ANNA university Case Updates! | DPDP ACT 2023 | RTI | IPL 2025 | CSK | Imperfect...
Shardul Thakur : 'Unsold, கவுண்ட்டி திட்டம்... திடீர் அழைப்பு' - எப்படி கம்பேக் கொடுத்தார் ஷர்துல்?
'கவனிக்க வைக்கும் கம்பேக்!'
ஒவ்வொரு ஐ.பி.எல் சீசனிலுமே ஊக்கமளிக்கக்கூடிய பல கம்பேக் கதைகளை நாம் பார்க்க நேரிடும். அந்த வகையில் இந்த சீசனின் முதல் கம்பேக்கை நிகழ்த்தி அத்தனை பேரையும் வியப்படைய வைத்திருக்கிறார் ஷர்துல் தாகூர். சில மாதங்களுக்கு முன்பு மெகா ஏலத்தில் 'Unsold' ஆன அதே ஷர்துல் தாக்கூர்தான், இப்போது இந்த சீசனில் முதல் வீரராக பர்ப்பிள் தொப்பியை அணிந்திருக்கிறார்.

'ஷர்துல் தாக்கூரின் இயல்பு!'
ஷர்துல் தாக்கூர் கொஞ்சம் வித்தியாசமான வீரர். ஒரு பேட்டர் அதிக ரன்களை எடுப்பதற்கும், ஒரு பௌலர் எக்கச்சக்க விக்கெட்டுகளை குவிப்பதற்கும் அதீத திறன் வேண்டும் என நினைப்போம். அப்படியிருப்பவர்கள் மட்டும்தான் சாதிக்க முடியும் என நினைப்போம். அந்த கூற்றை பொய்யாக்கியவர் ஷர்துல் தாக்கூர். உடனே அவருக்கு திறமையே இல்லை என புரிந்துகொள்ளக்கூடாது. அவர் திறமைசாலிதான் ஆனால், பௌலிங் திறனில் மேதைமை பெற்றவர் இல்லை.
அவரால் மரபார்ந்த முறையில் வர்ணனையாளர்களிடம் பாராட்டைப் பெறும் வகையில் பந்துகளை வீச முடியாது. ஆனால், விக்கெட் எடுக்கும் பந்துகளை வீச முடியும். தக்கசமயத்தில் அணிக்கு தேவை எனும் போது விக்கெட்ட எடுத்துக் கொடுக்க முடியும். பேட்டிங்கிலும் அப்படித்தான். மேதை இல்லை. அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது அணியை காப்பாற்றும் வகையிலான இன்னிங்ஸ்களை ஆடி கொடுக்க முடியும். இப்படியிருப்பதுதான் ஷர்துல் தாகூரின் பலம். ஐ.பி.எல் இல் சென்னை அணிக்காக இந்த வித்தையை வைத்துக் கொண்டு கலக்கினார்.

'சென்னையின் ஷர்துல்!'
சென்னை அணி சாம்பியனான 2018 மற்றும் 2021 சீசன்களில் கிட்டத்தட்ட தலா 20 க்கு நெருக்கமான விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பார்ட்னர்ஷிப்களையெல்லாம் அழகாக உடைத்துவிடுவார். விக்கெட் தேவை எனும்போது விக்கெட் எடுத்துக் கொடுப்பார்.
'Impact Player' தாக்கம்!
ஆனால், ஐ.பி.எல் யை பொறுத்தவரைக்கும் சமீபமாக அந்தத் திறனே ஷர்துலுக்கு எதிரியாகவும் மாறியிருக்கிறது. 'Impact Player' விதிமுறைக்குப் பிறகு அணிகளில் ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவம் குறைந்திருக்கிறது. தேவையெனில் ஒரு ப்யூர் பேட்டரை இறக்கிக் கொள்ளலாம்.தேவையெனில் கூடுதலாக ஒரு ப்யூர் பௌலரை இறக்கிக் கொள்ளலாம். இதுதான் அணிகளின் எண்ணம்.

