‘Vijay - BJP கூட்டணி’ இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை - Tamilisai Soundararajan...
TVK : தள்ளிப்போகும் விஜய்யின் கரூர் விசிட்? - காரணம் என்ன?
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தை தவெக தலைவர் விஜய் நாளை நேரில் சென்று பார்ப்பதாக இருந்தது. இந்நிலையில், இப்போது அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் கரூர் விசிட் தள்ளிப்போவதற்கான காரணம் என்ன என பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம்.

முதலில் கடந்த திங்கள் கிழமை (அக்டோபர் 13) விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த தேதியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவிருந்ததாலும், ஏற்பாடுகளை செய்வதில் சில சிக்கல்கள் இருந்ததாலும் அந்த தேதியில் விஜய்யால் கரூருக்கு செல்ல முடியாமல் போனது. திங்கள் கிழமை இல்லையென்றவுடன் அக்டோபர் 17 ஆம் தேதி, அதாவது நாளை விஜய் கரூருக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான வேலைகளையும் ஒரு டீம் களத்தில் இறங்கி பார்த்துக் கொண்டிருந்தது.
ஆனால், நாளைய நிகழ்ச்சிக்கு இப்போது வரைக்குமே பாதிக்கப்பட்ட குடும்பத்தை தொடர்புகொண்டு விஜய் தரப்பில் பேசி ஏற்பாடுகளை செய்யவில்லை. விஜய் வீடியோ காலில் பேசிய போது தவெக நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அதன்பிறகு, இடையில் ஒரு முறை சென்று விஜய் கரூருக்கு வரும்போது உங்களை சந்திக்க விரும்புகிறார். நாங்கள் ஏற்பாடுகளை செய்கிறோம்.

நீங்கள் கண்டிப்பாக வர வேண்டுமென பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இப்போது வரைக்கும் விஜய் எப்போது கரூர் வருகிறார் என்கிற தேதியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் சொல்லவில்லை. இதுசம்பந்தமாக பனையூர் வட்டாரத்தில் விசாரிக்கையில்தான் விஜய் தரப்பே இன்னும் டேட்டை லாக் செய்யவில்லை என்பதை அறிய முடிகிறது.
இதுதொடர்பாக பேசும் முக்கிய நிர்வாகிகள் சிலர், 'கரூர் சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து தலைவர் இன்னும் முழுமையாக தேறி வரவில்லை. கட்சியுமே இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. பொதுச்செயலாளர் வெளியில் வந்திருந்தாலும் கட்சியின் செயல்பாடுகள் இன்னும் வேகமெடுக்கவில்லை. எல்லாருமே இன்னும் அந்த அதிர்ச்சியில்தான் இருக்கிறோம்.
இப்படி செய்திருக்கலாமே...அப்படி செய்திருக்கலாமே என கரூர் சம்பவம் சார்ந்த பேச்சுகள்தான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் அடுத்தக்கட்ட அரசியலை செய்ய தலைவர் தயாராக இல்லை.

நாங்களும் தலைவரை சீக்கிரமாக கரூருக்கு அழைத்து செல்ல வேண்டுமென உறுதியாக இருக்கிறோம். ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறோம். இறந்த 41 பேரில் 31 பேர்தான் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதம் 10 பேர் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று பார்ப்பதில் நிறைய சிக்கல் இருக்கிறது. துக்க வீட்டுக்கு செல்கையில் கூட்டம் கூடி ஏற்கனவே சோகத்தில் இருப்பவர்களுக்கு எதுவும் அசௌகரியம் ஏற்பட்டுவிடக்கூடாது.
அதற்காக ஒரு மண்டபத்தையோ உள்ளரங்கத்தையோ புக் செய்து அங்கே அத்தனை பேரையும் அழைத்து பார்க்கலாம் என முடிவெடுத்தோம். ஆனால், இடம் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. எங்களுக்கு இடம் கொடுத்தால் ஆளுங்கட்சியின் பகையை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என உரிமையாளர்கள் தயங்குகின்றனர். அதனால்தான் குறிப்பிட்ட தேதியில் நிகழ்வை நடத்த முடியாமல் தள்ளிப்போகிறது. தீபாவளி முடிந்தவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தலைவர் கரூருக்கு சென்றுவிடுவார்.' என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

சம்பவம் நடந்த போதே என்ன ஆனாலும் பரவாயில்லை என கரூரிலிருந்து மக்களை சந்தித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் திமுக உள்ளே புகுந்து அரசியல் வாய்ப்பில்லாமல் போயிருக்கும். பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அழைத்து வந்து ஆறுதல் கூறலாம் என ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு கருத்தை முன்வைக்க விஜய்யே கொஞ்சம் குழம்பி போயிருப்பதாக சொல்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.