அதிமுக விவகாரம் தேர்தல் ஆணையம் விசாரிப்பதில் மகிழ்ச்சி: கேபி முனுசாமி
கிருஷ்ணகிரி:அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரிப்பதில் மகிழ்ச்சியே என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் அதிமுகவின் உள் அமைப்பான ஜெயலலிதா பேரவையின் சார்பில், திண்ணைப் பிரச்சாரத்தை அதிமுக துணை பொதுச்செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினரான எம்.எல்.ஏ. கே.பி. முனுசாமி தொடக்கி வைத்து, செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
மிகப்பெரிய அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், ஏற்றத்தாழ்வுகளையும் சந்தித்தவர். ஜெயலலிதா, செங்கோட்டையனை மதிப்பும் மரியாதையுடன் நடத்தினார்.
அதே மதிப்புடன் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை அழைத்துச் செல்கிறார். செங்கோட்டையன் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி, அதிமுகவை காட்டிக் கொடுத்துவிட்டு எதிரணியில் சேர்ந்து, தற்போது அமைச்சராக இருக்கிறார்
இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் பேரணி ஏன்?- உயர் நீதிமன்றம் கண்டனம்!
அதேபோல் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் செங்கோட்டையன், அதிமுகவிற்கு உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எந்த நிபந்தனையும் இல்லாமல் இணையத் தயார் என ஓபிஎஸ் கூறிவிட்டு, அடுத்த கணம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்கிறார்.
ஓபிஎஸ் அதிமுகவை எதிர்த்து தேர்தல் களத்தில் நிற்கிறார், எதிரிகளுடன் சேர்ந்து எங்களை எதிர்க்கிறார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி அம்மாள் பெருந்தன்மையுடன் விலகிக்கொண்டார். தனக்கு உரிமை உள்ள தலைமைக் கழகத்தையே வழங்கிவிட்டுச் சென்றார்.
ஆனால், கட்சியில் அதிகாரத்தை அனுபவித்துவிட்டு வசதிகளை பெருக்கி கொண்ட சிலர், இந்தக் கட்சியை சிதைக்க நினைக்கிறார்கள்.
அதிமுக விவகாரம் குறித்து, தேர்தல் ஆணையம் விசாரிப்பது மகிழ்ச்சியே. எங்களிடம் அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர்.
தினகரன், ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர். தற்போது, தனிக் கட்சி நடத்தி வருகிறார். இவர், அதிமுக குறித்த கருத்து தெரிவிக்க என்ன உரிமை உள்ளது. எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்ட இரட்டை இலை சின்னத்தை முடக்க யாராலும் முடியாது. அதிமுகவில் துரோகிகள் இருப்பதாக செங்கோட்டையன் கூறியிருப்பதை அவரைதான் கேட்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.