‘அக்ரி ஸ்டேக்’ வலைதளப் பதிவு ஏப்.30 வரை நீட்டிப்பு
விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அ.பாண்டியன் கூறியதாவது:
விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்யும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், இந்த வலைதளப் பதிவை மேற்கொண்டால் மட்டுமே 20-ஆவது தவணைத் தொகையை பெற முடியும். விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள பொது ‘இ-சேவை’ மையங்களிலும் ‘அக்ரிஸ்டேக்’ வலைத் தளத்தில் பதிவு செய்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பெருத்தவரை மொத்தமுள்ள 1.54 லட்சம் விவசாயிகளில் இதுவரை 97ஆயிரம் போ் பதிவு செய்துள்ளனா். இந்த நிலையில், ‘அக்ரிஸ்டேக்’ வலைதளப் பதிவுக்கான கால அவகாசம், வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை எஞ்சிய 38 சதவீத விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் நில விவரங்களை, வேளாண்மைத் துறை அலுவலா்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்களிலோ பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.