கள் கணிசமாக திரண்டிருந்தனர். பவன் கல்யாணின் தாக்கம் அதுவென அறிய முடிந்தது. தொடர்ச்சியாக பா.ஜ.க நிகழ்ச்சிகளில் பவனை தலைகாட்ட வைப்பதன் மூலம் தெலுங்கு பேசக்கூடிய மக்களின் வாக்குகளை கவர நினைக்கின்றனர். அதில் அவர்களுக்கு சிறு வெற்றி கிடைப்பதையும் உணர முடிகிறது.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

அதனால்தான் முழுமையாக தமிழில் தனது உரையை பவன் கல்யாண் தயாராக வைத்திருந்த போதும், 2 நிமிடங்களுக்கு முழுமையாக தெலுங்கிலும் உரையாற்றினார்.

மாநாடு தொடங்கி அதன்பிறகு நடந்த விஷயங்களிலும் கவனிக்க நிறையவே இருந்தது. சரியாக 3 மணிக்கே கலை நிகழ்ச்சிகளுடன் மாநாட்டை தொடங்கிவிட்டார்கள். தொடங்கும் போதே ஒரு ஆன்மீக சென்டிமென்டை போட்டு கூட்டத்தை கடைசி வரை தக்கவைக்கும் வேலையில் இறங்கினர்.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த பிரமுகர், 'ஏழரை மணிக்கு மேலதான் கந்த சஷ்டி கவசம் பாடப் போறோம். அதை முடிச்சுட்டி கங்கா தீபம் மாதிரியே அறுபடை முருகருக்கும் மகா தீபாராதனை எடுக்கப் போறோம். எல்லாரும் இருந்து தீபாராதனையை வாங்கிட்டுதான் போகனும். அப்போதான் நீங்க மனசுல நினைக்குறதுலாம் நடக்கும்.' என பயபக்தியை ஏற்படுத்திவிட்டார்.

கடைசியாக பவன் கல்யாண் மைக் பிடிக்கும் வரை 15 நிமிடத்துக்கு ஒரு முறை இதைச் சொல்லிக் கொண்டே இருந்தனர். ஆனாலும் பவனுக்கு முன்பு அண்ணாமலை பேசி முடித்தவுடனேயே கூட்டம் கலையத் தொடங்கியது.

'அதிமுகவுக்கு அறிமுகம்...'

இந்து முன்னணி நடத்திய இந்த மாநாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே வாழ்த்துத் தெரிவித்திருந்தார். மேலும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இவர்களை வரவேற்ற போது நடந்த விஷயங்கள் அத்தனை ரசிக்கும்படியாக இல்லை. இவர்களை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அந்த இந்துத்துவ பிரமுகர் மைக்கில் வரவேற்கையில்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
`அண்ணா முன்ன வந்து எல்லாருக்கும் அறிமுகம் ஆகிக்கோங்க...' என்றார். நால்வருக்குமே இதைச் சொன்னார். அந்த நால்வருமே தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். உதயகுமாரும் செல்லூர் ராஜூவும் மதுரையைச் சேர்ந்தவர்கள். அவர்களை எதோ முகமறியாதவர்கள் போல அறிமுகம் ஆகிக்கோங்க என பெரியண்ணனாக வரவேற்றதை அதிமுக தொண்டர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ?

மாநாட்டில் அரசியல் கிடையவே கிடையாது என்றார்கள். இது கட்சிக் கூட்டம் அல்ல, அரசியல் மாநாடும் அல்ல என்றுதான் நயினார் நாகேந்திரன் விளம்பரங்களை செய்திருந்தார். ஆனால், முதலில் மைக் பிடித்த இந்து முன்னணியின் தலைவர் காடேஷ்வரனே அரசியலோடுதான் ஆரம்பித்தார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை கடுமையாக அட்டாக் செய்தார். அண்ணாமலையும் பவன் கல்யாணும் சிறுபான்மையினரை உரசிச் சென்றனர்.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

'2055 இல் உலகளவில் இஸ்லாமியர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.' என்றார் அண்ணாமலை. கிறிஸ்துவர்கள் இத்தனை நாடுகளில் பெரும்பான்மை, இஸ்லாமியர்கள் இத்தனை நாடுகளில் பெரும்பான்மை என சென்செக்ஸ் தகவல்களை போல அடுக்கிக் கொண்டே இருந்தார். எல்லாவற்றின் அடிநாதமும் இந்துக்களே ஒன்றிணையுங்கள். நாம் ஆபத்தில் இருக்கிறோம் என்பதாகத்தான் இருந்தது. ரொம்பவே சென்சிட்டிவ்வான விஷயங்களை கூட உணர்ச்சியை தூண்டும் விதமாகவே பேசினார்.

