Yugabharathi:``15 நிமிஷத்துல மொத்த பாடலையும் வடிவேலு பாடிட்டாரு'' - சுவாரஸ்யம் பகிரும் யுகபாரதி
கவிஞர் யுகபாரதியின் 'மஹா பிடாரி' புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுமைகள் பலரும் பங்கேற்று பேசினர். அந்த நிகழ்வின் காணொளிகள் தொடர்ந்து சினிமா விகடன் யூட்யூப் தளத்தில் வெளியாகி வருகிறது.
இயக்குநர், நடிகர் சசிக்குமார் பேசுகையில், "யுகபாரதிகிட்ட இப்போ வரை நான் கேக்கனும்னு நினைச்ச கேள்வி, `என்னைய ஏன்யா புத்தக வெளியீட்டு விழாவுக்கு கூப்புடுறீங்க. எனக்கும் கவிதைக்கு என்னயா சம்பந்தம்?'. நான் புத்தகம் வாசிப்பேன் அவ்வளவு தான். அவரு தான் இந்தாங்க புத்தகம்னு சொல்லி 'மஹா பிடாரி'யைக் கொடுத்தாரு. படிச்சேன் நல்ல புத்தகம் இது.
ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் அவர் தான் மஹா பிடாரி என்னைய பிடிச்சு பேச கூப்பிட்டிருக்கிறார். அதுக்கெல்லாம் அவரை நிறைய திட்டணும். என் முதல் படத்துல ரெண்டு பாடலை யுகபாரதிதான் எழுதினாரு. அப்போ, நானும் அவரும் கிளம்பி ஜேம்ஸ் வசந்தன் சார் வீட்டுக்குப் போயிடுவோம். இவரை ஒரு ரூம்ல விட்டுட்டு நானும் ஜேம்ஸ் வசந்தன் சாரும் வெளிய பேசுவோம், சாப்பிடுவோம். இவருக்கு காபி, டீன்னு கொடுத்துட்டு பாட்டுன்னு கேப்போம். ஒன்னுமே எழுதல இவரு. சரி ஒருவேளை ரூம்தான் சரியில்ல போலன்னு நினைச்சுட்டு பீச்சுக்கு போயிட்டோம். அங்க போயும் இங்குட்டு நடக்காரு, அங்குட்டு நடக்காரு. நான் ஜேம்ஸ் வசந்தன் சார்கிட்ட `இப்ப எழுதிடுருவாரு பாருங்க'னு சொல்லிட்டு இருந்தேன்.

ஒரு வழியா எழுதி முடிச்சுட்டாரு. காலையில வீட்டுல இருந்து கிளம்பி ராத்திரி தான் வேலையை முடிச்சோம். அதையெல்லாம் மறக்கவே முடியாது. இப்போ வரைக்கும் எந்த ஊரு விழவாக இருந்தாலும் `மதுர குலுங்க' பாட்டு இல்லாமல் பார்க்கவே முடியல. அந்த அளவுக்கு அந்த பாட்டை யுகபாரதி எழுதிருந்தாரு. எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. `எப்படி இந்த மாதிரி பாட்டு எழுதுறீங்கன்'னு நான் அவர்கிட்ட கேட்டிருக்கேன். அவரோட பேச்செல்லாம் ரசிச்சு கேட்டிருக்கேன்." என்றார்.
இந்த நிகழ்வில் பேசிய யுகபாரதி, "சசிக்குமார் முதல் பாட்டை எழுதுனதைப் பத்தி சொன்னாரு. என்ன எழுதவைக்க என்னன்ன பாடுபடுத்துனாருன்னு நான் சொல்றேன். அவர் அந்தப் படத்துல நடிச்சுருக்காருங்கிற விஷயத்தை நானே படம் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன். பாட்டுக்கு சூழல் சொன்னதான் எழுத முடியும். என்கிட்ட அவர் `லவ், பெயின் (Pain), ஜெயில்'னு சூழலைச் சொன்னாரு. `இது ஒரு சூழல்னு இதுக்கு நான் பாட்டு வேற எழுதணும்'னு சொல்லிட்டாரு. நானும் போராடி பாக்குறேன் முடியல. நிஜமாவே ரூம்ல போட்டு மூடிட்டாங்க.

