Vikram: விக்ரமிடம் கதை சொன்ன இயக்குநர்கள்; மடோன் அஸ்வின் பட அப்டேட்
சின்னதொரு போராட்டத்திற்குப் பின் வெளியான 'வீர தீர சூரன் பாகம் 2' படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் விக்ரம். அவரது ரசிகர்கள் பலரும் இயக்குநர் அருண்குமாரை, 'சைலன்ட் ஃபேன்பாய் சம்பவம்' என்று பாராட்டுக்களை அள்ளி வருகின்றனர். இந்நிலையில் விக்ரமின் 63வது படம் குறித்த அப்டேட்களை விசாரித்ததில் கிடைத்தவை இங்கே.

விக்ரமிடம் ஒருமுறை ''உங்களின் கனவு கேரக்டர் எது?'' என்று கேட்டபோது, ''எனக்குக் கனவு கேரக்டர்னு ஒண்ணும் கிடையாது! வித்தியாசம் மிளிரும் எல்லா வகையான கேரக்டர்களையும் செய்யணும். இயக்குநர்கள் சிந்தனையில் பிறக்கும் கதாபாத்திரங்களுக்காக நான் காத்திருக்கிறேன்!'' என்று சொன்னார். அது நிஜம் தான். இயக்குநர்களிடம் தன்னை நம்பி ஒப்படைத்துவிடுபவர் அவர். 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்', 'தங்கலான்' 'துருவ நட்சத்திரம்' என ஒவ்வொரு படத்திற்கும் அவரது உழைப்பு திரையிலும் தெரிந்திருக்கும். 'தங்கலான்' படத்துக்கு பிறகு ஒரு பக்கா கமர்ஷியலும், எமோஷனலும் கலந்த கதையை எதிர்பார்த்துக் காத்திருந்த போதுதான் அருண்குமார் வீர தீர சூரனைக் கொண்டு வந்தார். அதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நோக்கி நகரும்போதே, அடுத்து நடிக்கும் படத்திற்கான கதையை கேட்க ஆரம்பித்து விட்டார் விக்ரம். தெலுங்கில் ஹிட்களை கொடுத்த இளம் இயக்குநர்கள், பார்க்கிங், போர்த்தொழில் உள்பட பல இளம் இயக்குநர்களிடம் கதைகளை கேட்டு வந்தார். தமிழிலும் பெரும் வெற்றி பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநர் சிதம்பரமும் ஒரு ஒன் லைனைச் சொல்லியிருக்கிறார்.
'மண்டேலா', 'மாவீரன்' படங்களின் மூலம் அழுத்தமான கதை சொல்லியாக இருக்கும் மடோன் அஸ்வின் விக்ரமிடம் சொன்ன கதை, ரொம்பவே அசத்தலான கதை. அவரது கதையை விக்ரம் ஓகே செய்த கையோடு, தயாரிப்பாளர்களும் அமைந்தார்கள். 'மாவீரன்' படத்தை தயாரித்த அருண் விஸ்வாவே, 'விக்ரம் 63' படத்தையும் தயாரிக்கிறார். இதன அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார் தயாரிப்பாளார் அருண் விஸ்வா, அவரது நிறுவனம் இப்போது சித்தார்த்தை வைத்து '3 BHK' என்ற படத்தை தயாரித்து வருகிறது.

'வீர தீர சூரன்' ரிலீஸுக்குப் பின் 'விக்ரம் 63' படத்தைத் தொடங்குகின்றனர். அனேகமாக மே மாதம் இரண்டாவது வாரம் சென்னையில் படப்பிடிப்பு இருக்கும் என்று தெரிகிறது. குறுகிய காலத் தயாரிப்பாக இந்தப் படம் உருவாகிறது. நடிகர், நடிகையர் தேர்வுகள் நடந்து வருகிறது. விக்ரம் 63'க்கு 'வீரமே ஜெயம்' என்ற டைட்டிலை வைக்கலாம் என்ற பேச்சு இருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அருண்குமாரின் படத்திற்கு வருகிறார் விக்ரம்.
இப்போது வெளியாகியிருப்பது பார்ட் 2வுக்கான கதையாகும். 'காந்தாரா'வின் ப்ரிக்குவல் இப்போது உருவாவதுபோல, 'வீர தீரசூரனின்' ப்ரீக்குவலும் இனி வரும். இதன் கதையையும் அருணிடம் ரெடி பண்ணச் சொல்லியிருக்கிறார் விக்ரம் என்கிறார்கள்.