அதிமுக : சட்டசபை கூட்டணி கணக்கை சொல்லும் மாநிலங்களவை `சீட்’ கணக்கு - தேமுதிக இனி?!
கடந்த 2019-ம் ஆண்டு ஜூலையில் தமிழ்நாட்டிலிருந்து 6 மாநிலங்களவை எம்.பி-க்கள் தேர்வாகினர். இதில் தி.மு.க-விலிருந்து வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம் அப்துல்லா, தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தற்போது பதவியில் உள்ளனர். இதேபோல் அ.தி.மு.க-விலிருந்து சந்திரசேகர், அ.தி.மு.க-வின் ஆதரவுடன் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வாகினர். இவர்களின் பதவிக்காலம் வரும் ஜூலையில் நிறைவடைகிறது.

மாநிலங்களவை அரசியல்
இதையடுத்து புதிய உறுப்பினரை தேர்வு செய்வதில் அ.தி.மு.க கூட்டணிக்குள் பெரும் சர்ச்சையை வெடித்திருக்கிறது. அ.தி.மு.க-வை பொறுத்தவரையில் சட்டமன்றத்தில் 66 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். இதில் நான்குபேர் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து விட்டதால் ஒரு சீட்டை மட்டுமே அ.தி.மு.க சிக்கல் இல்லாமல் நிரப்பிக்கொள்ள முடியும். மற்றொரு சீட்டுக்கு ஓ.பி.எஸ், பா.ம.க, பா.ஜ.க உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இவ்வாறு சிக்கல் இருக்கும் அந்த ஒரு சீட்டை ஆரம்பத்தில் தே.மு.தி.க-வுக்கு கொடுப்பதற்குத்தான் எடப்பாடி தரப்பு முடிவு செய்தது. அந்த சீட்டை பெற்று மகன் விஜய பிரபாகரன் அல்லது சகோதரர் சுதீஷ் ஆகிய இருவரில் ஒருவருக்கு கொடுக்க திட்டமும் வகுத்துவிட்டார், பிரேமலதா. இதற்காக அவர் பிற கட்சிகளிடம் உதவியையும் கேட்டு வந்தார்.
இதற்கிடையில்தான் அன்புமணிக்கு மீண்டும் எம்.பி சீட் பெறுவதற்கு பா.ஜ.க உதவி செய்யாததால், அ.தி.மு.க மூலமாக காய் நகர்த்த தொடங்கினார், ராமதாஸ். இதன் ஒருபகுதியாக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார், ஜி.கே.மணி.
அப்போது, 'அன்புமணிக்கு எம்.பி சீட்டுக்கு உதவி செய்தால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க-வுக்கு உதவுவோம்' என தெரிவித்திருக்கிறார். ஆரம்பத்தில் இதற்கு எடப்பாடி தரப்பு இதற்கு பிடி கொடுக்கவில்லை. அதற்குள் இந்த விவகாரம் பிரேமலதாவின் காதை எட்டியது. உடனே அவர், 'ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை சீட் எங்களுக்குக் கொடுப்பதாக அ.தி.மு.க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. யார் வேட்பாளர் என்பதை விரைவில் அறிவிப்போம்' எனப் பேட்டி கொடுத்தார்.

மாறிய அதிமுக ரூட்டு
மறுபக்கம் தொடர்ந்து எடப்பாடி தரப்புக்கு தைலாபுரம் தோட்டத்திலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. தேமுதிகவை விட பாமகவிடம் வாக்கு வாங்கி அதிகமாக இருக்கிறது. எனவே வரும் சட்டப்பேரவை தேர்தலில் நமக்கு உதவியாக இருக்கும். கூடவே பா.ம.கவிடம் 6 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்களை சேர்த்தால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 68 ஆகிவிடும். அப்போது இரண்டு மாநிலங்களவை இடங்களைப் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது.
எனவே அன்புமணிக்கு சீட் கொடுத்துவிடலாம் என எடப்பாடி தரப்பு முடிவு செய்ததாக தெரிகிறது. இதையடுத்துதான் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, "தே.மு.தி.க-வுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படும் என்று யார் சொன்னது.. எங்களது தேர்தல் உடன் படிக்கையை பார்த்தீர்களா.. யாராவது சொன்னார்கள் என்று கேட்காதீர்கள்" என கேட்டார்.
`மன வருத்தம் எதுவும் கிடையாது’
உடனே விஜகாந்த்தின் எக்ஸ் பக்கத்தில், "சத்தியமே வெல்லும் நாளை நமதே" என பதிவிடப்பட்டது. இதற்குள் சமூகவலைத்தளங்களில் தே.மு.தி.க நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இந்த சூழலில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, " தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் தாய்மொழியான தமிழ் கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். எல்லோரும் தமிழ் படிக்க வேண்டும். அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் விஜயகாந்த்தின் வார்த்தை. அதுதான் தே.மு.தி.க-வின் நிலைப்பாடு.
2026-ல் அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா என இப்போது ஜோசியம் சொல்ல முடியாது. இன்னும் ஒரு வருடம் பொறுத்திருங்கள். அந்த காலம் வரும்போது நிச்சயமாக அதற்கான அறிவிப்புகள் வரும். ராஜ்யசபா சீட் விஷயத்தில் அ.தி.மு.க-வுடன் எங்களுக்கு மன வருத்தம் எதுவும் கிடையாது" என்றார்.

ஆனால் உண்மையிலேயே பிரேமலதா மனவருத்தமாக இருக்கிறார் என்கிறார்கள் தேமுதிக நிர்வாகிகள் நிலர். எனவே அ.தி.மு.க, தே.மு.தி.க கூட்டணியில் விரிசல் ஏற்படக்கூடும் என்றும் பேசப்படுகிறது. எனவே தே.மு.தி.க-வின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்கிற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் அவர்களிடன்ம் பேசினோம்.
"கூட்டணி ஒப்பந்தத்தின் எம்.பி சீட் தருவதாக அ.தி.மு.க சொல்லியிருந்தால் பிரேமலதா உறுதியாக நின்றிப்பார். ஆனால் அப்படியேதும் இல்லை என்பதுதான் தற்போது அவர் எந்த மனவருத்தமும் இல்லை என சொல்வதும் மூலம் தெளிவாகிறது. மேலும் இதை காரணமாக வைத்து அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க வெளியில் செல்லாது.

தி.மு.க கூட்டணியில் இடம் இல்லை. பா.ஜ.கவே அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்வதற்குத்தான் விரும்புகிறது. மேலும் ஜூலையில் நடக்கும் வாக்கெடுப்பின் போது பா.ஜ.க உறுப்பினர்கள் எடப்பாடி தரப்புக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. அப்படி செய்தால் 2026-ல் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி உறுதியாகிவிடும். எனவே அன்புமணிக்கு சீட் கிடைப்பதற்கு வாய்ப்பும் இப்போதைக்கு குறைவுதான். அரசியல் முடிவுகள் இறுதி நேரத்தில் மாறுதலுக்குட்பட்டவை. எனவே என்ன நடக்கிறது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