'இந்துக்களை பார்த்து கேள்வி கேட்கிறீர்களே. உங்களால் அரேபியாவிலிருந்து வந்த மதத்தை நோக்கி கேள்வி கேட்க முடியுமா? இந்துக்கள் சாதுக்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது.' என நேரடியாக இஸ்லாமியர்கள் மீது வன்மத்தை இறக்கினர்.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

'கூட்டத்தின் தன்மை!'

அறுபடைகளை குறிக்கும்வகையில் இடையில் 6 தீர்மானங்களை வேறு நிறைவேற்றியிருந்தனர். வெவ்வேறு குணாதிசயங்களை கொண்ட கூட்டத்தினர் இருந்ததாக சொன்னேன் அல்லவா? முதலில் மதுரைக்குள்ளிருந்து தாமாக வந்திருந்த உள்ளூர் கூட்டம். அவர்கள் அந்த அறுபடை செட்டை பார்ப்பதற்காக மட்டுமே வந்திருந்தனர். மாநாட்டை ஒரு ஓரமாக நின்று சில நிமிடங்கள் வேடிக்கைப் பார்த்துவிட்டு அப்படியே கலைந்தனர். இந்துத்துவ அமைப்புகள் திரட்டி கூட்டி வந்திருந்த கூட்டமும் பெரிதாக இருந்தது.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

அரங்குக்குள் மொத்தமாக 80,000 இருக்கைகளை போட்டிருந்தனர். இருக்கைகள் பெரும்பாலும் நிரம்பியிருந்தது. குழுவாக திரட்டி அழைத்து வரப்பட்டிருந்த இந்தக் கூட்டம் மாநாட்டோடு ஒன்றிப் போயிருந்தது. யோகியின் புல்டோசர் அரசியலை புனிதப்படுத்தி பேசுகையில் இந்த கூட்டத்தின் மத்தியில் அத்தனை கரகோஷமும் ஆர்ப்பரிப்பும் எழுந்தது. பக்தவச்சலம் என்பவர் சூரபத்மனோடு தமிழக அரசியல் தலைவர் ஒருவரை ஒப்பிட்டு பெயர் சொல்லாமல் ஒரு கதையை சொன்னார். அதற்கும் அத்தனை ஆர்ப்பரிப்பு.

'ஆர்.எஸ்.எஸ் திட்டம்!'

ஆர்.எஸ்.எஸ் இன் தென் பாரத அமைப்பைச் சேர்ந்த வன்னி ராஜன் என்பவர் பேசுகையில், 'இது ஆர்.எஸ்.எஸ் இன் நூற்றாண்டு. இந்த ஆண்டில் இதே போல 6-7 பிரமாண்ட நிகழ்ச்சிகளை நடத்தப்போகிறோம்.' எனக் கூறியிருந்தார். தமிழகத்தில் தேர்தலுக்குமே இன்னும் 8-9 மாதங்கள்தான் இருக்கிறது. ஆக, தேர்தலை மையப்படுத்தி அவர்கள் கையிலெடுத்திருக்கும் முருகரை வைத்து பா.ஜ.கவுக்கு பெரிய திட்டமே இருப்பதை அறிய முடிகிறது.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

திருப்பரங்குன்ற பிரச்னையின் வழி கோயம்புத்தூருக்கு பிறகு மதுரையில் தங்களுக்கு ஒரு பிடிப்பு கிடைத்திருப்பதாக இந்துத்துவ அமைப்புகள் கருதுகின்றன. மேலும், பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் மக்களை ஈர்க்கும் வகையில் ஒரு நட்சத்திர முகமும் தேவைப்படுகிறது. இவற்றை ஈடுகட்டும் வகையில்தான் முருகரை கையில் எடுத்திருக்கிறார்கள். ஒடிசாவுக்கு ஜெகநாதர் கையிலெடுத்தது போல தமிழகத்துக்கு முருகரை கையிலெடுக்க நினைக்கின்றனர். அவர்களின் இந்துத்துவ அமைப்பின் வழி திரண்டவர்களை தவிர பொதுமக்களை அவர்களால் இந்த மாநாட்டின் மூலம் ஈர்க்க முடிந்ததா என்றால் கேள்விக்குறியே... ஆனாலும் சில யுக்திகளின் மூலம் பொதுமக்களையும் அவர்களின் குடைக்கு கீழ் இழுத்திருக்கிறார்கள். இதையே அவர்கள் வெற்றியாகத்தான் பார்ப்பார்கள்.

'அதிமுகவுக்கு பிரச்னை?'