ஷர்துல் தாக்கூரை போல இரண்டு திறன்களிலும் மேதைமை பெறாமல் இருப்பவர்கள் அணிக்கு தேவையில்லை என நினைத்தனர். அதனால்தான் சில மாதங்களுக்கு முன்பு நடந்த மெகா ஏலத்தில் எந்த அணியும் ஷர்துல் தாக்கூர் மீது நம்பிக்கை வைத்து எடுக்கவில்லை. அவரும் 'Unsold' ஆனார்.
இந்த சீசனில் ஐ.பி.எல் இல்லை என முடிவானவுடன் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்ட்டி போட்டியில் ஆட 'Essex' அணியுடன் ஒப்பந்தமும் போட்டுவிட்டார்.
'ரஞ்சி ஃபார்ம்!'
ஆனால், இன்னொரு பக்கத்தில் உள்ளூரில் மும்பை அணிக்கு அவர் கையில் இருக்கும் திறனை வைத்து மிகச்சிறப்பாக ஆடினார். கடைசியாக நடந்து முடிந்த ரஞ்சி சீசனில் 9 போட்டிகளில் 505 ரன்களுடன் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மும்பை அணி இக்கட்டான கட்டங்களில் சிக்கிய போதெல்லாம் காப்பாற்றினார். இதைப் பார்த்துவிட்டுதான் லக்னோ அணியின் பயிற்சியாளர் குழுவிலிருந்தும் ஜாகீர் கானிடமிருந்தும் ஷர்துலுக்கு அழைப்பு சென்றிருக்கிறது.

'மயங்க் யாதவ், மோஷின் கான் என எங்கள் அணியின் பௌலர்கள் காயமடைந்திருக்கிறார்கள். உங்களை எங்களுக்கான சரியான ரீப்ளேஸ்மெண்ட்டாக பார்க்கிறோம். தயாராக இருங்கள்.' என ஜாகீர் கான் செய்தி சொல்லியிருக்கிறார்.
உடனடியாக கவுண்ட்டி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி ஐ.பி.எல் மோடுக்கு வந்தார். லக்னோ அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார். அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மோஷின் கானுக்கு பதில் ஷர்துல் தாக்கூர் ரீப்ளேஸ் செய்யப்பட்டார். டெல்லிக்கு எதிரான முதல் போட்டியிலேயே களமிறங்கினார். முதல் ஓவரை வீசினார். அந்த முதல் ஓவரிலேயே ஜேக் ப்ரேஸர் மெக்கர்க், அபிஷேக் பொரேல் என இருவரின் விக்கெட்டையும் வீழ்த்திக் கொடுத்தார். போட்டியில் லக்னோ கடைசி வரை இருந்ததற்கு ஷர்துல் தொடக்கத்தில் வீழ்த்திக் கொடுத்த விக்கெட்டுகள்தான் காரணமாக இருந்தது.
'ஷர்துலின் ஆகச்சிறந்த செயல்பாடு!'
'சன்ரைசர்ஸ் பேட்டர்கள் பௌலர்களை அதிரடியாக மட்டுமே எதிர்கொள்கிறார்கள். அதேமாதிரி, பௌலர்களும் அதிரடியாக எதிர்கொள்ள வேண்டும். அதற்கான திட்டத்தைதான் தீட்டியிருக்கிறோம்.' என ஷர்துல் பேசியிருந்தார். அந்தத் திட்டத்தின் பலனாக ஷர்துலுக்கு கிடைத்தது நான்கு விக்கெட்டுகள். ஆரம்பத்திலேயே அபிஷேக் சர்மாவையும் இஷன் கிஷனையும் லெக் சைடில் குறிவைத்து வீசி தூக்கினார். இந்த விக்கெட்டுகளிலிருந்துதான் சன்ரைசர்ஸ் சரிய தொடங்கியது.

ஷர்துல் 4 ஓவர்களில் 34 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஐ.பி.எல் கரியரில் அவரின் தலைசிறந்த பௌலிங் இதுதான். அதேமாதிரி, ஐ.பி.எல் இல் தனது 100 வது விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சீசனில் பர்ப்பிள் தொப்பியை அணியும் முதல் வீரரும் ஆகியிருக்கிறார்.
காலம் எப்போதும் நமக்கான இரண்டாம் வாய்ப்பைக் கொடுக்கும். அதைப் பற்றிக் கொண்டு முன்னேறும் உத்வேகத்துடன் நாம் இருக்க வேண்டும் என்பதற்கு ஷர்துல் தாக்கூர் ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.