அப்போ ஜேம்ஸ் வசந்தன் சார் வீடு முழுக்க கர்த்தர் புகைப்படம் இருக்கும். நான் இருந்த ரூம்லயும் இருந்துச்சு. அப்போ எழுதுனதுதான் `காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை' பாடல். நான் பார்த்ததில் சிறந்த மனிதர் சசி. ஒருமுறை ஒரு படத்துக்கு ஓப்பனிங் சாங் எழுதிக் கொடுத்தேன். அதை வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அப்புறம் அதுக்கு பதிலா எழுதி கொடுத்தது தான் `உன்னைப் போல ஒருத்தர நான் பார்த்ததே இல்ல' பாடல் அந்த வரிகள் உண்மையில் நான் சசிக்காக ஆத்மார்த்தமாய் எழுதியது. நடிகர் இயக்குநரை என்பதையெல்லாம் தாண்டி ஒரு படைப்பை ரசிக்க கூடிய நல்ல மனிதர் சசி" என்றார்.
`மாமன்னன்' படத்தில் வரும் ராசக்கண்ணு பாடல் உருவான விதம் பற்றி யுகபாரதி பேசுகையில், " யாருமே எந்த மேடையிலும் சொல்லாத விஷயம் இது. இந்தப் பாடல் எழுதி மெட்டமைக்கப்பட்ட பாட்டு. `எங்க இந்த பாட்டு இடம்பெறணும்'னு நினைச்சோமோ அங்க இந்த பாட்டு இடம்பெறல. ரொம்ப பின்னாடி இடம் பெற்றது. `மாமன்னன்' படத்துல கிணறு சீன் முடிஞ்சு மலை மேல நிக்கும் போது இந்த பாட்டு வரணும்னு நினைச்சோம்.

இந்தப் பாடல் ஒரு நாட்டுப்புற பாட்ட தழுவி எழுதுனது தான். இந்தப் பாடலை யார பாடவைக்கலாம்னு யோசிச்சப்போ எல்லாரும் வடிவேலு சாரைப் பாட வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டு வடிவேலு சார்கிட்ட கேட்டோம். முதல்ல அவர் `வரலை'னு சொல்லிட்டாரு. பாட்டு வரி, மெட்டு எல்லாம் அனுப்பினோம்.
`இது ரொம்ப கஷ்டமாக இருக்கு நான் பாடல'னு சொல்லிட்டாரு. அப்பறம் ஒருவழியா அவரைக் கூப்பிட்டு வந்து பாட வச்சோம். அவரால பாடவே முடியல வியர்த்துக் கொட்டுது அவருக்கு. `நான் வந்தால் பாட முடியாதுன்னுதான் நான் நாகரீகமா பாடமுடியாதுன்னு சொன்னேன். என்னமோ தெரில இந்த பாட்ட என்னால பாட முடியல'னு வடிவேலு சார் சொல்லிட்டாரு. இசைப்புயல் ரஹ்மான் சாரோட இசை புலமையைப் பத்தி சொல்றதுக்காக நான் இதைக் குறிப்பிடுறேன்.

மைக்கை கொண்டு வந்து ரஹ்மான் சார் பக்கத்துல வைக்கச் சொன்னாரு. அப்படியே வடிவேலு சாருக்கு காபி கொடுக்கச் சொன்னாரு. வடிவேலு சார் காபி குடிச்சதும் `நீங்க நாகூர் அனிஃபா பாட்டெல்லாம் பாடுவீங்கள்ல அதைப் பாடுங்க'னு ரஹ்மான் சார் சொன்னாரு. வடிவேலு சார் காபி குடிச்சு ஒரு 10 நிமிசத்துல நாலு நாலு வரியாகப் பாடச் சொன்னாரு. அப்படியே வடிவேலு சாரும் பாடினாரு. `இவ்வளவு பாட்டு பாடுறீங்க இந்தப் பாட்ட பாடமாட்டீங்களா? இப்ப பாடுங்க'னு ரஹ்மான் சார் சொன்னாரு. அடுத்த 15 நிமிசத்துல மொத்தப் பாட்டையும் பாடி முடிச்சுட்டாரு வடிவேலு சார்." என்றார்.