இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
``மீரட்டில் நடந்த கொலையைப் போல..'' - காதலனுடன் சேர்ந்து கணவனை மிரட்டிய மனைவி; உ.பி.,யில் அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாளடைவில் புதுக்காதலன் உடன் ஏற்பட்ட நெருக்கத்தால் காதல் கணவனை புதுக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து டிரம்மில் அடைத்து மூடினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது போன்று மனைவி தனது காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்யும் சம்பங்கள் உத்தரப்பிரதேசத்தில் ஆங்காங்கே நடந்து வருகிறது. சில பெண்கள் `மீரட்டில் நடந்து போன்று நடக்கும்' என்று தங்களது கணவனை மிரட்டவும் செய்கின்றனர்.

இதனால் சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள தனது மனைவியை அவர் காதலிக்கும் நபருக்கே திருமணம் செய்துவைத்துவிட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கொண்டா என்ற இடத்தைச் சேர்ந்த பொறியாளர் தர்மேந்திரா என்பவரை அவரது மனைவி தனது காதலனோடு சேர்ந்து இது போன்று மிரட்டி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தர்மேந்திரா 2016-ம் ஆண்டு பஸ்தி என்ற இடத்தை சேர்ந்த மாயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தர்மேந்திரா தனது மனைவி மீது அதிக அன்பு வைத்திருந்தார். இதனால் மனைவி பெயரில் வாகனங்களையும், சொத்துகளையும் வாங்கினார்.
மாயா பெயரில் 2022-ம் ஆண்டு நிலம் ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தில் வீடு கட்ட இருவரும் முடிவு செய்தனர். இதற்கான ஒப்பந்தத்தை மாயாவின் உறவினர் நீரஜ் என்பவரிடம் கொடுத்தனர். நீரஜ் மனைவி கொரோனா காலத்தில் இறந்துவிட்டார். அடிக்கடி மாயா கட்டுமானப்பணி நடைபெறும் இடத்திற்கு சென்று வருவது வழக்கம். அப்படி சென்று வந்தபோது நீரஜுடன் மாயாவிற்கு திருமணம் தாண்டிய உறவு உருவானது.

இது குறித்து தர்மேந்திரா போலீஸில் கொடுத்துள்ள புகாரில் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி மாயாவும், நீரஜும் உறவில் இருந்ததை பார்த்துவிட்டேன். இதனால் மாயாவுடன் சண்டையிட்ட போது என்னை அடித்து உதைத்துவிட்டு அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
ஆகஸ்ட் 25-ம் தேதி மீண்டும் எனது வீட்டிற்கு வந்து பூட்டை உடைத்து கதவை திறந்து உள்ளே இருந்த 15 கிராம் தங்க செயின் மற்றும் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துச்சென்றுவிட்டார். இது தொடர்பாக போலீஸில் புகார் செய்திருக்கிறேன்.
கடந்த 29-ம் தேதி மாயா எனது தாயாரை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது மாயாவும், நீரஜும் சேர்ந்து என்னையும், எனது தாயாரையும் அடித்தனர்.
இச்சண்டையின் போது அதிகம் பேசினால் மீரட்டில் நடந்தது போன்று என்னை கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி டிரம்மில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டினார்'' என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இக்குற்றச்சாட்டுகளை மாயா மறுத்துள்ளார். இது தொடர்பாக மாயாவும் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அவர் தனது புகாரில் தர்மேந்திரா தொடர்து என்னை சித்ரவதை செய்து வந்தார். 4 முறை அபார்சன் செய்யவைத்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்னை அடித்து உதைத்தார். இது தொடர்பாக பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கிறேன். இதையடுத்து விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதோடு என்னை வீட்டை விட்டும் வெளியில் விரட்டிவிட்டார்'' என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பேரும் கொடுத்துள்ள புகார் குறித்து விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரி விவேக் திரிவேதி தெரிவித்துள்ளார். கடைசியாக நடந்த சம்பவம் தெருவில் வைத்து நடந்திருக்கிறது. எனவே கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரித்து வருவதாகவும் விவேக் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தெருவில் சண்டை போட்டுக்கொண்ட காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி இருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