வருங்காலத்தில் இது எந்தளவுக்கு ரிசல்ட்டை கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதில் பா.ஜ.கவுக்கு எந்த சேதாரமும் இருக்கப் போவதில்லை. ஆனால், தேர்தல்ரீதியாக பா.ஜ.கவின் இந்த முருகர் அரசியல் அதிமுகவுக்கு நீண்டகால அடிப்படையில் பிரச்னைகளை கொடுக்கலாம். திருப்பரங்குன்றத்தை முன்வைத்து சிறுபான்மையினரை அட்டாக் செய்யும் மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். எடப்பாடி வாழ்த்து கூறுகிறார். வேலுமணி ஆர்.எஸ்.எஸ் 100 விழாவில் கலந்துகொள்கிறார். ஆக, சிறுபான்மையினரின் நம்பிக்கையை முழுமையாக இழந்த நிலையை நோக்கி அதிமுக நகர்கிறது. நாளை பா.ஜ.க அவர்களுடன் இல்லாவிடிலும் இழந்த சிறுபான்மையின வாக்குகளை மீண்டும் அதிமுகவால் பெற முடியுமா என்பது சந்தேகமே.

நயினார், எடப்பாடி பழனிசாமி
நயினார், எடப்பாடி பழனிசாமி

'திமுகவுக்கு சவால்!'

திமுகவுக்குமே இது ஒரு சவால்தான். பா.ஜ.க வேலை கையில் பிடித்துக் கொண்டு இந்துக்களே ஒன்றிணையுங்கள் என்கிறது. அப்படியிருக்க திமுகவும் அரசு சார்பில் முருகர் மாநாடு நடத்திக் கொண்டு, நாங்கள் நடத்தியதுதான் உண்மையான முருகர் மாநாடு என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது. பா.ஜ.கவின் கடவுள் அரசியலுக்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில், தங்கள் பங்குக்கு ஆளுக்கு ஒரு கடவுளை கையில் தூக்கிய கட்சிகளின் நிலை என்ன என்பதை திமுகவின் முக்கியஸ்தர்கள் உணர வேண்டும். திமுகவும் தங்களின் கொள்கைகளை சுயபரிசோதனை செய்து தாங்கள் எந்த நிலையில் நிற்கிறோம் என்பதை அளவிட்டுக் கொள்ள வேண்டிய நேரம் இது.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

தேர்தல் ரேஸில் முருகரையும் களமிறக்கி விட்டிருக்கிறது பா.ஜ.க. என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

"நீட் முழுக்க பணம்தான் விளையாடுகிறது; வினாத்தாள் முதல் ரிசல்ட் வரை எல்லாம் குளறுபடி" - ஸ்டாலின்

மருத்துவ படிப்புகளுக்கு மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.பல மாணவர்கள் நீட் தேர்வால் தற... மேலும் பார்க்க

Iran vs America: ஈரானைத் தாக்க இந்திய வான்வழியை பயன்படுத்தியதா அமெரிக்கா? | Fact Check

ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களைத் தாக்க அமெரிக்க ராணுவம் நடத்திய ஆப்பரேஷன் மிட் நைட் ஹேமரில் இந்தியாவின் வான் பரப்புப் பயன்படுத்தியாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலான நிலையில், அது பொய் என PIB -யின் ... மேலும் பார்க்க

IndiGO: "பறக்கத் தகுதியில்லை; செருப்பு தைக்க போ..." - குற்றச்சாட்டுக்கு நிறுவனத்தின் பதில் என்ன?

பணியிடத்தில் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையை எதிர்கொண்டதாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இன்டிகோ விமானி ஒருவர் 3 உயர் அதிகாரிகள் மீது புகார் அளித்துள்ளார். 35 வயதாகும் அந்த விமானியை, "நீ வானில் பறக்கத் தக... மேலும் பார்க்க

"ராமர் பிறந்த மண்ணிலேயே வென்றது பாஜக அல்ல... இந்தியா கூட்டணி!" - அமைச்சர் ரகுபதி காட்டம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, "இங்கு உள்ள எல்லோரும் இந்துக்கள் தான். இந்தியாவில் இந்துக்கள் தான் அதிகம். ஆனால், இங்கு தேவை சிறுபான்மை மக்களுக்... மேலும் பார்க்க

"முருகன் மாநாடு வீடியோவை வன்மையாகக் கண்டிக்கிறோம்; போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா?" - அதிமுக

மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் பேரறிஞர் அண்ணா, பெரியார் ஆகியோர் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகவும், பா.ஜ.க-விடம் பண்ணையடிமையாகிவிட்ட அ.தி.மு.க இதை ரசிப்பத... மேலும் பார்க்க