`தமிழைவிட சம்ஸ்கிருதம்தான் பழைமையானது; தோல்வி பயத்தில் திமுக...' - மக்களவையில் பாஜக எம்.பி பேச்சு
தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்ப்பதன் மூலம் தி.மு.க நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஜார்கண்ட் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருக்கிறார். இன்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் இந்தப் பிரச்னை குறித்துப் பேசிய அவர், ``அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் தி.மு.க மக்களின் உணர்ச்சிகளை தூண்டுகிறது. தமிழ் ஒரு பழைமையான மொழி, ஆனால் சம்ஸ்கிருதம் தமிழைவிட பழைமையானது.
தமிழ் பேசும், தெலுங்கு பேசும், கன்னடம் பேசும் பகுதி மட்டுமல்ல, நாடு முழுவதும் எந்தக் கோயிலுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் எல்லா இடங்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜை செய்யப்படுகிறது. தி.மு.க மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி நாட்டைப் பிரிக்க விரும்புகிறது. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கும் திமுக தமிழ், தெலுங்கு, மைதிலி, சந்தாலி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கும் எதிராகவே இருக்கிறது. நாட்டில் நல்லிணக்கத்தைக் குலைக்க முயற்சிக்கிறது. ஆங்கிலத்தை திணித்து தேர்தல்களில் வெற்றி பெற விரும்புகிறது" என்றார். பாஜக எம்.பி-யின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை தூண்டியிருக்கிறது.