இதற்கு மேலும் மௌனம் சாதிப்பது அழகல்ல! - மகளின் மடல் | #உறவின்கடிதம்
US: ஈரான் அச்சுறுத்தல்; பாக்., ராணுவ தளபதிக்கு விருந்து.. ட்ரம்ப் வேலை பலிக்குமா?
பஹல்காம் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா கொடுத்த பதிலடி, இந்தியா, பாகிஸ்தான் இடையே தாக்குதலை உருவாக்கியது.
இரு நாடுகளும் மே 10, 2025-ம் தேதி பேசி ஒரு முடிவுக்கு வர, தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தது. இதற்கு முன்பே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முந்திக்கொண்டு இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தார்.
மேலும், இரு நாடுகளிடமும் 'அமெரிக்கா உடனான வர்த்தகத்தைக் காட்டி' இந்த முடிவுக்கு வர வைத்ததாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்தத் தாக்குதல் நிறுத்தத்திற்கு காரணம் 'நான் தான்' என்று தொடர்ந்து கூறி வந்தார். இதை இந்திய அரசு மறுத்துள்ளது.

அசிம் முனீருக்கு 'லன்ச்'
இந்த நிலையில், தாக்குதல், போர் நிறுத்தத்திற்கு பிறகு, முதல் முறையாக, பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்காவிற்கு அரசு வழி பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15), அமெரிக்கா சென்ற அசிம் முனீருக்கு, இன்று அமெரிக்க நேரப்படி மதியம் ஒரு மணிக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருந்து தர உள்ளார்.
இதையடுத்து அசிம் முனீர் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்கா - இஸ்ரேல்; பாகிஸ்தான் - ஈரான்!
இந்தச் சந்திப்பு இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலுக்கு பிறகான சந்திப்பு என்பதோடு மட்டுமல்லாமல், தற்போது இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்கள் நடந்து வருவதாலும் முக்கியம் பெறுகிறது.
இந்தத் தாக்குதலில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் 'அமெரிக்கா படைகளுக்கு எதாவது ஆனால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்...', 'நிபந்தனையற்ற சரண்' என்று தொடர்ந்து ஈரானை எச்சரித்து வருகிறார். இது இஸ்ரேலுக்கு ஒருவகையான ஆதரவாக ஆகிறது.

"இஸ்ரேல் எங்களுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், எங்கள் உதவிக்கு பாகிஸ்தான் வரும்" என்று ஈரான் கூறுகிறது.
ஆக, இஸ்ரேலின் பக்கம் அமெரிக்காவும், ஈரானின் பக்கம் பாகிஸ்தானும் நிற்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தான், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மற்றும் அசிம் முனீர் சந்திப்பு நடக்க உள்ளது. 'இதன் விளைவு என்ன?' என்பது இன்று (அமெரிக்கா நேரப்படி) தெரியவரும்.